Sunday 3 May 2015

நக்கீரனும் வைரமுத்துவும்- வேலிக்கு ஓணான் சாட்சி….!


ழுத்தாளர் மறைந்த ஜெயகாந்தனின் கடிதத்தை மோசடியாகத் தயாரித்து வார்த்தை வியாபாரி வைரமுத்து அம்பலப்பட்டு நாறிப்போன நிலையில் அவரைக் காப்பாற்ற களம் இறங்கியிருக்கிறது துருப்பிடித்த போர்வாள் நக்கீரன்.

இந்த இதழில் இரண்டு பக்க மேட்டர். இதுதான்.




இதைப்படித்தால் சில சந்தேகங்கள் எழுகின்றன.

நாம் தீபலட்சுமியிடம் நடந்தவைகளைக் கேட்டோம் என்று ஆரம்பித்து அவர் கருத்தை வெளியிட்டிருக்கிறது. இதில் சொல்லப்பட்டவை முழுக்க முழுக்க ஏற்கனவே அவர் முகநூலில் சொல்லியவை தான். புதிதாய் ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை. ஆனால் அவரிடம், இவர்கள் தனியாக கருத்துக் கேட்டது போல எழுதியிருக்கிறார்கள். இது மட்டுமல்ல காட்டமாக சொன்னார் என பக்கத்தில் அமர்ந்து கேட்டு எழுதியது போலவோ,தொலைபேசியில் பேசியது போலவோ காரம் தடவியிருக்கிறார்கள்.

தன்னிடமோ தனது குடும்பத்தினரிடமோ எவ்விதக் கருத்தும் கேட்கவில்லை என இதழ் வந்த அன்று மதியமே ஜெயகாந்தனின் மகள் நக்கீரனுக்கு முகநூலில் சூடு வைத்திருக்கிறார். 



அதானே பொய்க்கு அலங்காரப்பூச்சு செய்வதற்கு நக்கீரனுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும் ? கைவந்த கலை தானே அவர்களுக்கு.

அடுத்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான வைரமுத்துவின் பேட்டியை வெளியிட்டிருக்கிறார்கள். கவிஞர் ’உருக்கமாக’ பேசினாராம்,நக்கீரன் சென்டிமென்ட் தூவுகிறது. படிப்பவர்கள் மத்தியில் தவறு வைரமுத்துவிடம் இல்லை என உளவியல் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பது இதன் நோக்கம்.

வைரமுத்து தன் தரப்பு சாட்சியாக U.S.S.R. நடராஜன் என்பவரை முன்னிறுத்தி தப்பிக்கிறார். (யார்றா அது?) U.S.S.R.நடராஜன் என்பவரோ ஜெயகாந்தனின் பாராட்டுக் கடிதம் உண்மை என்று சூடம் அடித்துச் சத்தியம் செய்கிறார்,அது மட்டுமல்ல கடிதம் கிடைத்த உடன் தொலைபேசி மூலம் ஜெயகாந்தனுக்கு வைரமுத்து நன்றி சொன்னார் எனவும் சொல்கிறார்.
(ஆனால் கவிஞரின் கூட்டுக் களவாணியான ’குமுதம்’ இதழோ கடிதம் கிடைத்தவுடன் வைரமுத்து வீடு தேடிச்சென்று நன்றி சொன்னார் என ஏற்கெனவே எழுதியுள்ளது. எந்தக் கூட்டாளி சொல்வது உண்மை..?)

அத்துடன் இல்லாமல், U.S.S.R. நடராஜன், ஜெயகாந்தனின் இரண்டாம் மனைவி கவுசல்யாவுக்கு எல்லாம் தெரியும் என ஜெயகாந்தனின் வீட்டிலிருக்கும் முக்கிய உறவினை தனது தரப்பு ஆதாரமாய் முன் நிறுத்துகிறார். இது மிக முக்கியமான செய்தி.

றைந்த ஜெயகாந்தன் பாராட்டுக் கடிதத்தை மோசடியாக வைரமுத்து தயாரித்தார் என்னும் குற்றச்சாட்டை எழுப்பியவர் அவரது மகள் தீபலட்சுமி.

குற்றச்சாட்டுக்கு உள்ளான வைரமுத்துவோ தனது தரப்பு சாட்சியாக U.S.S.R.நடராஜன் என்பவரைக் கைகாட்டி தப்பிக்கிறார். U.S.S.R.நடராஜனோ, ஜெயகாந்தனின் இரண்டாம் மனைவி திருமதி கவுசல்யா அம்மையாருக்கு எல்லாம் தெரியும் எனச் சொல்வதோடு மட்டுமல்லாமல் குற்றச்சாட்டைக் கூறிய அவரது மகள் தீபலட்சுமி மாடியில் வசிப்பதால் அவருக்கு எதுவும் தெரியாது எனவும் பதில் குற்றம் சாட்டுகிறார்.

இந்நிலையில் ஒட்டுமொத்த பிரச்சினையும் ஜெயகாந்தன் மனைவி திருமதி.கவுசல்யா அவர்களின் பதிலில் தான் இருக்கிறது. அவர் பதில் தான் மோசடிக்கடிதமா என்னும் வினாவுக்கு உரிய விடையைத் தரும்.

அல்லது செத்துப்போன ஜெயகாந்தனின் கடிதத்தை மோசடியாகத் தயாரித்தது போல் உயிருடன் வீட்டில் அமைதியாய் இருக்கும் ஜெயகாந்தனின் மனைவியின் பெயரை வைத்து அடுத்த சுற்று ஏமாற்றுக்கு வைரமுத்து கோஷ்டி தயாராகி விட்டதா என்பது தெரியவரும்.ஆனால் நக்கீரனோ திருமதி.ஜெயகாந்தனின் கருத்து எதையும் வாங்கிப்பதிவு செய்யவில்லை. வைரமுத்துவுக்கு ஆதரவான கருத்துடன் மேட்டருக்கு  சுபம் போட்டு  விட்டது.

ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில், வழக்கிற்கு தொடர்பற்ற மூன்றாம் தரப்பான க. அன்பழகன் கருத்தை கேட்டுத்தான் நீதிபதி தீர்ப்பு சொல்ல வேண்டும் என பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளும் நக்கீரன் இங்கோ, வழக்குத் தொடர்ந்த, பாதிக்கப்பட்ட தரப்பு கருத்தையே கேட்காமல் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலத்தையே  தீர்ப்பாகச் சொல்லி விட்டது. 

இது பித்தலாட்டமன்றி வேறென்ன..? மாடியில் வசிக்கும் மகள் தீபலட்சுமியின் கருத்தை வாங்கியதாய்ச் சொல்லும் நக்கீரன் கீழ் வீட்டில் வசிக்கும் ஜெயகாந்தனின் மனைவி கருத்தை வாங்கத் துப்பில்லையா..? ஒருவேளை வாங்கினால் வைரமுத்துவின் அடுத்த மோசடிச்சுற்றும் அம்பலமாகி விடும் என்னும் பயமா தெரியவில்லை. இதுவே தனக்குப் பிடிக்காத நபர்கள் தொடர்புடைய விஷயமாய் இருந்தால் அதில் நக்கீரன் என்னவெல்லாம் செய்திருக்கும் ? சம்பந்தப்பட்ட நபர் கருத்து சொல்லாவிட்டாலும் தன் தரப்பை கிசுகிசு பாணியில் எழுதி விட்டு அவரது ’நட்பு’ வட்டாரங்கள் சொல்கின்றன என்றோ ’நம்பத்தகுந்த’ வட்டாரங்களில் இருந்து தகவல் எனவோ கூச்சமில்லாமல் எழுதுவது தானே நக்கீரன் பாணி.? இங்கோ உண்மையை கோணிப்பையில் போட்டு மூட முயற்சிக்கிறது.

மேலும் இதில் ’நமது நிருபர்’ என பைலைன் வேறு. உயிருக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய மிக முக்கியமான செய்திப்பதிவை எழுதியிருந்தாலோ அல்லது தரக்குறைவான செய்தியாக இருந்தாலோ ’நமது நிருபர்’ என்று பைலைன் போடுவது சரி. ஆனால் ஊரறிந்த பிரச்சனையில் கருத்துச் சொன்னவர்கள் எல்லாரும் முகம் காட்டியிருக்க நக்கீரனோ பதிவை எழுதியவருக்கு ’நமது நிருபர்’ என்று முக்காடு போட்டுள்ளது.

மோசடி செய்து அம்பலப்பட்ட வைரமுத்து,அவர் தரப்பு சாட்சி ஆகியோருடன் கைகோர்த்து அவர்கள் சொன்னதை எல்லாம் எந்த வரைமுறையும் இன்றி வெளியிட்டு ஜெயகாந்தன் குடும்பத்தினர் மீதே சந்தேகத்தை நக்கீரன் எற்படுத்தியுள்ளது. தங்களது திமுக குடும்பத்தின் மூத்த வணிக உடன்பிறப்பு வைரமுத்துவுக்கு எதிரான குற்றச்சாட்டு இனி நீர்த்துப்போகும் என்பது நக்கீரனின் மூட நம்பிக்கை போலும். 

வைரமுத்துவின் மோசடிக் கடிதம் அதனால் எழுந்த சர்ச்சை என எதையும் பேசாமல் ஒட்டுமொத்த பிரச்சனையையும் நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியில் இப்படி மொக்கையாக முடிக்கிறது நக்கீரன்.

  //இறந்த பிறகும் அச்சு வாகனத்தின் நாயகனாகவே இருக்கிறார் ஜெயகாந்தன்//

ஆனால் படித்துப் பார்த்தால்

எப்பொழுதும் பொய்மையின் புகலிடமாகவே இருக்கிறது நக்கீரன்

இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.

(இந்த இதழுக்குப் பின்  3 நக்கீரன் இதழ்கள் வெளிவந்த நிலையிலும் எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகளது மறுப்போ, திருமதி ஜெயகாந்தனின் பேட்டியோ இடம்பெறாத நிலையில் இந்த பதிவு வெளியிடப்படுகிறது.)


No comments: