Wednesday 26 February 2014

தி இந்து-செய்திகளைத் திரிப்பதில் தினமலரின் வாரிசு...!



கற்பனைக் கதையை எழுதிய கோவிந்தராஜ்.

the hindu


நாளிதழ் என்றால் முன்பெல்லாம் அன்றாட நாட்டு நடப்புகளும்,அரசியல் நிகழ்வுகளும் பெருமளவு இடம் பெற்றிருக்கும்.ஆனால் இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் செய்தித்தாளுக்குப் பதிலாக கருத்துத் தாளாக த்தான் வெளிவருகிறது. செய்திக்கட்டுரைகள் அத்துறையுடன் தொடர்பில்லாதவர்களால் அதிகம் எழுதப்படுகிறது என்றால், இன்னொரு புறம் உண்மையான நிகழ்வுகளை செய்தியாக்குவதற்குப் பதிலாக செய்தியாளர் அல்லது டெஸ்க்கில் இருப்பவர்களின் விருப்பத்தை செய்திகளுடன் திணித்து வெளியிடுவது தான் அதிகம் நடக்கிறது. 

இத்தகைய செய்தியாளர்கள் தங்கள் அரசியல் கொள்கைக்குப் பிடிக்காத ஒரு செய்திப்பதிவில், தங்கள் 'திறமை'யைக் காட்டுகின்றனர்.  செய்தியைப் பெயரளவுக்கு வெளியிட்டு அத்துடன் "பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தனர்", "கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசிக் கொண்டனர்", "கூறப்படுகிறது" , "நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று  ஏதாவது ஒரு வார்த்தைகளைப் போட்டுத் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதோடு மட்டுமல்லாமல் சொந்த அரிப்புக்களையும் வன்மத்தையும் தீர்த்துக் கொள்கின்றனர். சில நேரம் ஆட்சி அதிகாரத்தில் இருப்ப‌வர்களின் கூட்டுடனும் இது நடைபெறுகிறது. 

இவ்வாறு வெளிவரும் செய்திகள் எப்பொழுதும், எழுதும் பத்திரிகையாளரின் வேலைக்கு உலை வைப்பதாகவோ மற்றும் நிறுவன அரசியலுக்கோ,நிறுவனத்தின் வணிக ஆதாயங்களுக்கு எதிராகவோ,அதற்குப் பாதிப்பை உண்டாக்குவதாகவோ இருக்காது.மற்ற‌படி இந்தச் செய்திகளால் எவன் வீட்டில் எழவு விழுந்தாலும்,யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டாலும்,சமூகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இவர்களுக்கு எந்தக் கவலையோ அது குறித்த வருத்தமோ, ஊடக அறத்திற்கு எதிரானது என்ற‌ குற்ற உணர்ச்சியோ மயிரளவும் இல்லை. நிறுவனத்தின் ஆசி இதற்கு எப்பொழுதும் உண்டு.

தினமலர் தான் இந்தக் கேடுகெட்ட கலாச்சாரத்தின் முன்னோடி.முன்பு தினமலர் மட்டும் செய்து வந்த வேலையை இப்பொழுது விற்பனையிலும் உள்ள‌டக்கத்திலும் அதன் போட்டி நாளிதழான தி இந்துவும் செய்து வருகிறது.

நேற்று (25-02-2014)  தி இந்து தமிழ் நாளிதழ் சென்னை பதிப்பில் வெளியான செய்தி ஒன்றைப் பார்ப்போம்.

ஈரோட்டில் நடைபெற்ற மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கு குறித்த செய்திப்பதிவு.

 செய்தி அக்கறை உடைய உண்மையான செய்தியாள‌ன் என்றால் மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கில் யார் கலந்து கொண்டார்கள், யார் என்ன பேசினார்கள்,யார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்கள்,எத்தனை பேர் குழுமியிருந்தனர்,மற்ற கூட்டங்களில் பேசப்படாத செய்தி எதுவும் பேசினார்களா..? என்பன போன்ற செய்திகளை முதன்மையாக உள்ள‌டக்கிய செய்திப்பதிவாக இருந்திருக்கும்.

ஆனால் அக்கப்போரும் தனக்கு எதிர் அரசியல் உள்ள‌வர்களை வன்மத்துடன் பழி தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பதிவு செய்த செய்தியாளர் அல்லது டெஸ்க்கில் இருக்கும் உதவி ஆசிரியர் என்பதால் நடைபெற்ற நிகழ்வு எப்படிப் பதிவு ஆகியிருக்கிற‌து பாருங்கள்.




கருத்தரங்கில் பங்கேற்ற ராஜீவ் கொலைவழக்கின் கைதியான பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் இந்த வழக்கில் உழைத்தவர்களில் ஒருவரான வைகோவுக்கு நன்றி தெரிவிக்கவில்லையாம்.இந்த ஒற்றை நூலை வைத்துக் கொண்டு ஒரு கட்டுரை ஆகத் தொடுத்து தி ஹிந்து தமிழ் நாளிதழ் வெளியிட்டுள்ள‌து.

அற்புதம் அம்மாள் நேரமின்மை காரணமாகவோ,அல்ல‌து எல்லாக் கூட்டத்திலும் எல்லோர் பெயரையும் நன்றி சொல்லத் தேவை இல்லை என்று கருதியோ அல்லது யார் பெயரும் விடுபட்டால் அது பிழையாகி விடும் என்று கருதியோ யார் பெயரையும் சொல்லாமல் தவிர்த்திருக்கலாம். அதனால் இந்த போராட்டத்தின், 'எதிர்பாராத‌' புதிய வரவான தமிழக முதல்வர் பெயரை மட்டும் சொல்லியிருக்கலாம்.

கண்டிப்பாய் உள் நோக்கத்துடன் வைகோ அவர்களின் பெயரைத் தவிர்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அதே 'தி இந்து ' நாளிதழில் சமஸ் என்னும் பத்திரிகையாளருக்கு அதே நாளில் அளித்த பேட்டியில் வைகோ உட்பட அனைவரின் பெயரையும் சொல்லியிருக்கிறார்.

ஆக உள் நோக்கம் எதுவும் இல்லை என்பது புலனாகிறது.

ஆனால் செய்திப்பதிவை  எழுதியவருக்கோ,டெஸ்க்கில் இருப்ப‌வருக்கோ,அல்லது வெளியிட்ட நிறுவனத்துக்கோ மூவர் விடுதலையில் உண்மையான அக்கறை இல்லை என்பதும் எதையாவது எழுதி இந்த விஷயத்தில் பிரச்சனைகளை உருவாக்குவதும் தானே நோக்கம்.
அதனால் தான் ஆளுங்கட்சிக்கு ஆதரவுப் பிரச்சாரம்-ம.தி.மு.க.வினர் அதிர்ச்சி என செய்திகளை புதிதாய் உருவாக்குகிறது.


அற்புதம் அம்மாள்


கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் என்றால் செய்தியாளர் என்ன செய்திருக்க வேண்டும்.?

கூட்டத்தில் கலந்து கொண்ட ம.தி.மு.க. நாடாளுமன்ற‌ உறுப்பினர் கணேச மூர்த்தியிடம் கருத்து வாங்கி வெளியிட்டிருக்க வேண்டும்.அல்லது கொளத்தூர் மணியிடம் கருத்து வாங்கி வெளியிட்டிருக்க வேண்டும்.எதுவும் இல்லை.இல்லை தொடர்புடைய வைகோ விடமாவது கருத்துக் கேட்டிருக்க வேண்டும். ( ஹிந்து பத்திரிகையாளர் போன் என்றால் அண்ணாச்சி இரவு 12 மணியானாலும் போன் எடுத்து பேசுவார்.) அற்புதம் அம்மாள் தனது பெச்சில் தேர்தல் குறித்தோ,அதில் ஆளுங்கட்சியை ஆதரிப்பது குறித்தோ எந்த வார்த்தையும் பேசவில்லை. 

ஆனால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம்,ஆதரவாளர்கள் அதிர்ச்சி என்று செய்தியை அலுவலகத்தில் அமர்ந்து திட்டமிட்டு உருவாக்கி வெளியிடுகிற‌து.

மூவர் தொடர்புடைய விஷயத்தில் ஆரம்பம் முதலே வன்மத்துடன் அணுகிய நாளிதழ் தி ஹிந்து நாளிதழ். தொடங்கிய முதல் நாளே வேலூர் சிறையில் இருக்கும் மூவரின் மீது தனது வன்மத்தை முதல் பக்கத்தில் காட்டியது 

ராஜீவ் மரண வழக்கில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படுபவர் விடுதலை குறித்த பிரச்சனையில் மட்டுமல்ல, பல பிரச்சனைகளில் 'The Hindu' ஆங்கில நாளிதழ் நேரடியாக எதிர்க்கும். தமிழ் ஹிந்து நாளிதழோ ஆதரிப்பது போல பல கட்டுரைகளை வெளியிட்டு போக்கு காட்டி விட்டுத் தனது மறைமுக எதிர்ப்பை சரியாகச் செய்யும். 

(ஆனால் முற்போக்காளர்கள் பலருக்கு அங்கு பத்தி எழுத வாய்ப்பு கொடுக்கப் படுவதால் யாரும் இது குறித்து மூச்சு விடுவதில்லை.தனக்கு அங்கு இனி இடம் இல்லை என்று ஒரு நாள் உறுதியான அன்று பாப்பான் பத்திரிகை என்று திட்டுவார்கள் என கண்டிப்பாய் நம்பலாம்.)


ரு செய்தியைத் தன‌து விருப்பம் மற்றும் அரசியலுக்காய் தி இந்து  திரித்தும் இட்டுக்கட்டி புதிதாய் உருவாக்கியும் வெளியிட்டுள்ளது. இனி இந்த இட்டுக் கட்டிய செய்தியால் என்ன நடக்கும்.?

உண்மையாகவோ அல்லது வேறு வழியின்றியோ அல்லது சுயநல அரசியலுக்காகவோ ஏதோ ஒரு காரண‌த்துக்காய் இதுவரை ஒன்றாய் இந்த பிரச்சனையில் பணிபுரிந்த பல்வேறு கட்சியினர்,மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் மத்தியில் இது ஒரு தேவையற்ற விவாதப் பொருளாகவும்,நோக்கத்தை  திசை திருப்புவதாகவும்  உருவாகும். இதுவரை மூவர் விடுதலை விஷயத்தில் பலலைக் கடித்துக் கொண்டு வேறு வழியின்றி அமைதியாய் இருந்த தி.மு.க.வினர் இந்தச் செய்திக்குப் பின்,உடனே களத்தில் இறங்கி வாய்ப்பைத் தவற விடக்கூடாது என்று அற்புதம் அம்மாளை விமர்சிக்க‌த் தொடங்கி விட்டன‌ர்.  

இன்னொரு பக்க‌ம் இது எந்த எதிர் விளைவுகளை உருவாக்கும் எனப் பார்த்தால்,

அற்புதம் அம்மாளுக்கு ஆளுங்கட்சியை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் எண்ணம் உண்மையில் இல்லாமல் இருந்தால் இச்செய்தி அவருக்கு இக்கட்டைத் தான் உருவாக்கும்.

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் குறித்த காலமே இருக்கிற‌து.அதற்குள் ஏதாவது ஒரு பத்திரிகையாளன் பரபரப்புக்காகவோ,அல்லது உள் நோக்கத்துடனோ,உண்மையாகவோ அற்புதம் அம்மாளிடம், "நீங்கள் ஆளுங்கட்சியை ஆதரித்துப் பிரச்சாரம் எப்பொழுது தொடங்குகின்றீர்கள்?"  என்று கேள்வியை எழுப்பும் பொழுது அற்புதம் அம்மாள், எனக்கு அந்த எண்ணம் இல்லை என்று தனது  பதிலாகச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அப்பொழுது இதே தி  ந்து உட்பட அனைவரும் "அற்புதம் அம்மாள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாய் பிரச்சாரம் செய்ய திடீர் மறுப்பு. ஜெயலலிதா கோபம்.மூவர் விடுதலையில் சிக்கல்..!  பின்னணி என்ன..? "

என்று தங்களுக்குத் தோன்றியதை எல்லாம் எழுதி  பகக்ங்களை நிரப்பி செய்தியைத் திட்டமிட்டு  உருவாக்குவர். அவர்களின் குப்பையை விற்பதற்குத் தான் இது உதவும்.

அனைத்திலும் அரசியல் என்றான இந்தக் கால கட்டத்தில் அப்பொழுது  அது மூவர் விடுதலையில் உண்மையில் சிக்கலைத் தான் உருவாக்கும்.

விடுதலை தடுத்து நிறுத்தப்பட்டாலும் சரி,எழுவர் விடுதலை நோக்கிய பயண‌த்தில் சிறு தொய்வை ஏற்படுத்தினாலும் , இதில் எது நடந்தாலும் சரி, அது இச்செய்தியை எழுதிய நிருபரின் அல்லது உருவாக்கிய நிறுவனத்தின் வெற்றி தான்.எப்படியோ அந்தக் குடும்பம் நாசமானாச் சரி தான் என்னும் வடிவேலுவின் நகைச்சுவைக்கு ஒப்பான அவலச்சுவை இது.

ஆக மொத்தத்தில் நிறுவனத்தின் உள்ளார்ந்த‌ விருப்பம் நிறைவேறுகிறதுசெய்தியாளரின் சில்லரைப்புத்தி என்று இதனை குறுக்கிப் பார்த்து ஒதுக்கி விட முடியாது.

சில மாதங்களுக்கு முன் காஞ்சி சங்கரராமன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சங்கர மட சுப்ரமணியை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்ப‌ட்டது. அந் நிகழ்வை தி ந்து செய்தியைப் பதிவு செய்ததுடன் நிறுத்திக் கொண்டது.

தீர்ப்புக்குப் பின்  நீதிமன்ற‌ வளாகத்தில் குழுமியிருந்த சங்கரமட பக்தர்கள் ஜெயலலிதாவை விமர்சித்தனர் என்றோ,கூடியிருந்த மாமிகள் ஜெயலலிதாவுக்கு சாபம் விட்டனர் என்றோ, கைது செய்த ஜெயலலிதா அரசுக்கு எதிராக சங்கராச்சாரி தேர்தல் பிரச்சாரம் செய்யத் திட்டம் என்றோ நினைத்ததை எழுதாமல் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதோடு 'அடக்கத்துடனும் பொறுப்புடனும்' நடந்து கொண்டது.

அப்படி எழுதுவது தங்கள் தலையில் தானே மண் அள்ளிப் போடுவதற்குச் சமம் என்பது முதலாளியில் இருந்து வேலை செய்பவர்கள் வரை அனைவருக்கும் தெரியும்.

இது தான் இந்து, தினமலர் வகையறாக்களின் இதழியல் 'தர்மம்'...!


குறிப்பு-இந்தக் கதையை எழுதிய கோவிந்தராஜ் இதற்கு முன் தினமலரில் வேலை பார்த்தவர்.அதன் பின் இப்பொழுது  தி இந்து நாளிதழின் ஈரோடு நிருபராய்ப் பணிபுரிகிறார்.இந்தப்பணிக்கு பலர் நேர்காணலுக்கு வந்த பொழுதும் நம்மவா என்னும் அடிப்படையில் இவருக்கு பணிபுரிய வாய்ப்பளிக்கபப்ட்டுள்ள‌து.தின்மலரின் உதிரித்தனம் இங்கும் கனகச்சிதமாய்ப் பொருந்துகிறது.

இவரது முகநூல் பக்கம் இது தான்.



Thursday 20 February 2014

நக்கீரன்-தி.மு.க. கூட்டணியின் ஆறாவது விரல்....!






இது நக்கீரனில் நேற்று (பிப்ரவரி 19-24) வெளிவந்த ஒரு செய்திப்பதிவு.இதில் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் குறித்து வினவு இணைய தளத்தில் 15 நாட்களுக்கு முன்பே ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது.அந்தப் பதிவில் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் என்று தெளிவாக கூறியுள்ளது.ஆனால் நக்கீரனோ தனி நபர்கள் இதனைச் செய்துள்ளது போல அர்த்தம் வரும் வண்ணம் இதனை வெளியிட்டுள்ள‌து.

ஒருவேளை நக்கீரனின் புலனாய்ய்ய்ய்ய்ய்வில் இந்த அநாகரிக செயலுக்கும் த.மு.மு.க. என்னும் இஸ்லாமிய அமைப்புக்கும் தொடர்பில்லை என அறிய வந்திருக்கலாம் என நாம் ஒரு வாதத்திற்காய் வைத்துக் கொண்டாலும் அது பொய் மற்றும் இருட்டடிப்பு என பதிவின் கடைசிக்கு முந்தைய பத்தி மூலம் நாம் அறியலாம்.

//நடந்த எல்லாவற்றையும் தலைமைக்குச் சொல்லி விட்டோம்.அதனால் நாங்கள் எதையும் சொல்ல இயலாது என நழுவி விட்டார் மழுப்பலாய்.// 

இதன் மூலம் பேட்டி கொடுத்த மகராசன் தான் தனிநபர் அல்ல.தனக்குப் பின் ஒரு அமைப்பு இருகிறது என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

ஆனால் நக்கீரனோ த.மு.முக.அமைப்பின் பெயரைச் சொல்லாமல் வேண்டுமென்றே தணிக்கை செய்து விட்டது.
ஒரு வேளை நக்கீரன் 'திராவிடப் போர்வாள்' என்பதால் 'தோழமை மற்றும் நல்லிணக்கம்' அடிப்படையில் சிறுபான்மை அமைப்பின் பெயரைச் சொல்லாமல் விட்டிருக்கலாம் என சிலர் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுச் சிந்திக்கலாம்.

அப்படி எந்த வெங்காயமும் இல்லை என்பது நக்கீரனைத் தொடர்ந்து படிப்பவர்களுக்குத் தெரியும்.சில காலங்களுக்கு முன் சேலம்  பா.ஜ.க.வைச் சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட பொழுது நக்கீரன் இந்துத்துவ‌ தீவிரவாதியைப் போல் மிக கடுமையான கட்டுக்கதைகளுடன் இஸ்லாமிய வெறுப்பு நஞ்சினைத் தொடர்ந்து சில வாரங்கள் கக்கியது.

பிறகு ஏன் ஒரு இயக்கம் தொடர்புடைய அடிப்படைவாத நிகழ்வை தனிநபர்களின் பிரச்சனையாக மாற்ற வேண்டும்..?

இஸ்லாமிய பாசம் என்று எதுவும் இல்லை.வேறென்ன ..? நம்ம மனித நேய மகக்ள் கட்சி இப்பொழுது திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டதல்லவா..?நக்கீரனும் அந்தக் கூட்டணியில் இருப்பதால் சக கூட்டாளியை விமர்சித்தால் நல்லாயிருக்காது என்பதால் தான் வேறொன்றுமில்லை.

(பெரம்பலூரில் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வந்த பொழுது,கேரள சட்டசபை வரை அக்குற்றச்சாட்டு எதிரொலித்த பொழுதும் நக்கீரன் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணைக்  கேவலப்படுத்தி செய்தி வெளியிட்டதை நினைவில் கொள்க.)

இதே நேரம் அதிமுக காரன் இப்படி ஒரு சம்பவத்தை அதிமுக காரன் அந்த ரேஞ்சுக்கு கூட போக வேண்டாம்.செ.கு.தமிழரசனின் அடிப்பொடி யாராவது செய்திருந்தால் கூட நக்கீரனின் நெற்றிக்கண் எரித்திருக்கும்.இப்பொழுதோ குருடாகி விட்டது.

இந்த லட்சணத்தில் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே ன்னு டயலாக் வேற...

Sunday 16 February 2014

ஜூனியர் விகடன்-கோயபல்சின் நவீன வடிவம்...!


கோயபல்ஸ்

கோயபல்ஸ் செத்துப் போனான் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் இன்றும் நவீன வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது மறுக்கவோ மறைக்கவோ இயலாத நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஹிட்லரின் வடிவில் ராஜபக்சேவும் மோடியும் இருக்கும் பொழுது, ஹிட்லரின் கொள்கைப்பரப்புச் செயலாளராய் இருந்த கோயபல்சின் வடிவில் ஒரு ஜந்து இருக்காதா என்ன..?

இருக்கிற‌து.அது தான் ஜூனியர் விகடன்.

புலனாய்வு இதழ்கள் என்று சொல்லிக் கொண்டு உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவும், நிறுவனத்தின் அல்லது தங்கள் சுயலாபத்திற்காகவும் எழுதுவது தான் இங்கு வாராந்திர புலனாய்வு பத்திரிகை உலகில் எப்பொழுதும் நடக்கிறது.

ஆட்சியர்கள் செய்யும் தவறுகளையோ ஊழல்களையோ,அரசியல் தரகுகளையோ இவர்கள் ஒருபொழுதும் அம்பலப்படுத்தியது கிடையாது. அதை விடுத்து இவர்கள் எழுதுவதெல்லாம் பெரும்பாலும் கிசுகிசுக்கள்.அதுவும் பெரும்பாலும் பலித்ததும் கிடையாது.

இவர்கள் சொல்லாத சம்பவங்கள்  நடந்தது என்றால் அதற்காக இவர்கள் வருத்தப்படுவதும் கிடையாது, சொன்ன‌தற்கு எதிர்மாறாய் நடந்து விட்டால் அது குறித்து அசிங்கப்ப‌டுவதும் கிடையாது. அதே சமயம் அத்தி பூத்தாற் போல், காக்கா உட்காரப் பனம்பழம் விழுவது போல ஏதாவது நடந்து விட்டால் அதனை ஊரறிய வெளிச்சம் போட்டுக் காட்டித் தங்கள் திறமையைத் தாங்களே பாராட்டிக் கொள்ளக் கூச்சப்படுவதும் கிடையாது.

ஜூனியர் விகடனின் புரட்டு கொஞ்சம் வார்த்தை ஜாலங்களோடு வரும்.மற்றவர்கள் எளிதில் அம்பலப்படும்படி வருவார்கள்.மற்ற‌படி ஜூனியர் விகடன்,நக்கீரன்,குமுதம் ரிப்போர்ட்டர்,தமிழக அரசியல் அனைவரும் ஒன்று தான்.

ஆனால் சமீப காலமாய் ஜூனியர் விகடனின் பொய்யும் புரட்டும் எல்லைமீறி கோயபல்சோடு போட்டி போடும் அளவுக்கு இருக்கிறது. நடைபெற  இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.கவுடன் ஒவ்வொரு கட்சிகளையும் அணி சேர்ப்பதற்கும்,அவர்களுக்குள் சீட்டைப் பிரிப்பதற்கும்,அவர்களுடன் அணி சேருபவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று பிம்பத்தைக் கட்டி எழுப்புவதற்கும்,அதற்கு ஒத்துப் போகாதவர்களை இழிப்பதற்கும் பழிப்பதற்கும்,ஆதரிப்பவர்களை பக்கம் பக்கமாய் உயர்த்தி எழுதுவதற்கும் இவர்கள் செய்யும் வேலையானது , இதே வேலையைச் செய்யும் புரோக்கர் மணியனின் வேலையை விட எந்த விதத்திலும் குறைந்ததல்ல.பா.ஜ.க.கூட்டணிக் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மட்டும் தான் இன்னும் விகடன் அலுவலகத்தில் நடக்க வில்லை.மற்ற‌ படி எல்லா வேலைகளையும் ஜூனியர் விகடன் செய்தாகி விட்டது.

ஒவ்வொரு இதழையும் படித்தால் இவர்கள் சீனிவாசனிடம் சம்பளம் வாங்குகிறார்களா இல்லை மோடியிடம் சம்பளம் வாங்குகிறார்களா என்ற அளவுக்கு ஆத்திரம் வருகிறது.

கடந்த 2 மாதத்தில் விஜயகாந்தின் தே.மு.தி.கழகத்தை பா.ஜ.க.கூட்டணியில் இணைப்பது தொடர்பாக‌ ஜூனியர் விகடன் இதழில் வெளியிடப்பட்ட செய்திகளை மட்டும் கீழே தந்துள்ளோம்.இதில் சில விடுப‌ட்டுப் போயிருக்கலாம்.மேலும் அதற்கு முந்தைய இதழ்களில் வெளியானவற்றை எழுதிப் பிரசுரிக்க‌ எமக்கும், படிக்க உங்களுக்கும் நேரம் இல்லை.

இந்த இரண்டு மாத இதழ்களிலேயே விஜயகாந்தை கூட்டணிக்குத் தள்ளிக் கொண்டு வருவதற்காக எத்தனை எத்தனை உருவாக்கப்பட்ட செய்திகள். எத்தனை இட்டுக்கட்டல்கள், எத்தனை பிளாக்மெயில்கள், எத்தனை கெஞ்சல்கள். உருவாக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் என பல பக்கங்களுக்கு கழுகார் குரல்களாக,மணியன் பேட்டியாக,பெட்டிச் செய்திகளாக வெளிவந்துள்ளன.

பொய்யையும் புரட்டையும் உள் நோக்கத்துடன் எழுதினால் காசு கொடுத்து வாங்கிப் படிக்க முட்டாள் வாசகன் இருக்கிறான்,அவன் காசில் மஞ்சள் பிழைப்பை நடத்தலாம் என்ற நம்பிக்கையிலும், தவறான செய்தி வெளியிட்டதனால் இதுவரை எந்த கேடுகெட்ட பத்திரிகை அலுவலகத்திற்கும் வந்து வாசகன் கேள்வி கேட்ட‌தில்லை என்ற அசட்டுத் தைரியத்திலும்  உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு எழுதப்பட்டவை தான் இவை.

வேறு வழியில்லை.கொஞ்சம் கனத்த மனத்துடன் திரும்ப ஒரு முறை பார்த்து விடுங்கள்.





//'பி.ஜே.பி. என்ன நினைக்கிறதாம்?''

''மற்ற கட்சிகளைவிட ஒன்றிரண்டு சீட்கள் தே.மு.தி.க-வுக்கு கொடுக்கலாம் என்பதே பி.ஜே.பி-யின் திட்டமாம். அவர்கள் இந்தக் கட்சிகளை தங்கள் அணிக்கு முதலில் கொண்டுவந்துவிட்டு, அப்புறமாக மற்றதைப் பேசலாம் என்று பார்க்கிறார்கள். விஜயகாந்த் காலதாமதம் செய்வதாக அவர்களுக்கு வருத்தம் இருக்கிறது.''

''தன்னை வந்து பி.ஜே.பி. பிரதிநிதிகள் சந்திக்கவில்லை என்று விஜயகாந்த் சொல்வதாக சொல்கிறீரே?''

''பி.ஜே.பி., விஜயகாந்த்தை கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம் என்றே பார்க்கிறது. ஒருவிதத்தில் பார்த்தால் இது கண்ணாமூச்சி ஆட்டம்தான். 'விஜயகாந்த் டெல்லி வந்து ராஜ்நாத் சிங்கைப் பார்க்க வேண்டும்’ என்று அந்தக் கட்சி நினைக்கிறது. ஆனால், தன்னை வந்து பி.ஜே.பி-யினர் பார்க்கட்டும் என்று விஜயகாந்த் நினைக்கிறார். இப்படித்தான் ம.தி.மு.க. விஷயத்திலும் நடந்தது. வைகோவை டெல்லி வந்து ராஜ்நாத் சிங்கை சந்திக்கச் சொன்னார்கள் பி.ஜே.பி-யினர். 'உங்கள் கட்சியின் முக்கியப் பிரமுகர் என்னை வந்து சந்தியுங்கள். அவரிடம் சில விஷயங்களைப் பேசி தெளிவுபடுத்திவிட்டு அப்புறமாக டெல்லி வருவேன்’ என்றாராம் வைகோ. பி.ஜே.பி-யின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர்ராவ், மோகன்ராஜலு ஆகிய இருவரும் வைகோவை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்தார்கள். அதன் பிறகுதான் வைகோ டெல்லி போனார். ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். அந்த அடிப்படையில் விரைவில், விஜயகாந்த்தை முரளிதர்ராவ் சந்திப்பார். ஜனவரி, பிப்ரவரி என்று விஜயகாந்த் இழுப்பதுதான் அவர்களுக்கு பிடிக்கவில்லையாம்!''//

ஜனவரி 1-1-2014 தேதியிட்ட இதழ்

 
//பி.ஜே.பி. கூட்டணி இப்போது​தான் ஓரளவு வடிவம் கொடுக்க ஆரம்பித்​துள்ளது!'' என்று காகிதங்களைப் பிரித்தபடி பேச ஆரம்பித்தார் கழுகார்.

''பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் இணையும் என்று ஆரம்பத்தில் இருந்து நான் சொல்லி வந்தேன். இதற்காக ஆரம்ப கட்ட வேலைகளை தமிழருவி மணியன் பார்த்தார். மூன்று கட்சித் தலைவர்களையும் அவர் சந்தித்து தனித்தனியாக ஒப்புதல் வாங்கினார். வைகோவை  பலமுறை பார்த்தார். விஜயகாந்தை இரண்டு முறையும் ராமதாஸை இரண்டு முறையும் சந்தித்தார். இதன் அடுத்த கட்டமாக தமிழக பி.ஜே.பி. பொறுப்பாளர் முரளிதர்ராவ், தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜலு ஆகியோர் வைகோவையும் ராமதாஸையும் சந்தித்தனர். மூன்றாவது கட்டமாக டெல்லி சென்று ராஜ்நாத் சிங்கை வைகோவும் அன்புமணி ராமதாஸும் தனித்தனியாக சந்தித்தார்கள்...''

''தங்களை பி.ஜே.பி. பிரதிநிதிகள் யாரும் வந்து இதுவரை சந்திக்கவில்லை என்று கடந்த வாரத்தில் சொல்லியிருந்தீரே?''

''அதைத்தான் சொல்ல வருகிறேன். அவசரம் வேண்டாம்!

இப்படி ம.தி.மு.க-வும் பா.ம.க-வும், கூட்டணிக்குள் வருவதற்கு மனதளவில் தயார் ஆன நிலையில் விஜயகாந்த் பக்கமாக தனது பார்வையை பி.ஜே.பி. திருப்பியது. விஜயகாந்தை சந்திக்க முரளிதர்ராவ் குரூப் முயற்சிகளை மேற்கொண்டது. 'இதற்குத்தானே காத்திருந்தோம்’ என்பது மாதிரி விஜயகாந்த் வீட்டில் இருந்து பச்சைக்கொடி காட்ட... கடந்த வெள்ளிக்கிழமை மாலையில், அந்த சந்திப்பும் நடந்துவிட்டது!''

''அப்படியா?''

''ஆமாம்! ​விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் அந்த தரப்பில் இருந்துள்ளனர். முரளிதர்ராவ் தன்னுடைய குழுவுடன் சென்றுள்ளார். 'இரண்டு தரப்பும் மனப்பூர்வமாகப் பேசினார்கள். இந்த அணியில் இணைவது சம்பந்தமாக விஜயகாந்துக்கு எந்த மனமாறுபாடும் இல்லை. அவர் சகஜமாகத்தான் பேசினார். தான் கேட்கும் தொகுதிகள் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதனை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லிவிட்டார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்​தஸ்து தே.மு.தி.க-வுக்கு இருப்பதால், கூட்டணியிலும் கூடுதலான இடங்களை எங்களுக்குத் தர வேண்டும் என்று கேட்கிறார். இன்னும் பல கட்சிகள் வர இருப்பதால் அதனையும் அனுசரித்து உங்களுக்கான இடங்கள் தரப்படும் என்று பி.ஜே.பி-யினர் சொன்னார்கள். இது மோடியை பிரதமர் ஆக்கும் கூட்டணி; அதனால் நமக்குள் எந்த பேதமும் ஏற்படக் கூடாது என்று பி.ஜே.பி. தரப்பு கூறியது. டெல்லிக்கு வந்து ராஜ்நாத் சிங்கை விஜயகாந்த் சந்திக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. தொகுதிகளின் எண்ணிக்கை, என்னென்ன தொகுதிகள் என்று ஓரளவு முடிவான பிறகு சந்திப்பதே சரியானது என்று விஜயகாந்த் சொல்லிவிட்டார். எனவே தொகுதிகளைப் பிரிக்கும் காரியங்கள் மும்முரமாகத் தொடங்கிவிட்டன’ என்று சொல்கிறார்கள் இரண்டு தரப்பையும் அறிந்தவர்கள்!''

''அந்தளவுக்கு முன்னேறிவிட்டதா பேச்சுவார்த்தை?''

''ஆமாம்! இதே சந்தேகத்தை முதல் தடவை தன்னைச் சந்திக்க வந்தபோதே தமிழருவி மணியனிடம் விஜயகாந்த் கேட்டுவிட்டார். 'நாங்கள் கூட்டணிக்குள் வருவதை வைகோ விரும்புகிறாரா?’ என்று கேட்டார். 'அவரிடமும் சம்மதம் வாங்கிவிட்டுத்தான் உங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வருகிறேன்’ என்று மணியன் சொன்னார். 'வைகோ என்னை விமர்சித்து இதுவரை பேசியதே இல்லை’ என்று அப்போது சொன்ன விஜயகாந்த், 'ஆனாலும், அனைவரையும்விட எங்களுக்குக் கூடுதல் தொகுதிகள் தேவை’ என்றார். 'நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பதால், அனைத்துக் கட்சிகளையும்விட ஒரு தொகுதியாவது உங்களுக்குக் கூடுதலாக வாங்கித் தருவது என்னுடைய பொறுப்பு’ என்று மணியன் சொன்னார். அந்த அடிப்படையில் மணியன் ஒரு ஃபார்முலாவை பி.ஜே.பி. தரப்புக்குச் சொன்னார். தே.மு.தி.க-வுக்கு 11 இடங்கள், பி.ஜே.பி. ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா ஒன்பது இடங்கள் என்று தமிழருவி சொல்லியிருக்கிறார். //

( 8 சதவிகிதம் ஓட்டு வைத்திருக்கும் தே.மு.தி.க.வுக்கு 11 இடமாம்.2 சதவிகித ஓட்டு வைத்திருக்கும் வைகோ கட்சிக்கு 9 இடமாம்.என்ன கொடுமை திருமா இது..? )

//தே.மு.தி.க. விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் தயாரித்துவிட்டதாம். மத்திய சென்னை, திருநெல்வேலி, மதுரை, தேனி, சிவகங்கை, நாகப்பட்டினம், சிதம்பரம், கடலூர், கரூர், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளை அவர்கள் குறிவைத்துள்ளார்கள். இந்தப் பட்டியலை வைத்து பி.ஜே.பி. தலையை உருட்ட ஆரம்பித்துள்ளது. பி.ஜே.பி. தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்துதான், ஜனவரி 5-ம் தேதி கட்சியின் பொதுக்குழு கூடுகிறது என்று விஜயகாந்த் அறிவித்தாராம். //

ஜனவரி 5,2014 தேதியிட்ட ஜூவி கழுகாரில்

செட்டப் கருத்துக் கணிப்பு


//விஜயகாந்த்தை பி.ஜே.பி. தலைவர்கள் மீண்டும் சந்தித்துள்ளார்களே?''

''கடந்த முறை நடந்த சந்திப்பு பற்றிச் சொன்னேன் அல்லவா? அப்போது பிரேமலதா மட்டும்தான் இருந்துள்ளார். இப்போது, விஜயகாந்த்தை மட்டும் சந்தித்துள்ளனர். அப் போது முரளிதர்ராவ் சென்றிருந்தார். இப்போது பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மோகன்ராஜுலு ஆகியோர் சென்றுள்ளார்கள். பி.ஜே.பி. வட்டாரத்தில் கேட்டால், 'புத்தாண்டு வாழ்த்துச் சொல்லச் சென்றோம்’ என்கிறார்கள்!''

ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல மாட்டார்களா?''

''சும்மா பேச்சுக்காக அவர்கள் சொல்வதைச் சொன்னேன்! பி.ஜே.பி. தலைவர்கள் கடந்த 26-ம் தேதிதான் விஜயகாந்த் தரப்பைச் சந்தித்தார்கள். நான்கு நாட்கள் இடைவெளியில் மறுபடியும் சந்தித்துள்ளதற்கு ஒருவிதமான பயமும் காரணமாகச் சொல்லப்படுகிறது. 31-ம் தேதி மாலையில் விஜயகாந்த்தை ஜி.கே.வாசன் சந்தித்தார் அல்லவா? அதுதான் இவர்களது உள்காய்ச்சலுக்குக் காரணம். 'விஜயகாந்த்தை வாசன் சந்திக்கிறார் என்றால், காங்கிரஸ் கூட்டணிக்கு அவரைக் கொண்டுசெல்வதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இருவரும் நல்ல நண்பர்கள். வாசன் சொல்வதை விஜயகாந்த்தால் உடனடியாக தட்ட முடியாது. எனவே, உடனடியாக விஜயகாந்த்தை சந்தித்தாக வேண்டும்’ என்று பி.ஜே.பி. தலைவர்கள் முடிவெடுத்துள்ளார்கள். இந்த தகவலை சுதீஷ§க்கு சொல்லியிருக்கிறார்கள். அவர், விஜயகாந்த்திடம் கேட்டுள்ளார். 'சந்திக்கலாமே’ என்று விஜயகாந்த்தும் ஆர்வம் ஆகி உள்ளார். பி.ஜே.பி. தலைவர்களைச் சந்திப்பதை விஜயகாந்த் அதிகமாக விரும்பினாராம். அதனால்தான் இவர்கள் நேரம் கேட்டதுமே வரச் சொல்லிவிட்டார்!''

''என்ன பேசினார்களாம்?''

''பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மோகன்ராஜுலு ஆகிய மூவருக்கும் தே.மு.தி.க. அலுவலகத்தில் வரவேற்பே பலமாக இருந்துள்ளது. வாசலில் நின்று சுதீஷ் இவர்களை அழைத்துச் சென்றுள்ளார். மேலே விஜயகாந்த் அறைக்குச் சென்றுள்ளார்கள். இவர்கள் மூவருக்கும் சால்வை அணிவித்து புத்தாண்டு வாழ்த்தைச் சொல்லியிருக்கிறார். இவர்களும் கையோடு சால்வை எடுத்துச் சென்றுள்ளார்கள். அவர்களும் விஜயகாந்த்துக்கு சால்வை போட்டுள்ளார்கள். பி.ஜே.பி. வட்டாரம் இதனை 'நிச்சயதார்த்தம்’ என்று மகிழ்ச்சியுடன் சொல்ல ஆரம்பித்துள்ளது. பரஸ்பர வாழ்த்தைப் பரிமாறிக்கொண்ட பிறகு, 'நாடு முழுவதும் பி.ஜே.பி. பலமான தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டோம். வலுவான கூட்டணியை உருவாக்கி வருகிறோம். இந்தக் கூட்டணியில் தே.மு.தி.க-வும் இடம்பெற வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம் மட்டுமல்ல... டெல்லி தலைமையின் ஆசையும் அதுதான்’ என்று பி.ஜே.பி. தரப்பினர் சொல்லியிருக்கிறார்கள். 

அதை சிரித்துக்கொண்டே கேட்ட விஜயகாந்த், 'உடனடியாக நான் எதனையும் அறிவிக்க முடியாது. ஜனவரி 5-ம் தேதி கட்சியின் பொதுக்குழு வைத்துள்ளேன். அதில் அனைவர் கருத்தையும் கேட்கப்போகிறேன். அடுத்து கட்சியின் மாநாடு நடத்தப்போகிறேன். அதன் பிறகுதான் எந்த முடிவையும் அறிவிக்க முடியும்’ என்று சொன்னாராம் விஜயகாந்த். 

'உங்களது நல்ல முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும்’ என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். 'தேர்தல் நாள் இன்னும் அறிவிக்கவில்லையே... அதற்குள் என்ன அவசரம்?’ என்று விஜயகாந்த் திருப்பிக் கேட்டுள்ளார். ஜி.கே.வாசன் சந்திப்பு முழுக்க முழுக்க பர்சனல் மேட்டர் என்று விஜயகாந்த் தரப்பில் சொல்லப்பட்டதாம். அதனால் திருப்தி அடைந்த பி.ஜே.பி-யினர் திரும்பிவிட்டார்களாம்!''

''ஜி.கே.வாசன், விஜயகாந்த் சந்திப்பு பற்றிச் சொல்லும்!''

மூப்பனார் மீது அதிகமான அன்பு கொண்டவர் விஜயகாந்த். அதே நட்பை ஜி.கே.வாசன் மீதும் காட்டுவாராம். இவரையும் 'ஐயா’ என்றே அழைக்கிறார் என்றால் பாரும்! சண்முக பாண்டியனை வாழ்த்திவிட்டு அரசியல் பக்கமாகப் பேச்சு திரும்பி உள்ளது. ஜி.கே.வாசனைப் பொறுத்தவரை, 'காங்கிரஸ், தே.மு.தி.க. கூட்டணி வந்தால் நல்லது’ என்று நினைக்கிறாராம். 'முன்பு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி இருந்தது. இந்த அணிக்கு விஜயகாந்த்தும் வந்தால் அது பலமான அணியாக அமையும்’ என்று பல மாதங்களுக்கு முன்பு சொல்லி வந்தவர் ஜி.கே.வாசன். 'தி.மு.க-வை காங்கிரஸ் தலைமை தக்கவைக்க முயற்சிக்கவும் இல்லை. தி.மு.க-வும் அவசரப்பட்டு விலகிவிட்டது’ என்று நினைக்கிறாராம் வாசன். தன்னுடைய இந்தக் கருத்துக்களை எல்லாம் அவர் விஜயகாந்த்திடம் சொன்னதாகத் தெரிகிறது. 

'இனிமேல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு இல்லை. அப்படி அமைந்தாலும் அது மரியாதையாக அமையாது. எனவே, தே.மு.தி.க., காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் நல்லது. ஒத்த கருத்துள்ள இரண்டு கட்சிகளின் கூட்டணியாக இது அமையும். உங்களுக்கு சிறுபான்மையினர் ஆதரவு எப்போதும் உண்டு. அதனையும் இழக்கத் தேவையில்லை’ என்றெல்லாம் வாசன் சொல்லியிருக்கிறார். 

'காங்கிரஸ், தே.மு.தி.க. மட்டும் அமைப்பது வலுவான கூட்டணியாக அமையாது’ என்று விஜயகாந்த் நினைக்கிறாராம். நாடு முழுக்க காங்கிரஸ் எதிர்ப்பு அலை வீசுவதை உணராதவர் அல்ல விஜயகாந்த். நான்கு மாநிலத் தேர்தலுக்கு முன் விஜயகாந்த்துக்கு இருந்த மனநிலை வேறு. அதன் பிறகு இருக்கும் மனநிலை வேறு. நான்கு மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக கேப்டன் டி.வி. நிர்வாகியை அழைத்து, 'காங்கிரஸுக்கு எதிரான செய்திகளைப் போட வேண்டாம்’ என்று சொன்னவர்தான் விஜயகாந்த். ஆனால், அந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வேறு மாதிரி நினைக்கிறாராம். காங்கிரஸுடன் சேரும் மனநிலை அவருக்கு இல்லை என்றே சொல்கிறார்கள். அந்த மனோபாவத்துடன்தான் ஜி.கே.வாசனிடம் பேசினாராம்.''

''காங்கிரஸ் மேலிடத்தின் அனுமதியுடன்​தான் ஜி.கே.வாசன் சந்தித்தாரா?''
''இவரது சந்திப்புக்கும் காங்கிரஸ் மேலிடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது வாசன் எடுத்த தனிப்பட்ட முயற்சி என்கிறார்கள்!''


ஜனவரி 8,2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ் கழுகார்

//இப்போது தே.மு.தி.க-வுக்குத்தான் மவுசு கூடி இருக்கிறது. தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. ஆகிய மூன்று கட்சிகளும் விஜயகாந்த் முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பைத் தனது கட்சி பொதுக்குழுவில் இன்னும் கூட்டினார் விஜயகாந்த்.

அருண் சுப்பிரமணியம் எம்.எல்.ஏ. பேசும்போது, 'என்னுடைய தனிபட்ட விரும்பம் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைப்பது. அந்தக் கட்சிக்கு நல்ல மரியாதை இருக்கிறது. நம்மை அவர்கள் கூட்டணிக்கு வருமாறு வெளிப்படையாகவே அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். அவர்களது அழைப்பை ஏற்று பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைந்தால், நாம் பெருமளவில் வெற்றி பெறுவோம். ஒருவேளை அவர்களுடன் ஒத்துவராத சூழ்நிலையில் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கலாம். தேர்தலில் வெற்றிதான் முக்கியம்’  என்று சொல்லியிருக்கிறார்.
விழுப்புரம் எல்.வெங்கடேசன் பேசும்போது, 'அகில இந்திய அளவில் பி.ஜே.பி-க்கு மரியாதை உள்ளது. நாம் அவர்களோடு கூட்டணி சேர்ந்தால் பெரிய வரவேற்பு கிடைக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்''//

ஜனவரி 12,2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ்

தி.மு.க. கூட்டணியில் சேருவாரா... இல்லை, பி.ஜே.பி. அணியில் இணைவாரா?’ என்று விஜயகாந்த்தின் முடிவுக்காக அரசியல் அரங்கில் எதிர்பார்ப்பு. இப்படிப்பட்ட நிலையில் 'விஜயகாந்த் எந்தக் கூட்டணியில் இடம்பெற வேண்டும்?’ என்கிற முக்கியமான கேள்வியை முன்வைத்தோம். 'தனித்துப் போட்டியிட வேண்டும்’ என்பதுதான் பெரும்பாலானவர்களின் (33 சதவிகிதம்) கருத்து. பி.ஜே.பி. கூட்டணியில் சேர வேண்டும் என 26 சதவிகிதம் பேரும்,  தி.மு.க. கூட்டணியில் சேர வேண்டும் என்று 21 சதவிகிதம் பேரும் கருத்து சொல்லியிருந்தனர்.//

ஜனவரி 19,2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ்

விஜயகாந்த் எந்தக் கூட்டணியில் இடம்பெற வேண்டும்?’ என்ற கேள்விக்கு நேரடியான சர்வேயில் 'தனித்துப் போட்டியிட வேண்டும்’ என்பதுதான் பெரும்பாலானவர்களின் (33 சதவிகிதம்) கருத்து. ஆனால், ஆன்லைன் சர்வேயில் பி.ஜே.பி. கூட்டணி என 57 சதவிகிதம் பேர் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.

ஜனவரி 22,2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ்


அவர்கள் மனதுக்குள் ஒரு கணக்கைப் போட்டு முடித்துவிட்டார்கள். தே.மு.தி.க-வுக்கு 11 இடங்கள் தருவது. பி.ஜே.பி. 10 இடங்களில் போட்டியிடுவது. ம.தி.மு.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் தலா 9 இடங்களை ஒதுக்குவது. இதுதான் பி.ஜே.பி-யின் கூட்டணிக் கணக்கு. மொத்தம் உள்ள 39 தொகுதிக்கான பங்கீடு இது. 'அனைத்துக் கட்சிகளையும்விட கூடுதல் தொகுதிகளில் நிற்க வேண்டும் என்பது விஜயகாந்த் கோரிக்கை. அதைச் செய்துவிட்டார்கள்.//

ஜனவரி 26,2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ்

//பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க. சேர்வது பற்றிய பேச்சுவார்த்தை பிரகாசம் அடைந்திருக்கிறது. 'கருணாநிதி - அழகிரி மோதல் நாடகம். இதற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்’ என்று பிரேமலதா சொல்லியிருப்பது தி.மு.க. கூட்டணியின் கதவை சாத்துவதுபோல அமைந்திருக்கிறது. இதை வைத்துதான் பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். //

சேலம், ஆரணி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், அரக்கோணம், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளைக் கேட்கிறது தே.மு.தி.க. இதில் கிருஷ்ணகிரி, சேலம், மயிலாடுதுறை தொகுதிகளில் பி.ஜே.பி. போட்டியிட விரும்புகிறது. பா.ம.க-வும் தே.மு.தி.க-வும் செல்வாக்கு படைத்த வட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளைப் பிரச்னை இல்லாமல் பிரித்துக்கொள்வது பற்றிதான் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.''//

பிப்ரவரி 5,2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ்

விஜயகாந்த் எப்போதுதான் முடிவெடுப்பார்?''

''கடைசிவரைக்கும் இழுத்து இறுதியில் அறிவிப்பதுதான் விஜயகாந்த்தின் வழக்கம். 8 ஆம் தேதி நடக்கும் மோடியின் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை மேடையேற்ற தமிழக பி.ஜே.பி. தலைவர்கள் திட்டமிட்டார்கள். ஆனால், விஜயகாந்த் பிடிகொடுக்காததால் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மேடையேறுவது சந்தேகம்தான். மோடி கூட்டத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக டைட் ஆக இருக்கும். மேடை ஏறுபவர்கள் பட்டியலை 10 நாட்களுக்கு முன்பே தர வேண்டும் என்று செக்யூரிட்டி ஆட்கள் சொல்லிவிட்டார்கள். ஆனால், தமிழக பி.ஜே.பி-யால் அதனைத் தர முடியவில்லை. அதனால் இப்போது நடக்க இருக்கும் மோடி கூட்டத்தில் விஜயகாந்த், ராமதாஸ் போன்றவர்கள் மேடையேற வாய்ப்பு இல்லை. இது தமிழக பி.ஜே.பி. தலைவர்களைக் கோபம் கொள்ள வைத்துள்ளது. 'இரண்டு நாட்களுக்குள் கூட்டணிக்கு வருகிறீர்களா, இல்லையா என்பதைச் சொல்லிவிடுங்கள்’ என்று அவர்கள் விஜயகாந்த்துக்கு சொல்லி அனுப்பிவிட்டார்கள். விஜயகாந்த் - பிரேமலதா திருமணநாள் வாழ்த்துச் சொன்னது முதல், சுதீஷ் டெல்லி போனது வரை அனைத்துமே பி.ஜேபி. தலைவர்களுக்கு தெரிந்தே நடந்துள்ளது!''

''அதன் பிறகும் எதற்காக இழுக்கிறாராம் விஜயகாந்த்?''



''நான் முன்பே சொல்லியிருந்தேன். '19 சீட் தருபவர்களோடுதான் கூட்டணி’ என்று நிபந்தனை போடுவதாக நான் சொல்லி 1.1.14 தேதியிட்ட இதழில் நீர் வெளியிட்டு இருந்தீர் அல்லவா? அதில் இருந்து இன்னும் குறையவில்லையாம் விஜயகாந்த். '19 சீட் கொடுத்தாக வேண்டும்’ என்று சொல்லிவருகிறார். பி.ஜே.பி. 11 தொகுதி தரலாம் என்று திட்டமிட்டு இருந்ததாம். கூடுதலாக 1 ராஜ்யசபா சீட் வேறு மாநிலத்தில் தருகிறோம் என்றார்களாம். ஆனால், 19-ல் இருந்து ஒரு சீட்கூட இதுவரை குறைக்கவில்லையாம் விஜயகாந்த். 'அவருக்கு 19 கொடுத்தால் ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தொகுதியே ஒதுக்க முடியாது. ஒருவேளை, அவர்கள் வேண்டாம்; தே.மு.தி.க-வும் பி.ஜே.பி-யும் மட்டும் போதும் என்று விஜயகாந்த் நினைக்கிறாரோ என்னவோ’ என்கிறார்கள் பி.ஜே.பி-யில்!''

''என்னதான் முடிவெடுப்பாராம் விஜயகாந்த்?''

''பி.ஜே.பி-யிடம் முடிந்தவரை பார்ப்பார். இல்லாவிட்டால் தனித்துப் போட்டி என்று போய்விடுவார் என்கிறார்கள்'' என்றபடி எழுந்த கழுகார்.

பிப்ரவரி 12,2014 தேதியிட்ட ஜூவி கழுகார்.
********

மணியனின் வார்த்தைகளில் சொல்லப்போனால் தரகரின் பணியைச் செய்துள்ளது.மாட்டினை விலை பேசி வாங்க,அதன் உரிமையாளரிடம் சென்று பேசி அவரது மனதைக் கரைப்பது போல ஜூனியர் விகடன் விஜயகாந்தை பா.ஜ.க.கூட்டணிக்கு வரவழைப்பதற்காக சாம,பேத‌,தான விஷயங்களைத் தனது எழுத்தில் காட்டியது.

இதன் மூலம் விஜயகாந்துக்கு மட்டுமல்ல உதிரியாய் இருந்த பா.ஜ.க.கட்சிக்கும் நல்ல விளம்பரம் தான். இவை அனைத்தையும்  காசு வாங்கி விளம்பரமாக மாற்றி வெளியிட்டிருந்தால் விகடன் நிறுவனத்துக்கு கோடிகளைத் தொட்டுக் கிட்டியிருக்கும் விளம்பரக் கட்டணம்.

(இதிலும் ஒரு சிக்கல் உள்ளது.குமுதம் ரிப்போர்ட்டர் மோடிக்கு மட்டுமல்ல,ஜெயலலிதாவுக்கும் சேர்த்து பி.ஆர்.ஓ.வேலை பார்த்தால்,ஜூனியர் விகடனோ மோடிக்கும் வைகோவுக்கும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.)

அன்றாட வரவு செலவு பார்ப்ப‌வன் சாதாரண‌ வியாபாரி.சீனிவாசன் தொழில் அதிபர் அல்லவா..! அதுவும் மூன்று தலைமுறையாய் தொழில் பார்க்கும் நிறுவனம் அல்லவா..? வருங்காலத்தில் கிட்டப் போகும் மிகப்பெரும் ஆதாயத்தை மனதில் இருத்தி தொழில் நடத்துகிறார். 

ஆனால் அத்தனையையும் விஜயகாந்த் பொய்யாக்கி விட்டார்.நாம் செருப்பால் அடிக்க முடியாததை தன் செய்கையால் நடத்திக் காட்டி விட்டார். விஜயகாந்த் காங்கிரசுடன் கூட்டணி வைக்க மாட்டார் என்று ஆரம்பத்தில் இருந்து ஜூனியர் விகடன் சொல்லி வந்திருக்கிறது .அங்கு செல்ல வாய்ப்பிருக்கிறது என்று போகிற போக்கில் கூடச் சொல்லவில்லை.முழுக்க முழுக்க வாய்ப்பில்லை என்றே மறுத்து வந்திருக்கிறது.ஆனால் கடந்த ஒருவார காலமாய் நிலைமைகள் முழுவதும் மாறியிருக்கின்றன.

இவர்கள் எழுதியதற்கு மாறாக காங்கிரஸ் கூட்டணியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.இந்த புலனாய்வுப் புலிகள் தங்கள் முகத்தை எங்கு வைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
இந்தச் செய்திகளை கடந்த திங்கள் 10-02-2014 வெளிவந்த நாளிதழ்களில் இருந்தே அறியலாம்.

அது மட்டுமல்ல திங்கள் இரவு லே அவுட் முடித்து இதழ் முடித்து புதன் வெளிவந்த‌  (12-02-2014நக்கீரன் வாரமிருமுறை இதழிலும்,திங்கள் காலை லே அவுட் முடித்து செவ்வாய்க்கிழமை
(11-02-2014)வெளிவந்த‌ குமுதம் ரிப்போர்ட்டரிலும் கூட செய்தி வந்திருக்கிறது.




மேலும் இந்தக் கூட்டணிக்காய் அல்லும் பகலும் தரகு வேலை பார்த்த தரகு மணியன் கூட,சீச்சீ இந்தப் பழம் புளிக்காது என்று விஜயகாந்தை தரகர் என்று திட்ட (10-02-2014) ஆரம்பித்து விட்டார்.




12-12-2014 தேதியிட்ட தினமலர்


பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்த மாநாட்டில் இல.கணேசன் கூட விஜய்காந்தை விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்.விஜயகாந்த் இனி இக்கூட்டணியில் வர வாய்ப்பில்லை என்று பா.ஜ.க.வின் பங்காளிகளான ரிப்போர்ட்டர் மற்றும் தினமலருக்கு மட்டுமல்ல,அரசியல் கத்துக்குட்டிகள், நம்ம ஊர் குப்பன் சுப்பன்களுக்கும் தெரிந்திருக்கிறது.


12-12-2014 புதன் கிழமை தேதியிட்ட தினமலர் கார்ட்டூன்


ஆனால்  சனிக்கிழமை வெளிவந்துள்ள (15-02-2014 )ஜூனியர் விகடன் கூச்சநாச்சமில்லாமல் இன்னும் என்ன எழுதுகிறது பாருங்கள்.( 
இதழ் 13 -02-2014 இரவு வடிவமைப்பு முடிக்கப்பட்டு அச்சுக்குப் போகும்.)
இவர்கள் நாட்டு நடப்பு எதையும் படிக்காமல் கண்ணையும் காதையும் மூடிக் கொண்டு அமர்ந்து கொண்டு மனநோயாளிகள் போல தங்கள் விருப்பம் போல இன்னும் எழுதிக் கொண்டிருப்பது ஏன்.?



//விஜய்காந்த் மன்மோகனைச் சந்திப்பது முதலில் பாரதிய ஜனதா தலைமைக்குத் தான் தெரியுமாம்.அதைச் சொன்ன சதீஷ்,அரசியல் வேறு இது வேறு, இதைப் பார்த்து குழம்ப வேனாம் என்றும் பா.ஜ.க.கூட்டணியில் தான் விஜயகாந்த் இணைவார் என்றும் சொன்னாராம்.இதை கமலாலயத்தில் நம்பினார்களாம்.நம்மையும் நம்பச் சொல்கிறது....


(அதாவது எவனாவது நம்மை மீட்க வர மாட்டானா என்று நடுத்தெருவில் காத்துக்கிடக்கும் நம்மூர் காங்கிரஸ் காரனுக்கு கூட விஜயகாந்த் சந்திப்பது தெரியாதாம்.பிஜேபி காரனுக்குத் தெரியுமாம்.

14 ஆம் தேதி சந்திப்பு குறித்து 8 ஆம் தேதியே கமலாலயத்துக்குத் தெரிந்தால் அது ஏன் துப்புக்கெட்ட ஜூவி புலனாய்வு சிங்கங்களுக்குத் தெரியவில்லை.ஒரு வாரம் கழித்து எழுதுகிறது..

இந்தப்பொழப்புக்கு...)


கொஞ்சமாவது உண்மையை மட்டும் எழுதும் எண்ணம் இருந்தால் ஜூனியர் விகடன் என்ன எழுதியிருக்க வேண்டும்..?

சென்னை வந்த மோடியைச் சந்திக்காமல் டெல்லி சென்று மன்மோகன் சிங்கைச் சந்திக்க விஜயகாந்த் சென்றது ஏன்?

பா.ஜ.க.வுடன் நின்றால் தான் செல்லாக் காசாகி விடும் என்று தெரிந்து விஜயகாந்த் சென்றாரா அல்லது காங்கிரசுடன் சென்றால் இன்னும் அதிக பொற்காசுகள் கிடைக்கும் என்று தெரிந்து சென்றாரா என்று எழுதியிருக்க வேண்டும்.இன்னும் சொல்லப் போனால் இன்றளவும் பாரதிய ஜனதாவை விட மட்டுமல்ல வைகோ கட்சியை விடத் தமிழ்நாட்டில் காங்கிர‌ஸ் தான் செல்வாக்கான கட்சி.

விஜயகாந்த் மன்மோகன் சந்திப்பு குறித்த செய்தி வெளிவந்த பின் 2 இதழ்கள் ஜூவி (புதன்,சனிக்கிழமை) வெளிவந்துள்ளது.புதன்கிழமை வெளிவந்த இதழில் இச்செய்தியைத் தவிர்த்த ஜூவி,சனிக்கிழமை வெளிவந்த இதழில் இன்னும் பா.ஜ.க.கூட்டணிக்குத் தான் நடிகர் வருவார் என்று வலிந்து எழுதுகிறது.விஜயகாந்த அடித்த ஆப்பில் புலனாய்வுப் புலிகள் இன்னும் தெளியவில்லை போலும். 

இன்னும் விஜயகாந்த் பா.ஜ.க.கூட்டணிக்கு வர இருப்பதாக ஜூவி எழுதுகிறது.இல.கணேசனும்,தரகு மணியனும் சீச்சி இந்தப் பழம் புளிக்கும் என்று சொன்ன பின்னும் இன்னும் ஜூவி மட்டும் கூச்சமில்லாமல் செய்தி வெளியிடுவது ஏன்..? 


*
இப்படிப் பாருங்கள்,விஜயகாந்த் டெல்லி சென்று மோடியைச் சந்திக்கப் போகிறார் என்று வைத்துக் கொள்வோம்.ஜூ.வி. எப்படியெல்லாம் செய்தி வெளியிட்டிருக்கும்.

எந்த பிளைட்டில் போகிறார்.அவருக்கு எங்கு அறை புக் செய்யப்பட்டிருக்கிறது..? அவர் மச்சினன் எங்கே தங்குகிறார்.காலை உணவு எங்கே.? யார் யாரைச் சந்திக்கிறார்..? எந்தக் கோயிலில் சாமி கும்பிடுகிறார்?விஜயகாந்துடன் யார் யார் செல்கிறார்கள்..? என்றெல்லாம் எழுதி 

மோடி மந்திரம் பலித்தது...டெல்லியில் விஜயகாந்த் ..! பரபர ரிப்போர்ட்

என்றெல்லாம் அட்டைப்படக் கட்டுரை வைத்து நம்மை இம்சித்திருக்குமா இல்லையா..?

குறித்த 4 தொகுதிகள் யாருக்கு என்பதில் தான் சிக்கல் இருக்கிறதே தவிர அனைத்துத் தொகுதிகளுக்கும் உடன்பாடு ஏற்பட்டு விட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்ற வகையறாச் செய்திகளும் இடம் பெற்றிருக்கும்.

அப்ப‌டி நட‌க்காததால் பா.ஜ.க.கூட்டணியில் விஜயகாந்த் இருக்கிறார் என்ற அதீத கற்பிதத்தோடு இன்னும் ஜூவி ஆசிரியர் வாழ்ந்து கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் நமமையும் நம்பச் சொல்லுகிறார். 'கசப்பான' உண்மைகளை ஏற்றுக்கொள்ள மனம் இன்னும் பக்குவப்படவில்லை போலும்,


 ஜூ.வி. இப்படி எழுதுவதில், முதலாளியின் தனிப்பட்ட விருப்பத்தை மீறி ஜூ.வி.ஆசிரியரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பும் இருக்கிறது எனவும் அறியலாம்.ஏனென்றால் இதே குழுமத்தில் இருந்து வரும் ஆனந்த விகடனில் வரும் அரசியல் கட்டுரைகள்,வெளிவரும்  பேட்டிகள்  இந்துத்துவ வெறியுடனும்,யாருக்கும் சொம்பு தூக்கியும் வருவதில்லை என்பதை அறியலாம்.

ஆனந்த‌ விகடனில்  முக்கியப் பொறுப்பில் இருக்கும் சில பத்திரிகையாளர்கள்  பாசிச இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் அதுதான் காரணம் என சிலர் நினைக்கலாம்.அவ்வாறு சொல்லப்படுவது ஒரு காரணமாக இருக்கலாமே தவிர அது மட்டுமே முழுக் காரணம் கிடையாது. ஏனென்றால் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்னும் அவசியம் ஆசிரியருக்கு கிடையாது. விகடன் ஆசிரியர் நினைத்தால் அவர்களை மீறித் தன்னுடைய விருப்பத்துடன் செயல்பட்டிருக்கலாம்.

இத்தனைக்கும் தன்னை பெரியாரிஸ்டாகவோ, கம்யூனிஸ்டாகவோ என்றும் விகடன் ஆசிரியர் சொல்லிக் கொண்டது இல்லை. சிலரைப் போல் விளம்பரத்திற்காகவும் அப்படிச் சொன்னது இல்லை. தன்னை சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை போடுபவராகத் தான் வெளிப்படையாக‌ காட்டி வந்திருக்கிறார்.தமிழக அரசியல் மற்றும் சமூக சூழல் குறித்து அவருக்கு இருக்கும் புரிதலும் அக்கறையும் கூட மற்ற‌வர்களிடம் இல்லை. 

ஆக இந்துத்துவ பிரச்சாரம் ஆனந்த விகடனில் நடைபெறாமல் இருப்பதற்கு ஆசிரியர் முக்கிய கார‌ணம் என்பதால் பாராட்டுக்குரியவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஜூ.வி. சொல்வது போல விஜயகாந்த் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நிற்கட்டும்,அல்லது பாரதிய ஜனதாக் கூட்டணியில்(!) நிற்கட்டும்.இப்பொழுதைய அரசியல் அகராதியில் எதுவும் நடக்கலாம்.ஆனால் வெறும் அரசியல் கிசுகிசு எழுதும் பத்திரிகை என்பதைத் தாண்டி உள் நோக்கத்துடனும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புடனும் பா.ஜ.க.வுக்கு நம்முடைய காசில்  தரகு வேலை பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி.கோயபல்ஸ் உயிருடன் இருந்தால் இவர்களின் செயலைப் பார்த்து,நமக்கு இந்த அளவுக்குத் திற‌மை கைகூடவில்லையே என்று  கூச்சப்பட்டிருப்பான் என்பது உறுதி.

  

Saturday 15 February 2014

தமிழக அரசியல்- தாமரை மலரச் செய்வோம்...!




பொதுவாக இதழ்களில் எழுதும் அரசியல் கட்டுரைகள் பெரும்பாலும் ஏதோ ஒரு சார்பு இருக்கும். நடுநிலைமை என்பது யாரிடமும் கிடைக்காது.

நக்கீரனில்  மனுஷ்யபுத்திரன் எழுதுவது திமுக சார்பு நடுநிலை என்றால் தமிழக அரசியலில்  15-02-2014 தேதியிட்ட நடப்பு இதழில் கார்க்கோடன் என்பவர் எழுதியுள்ளது பாரதிய ஜனதா கட்சி சார்பு நடுநிலைமை.

தற்பொழுதைய‌ ஜூவி யை ஒப்பிடும் பொழுது தமிழக அரசியலில் வெளிவந்த கட்டுரை பரவாயில்லை ரகம் தான்.

இந்த மண்ணில் எப்படியாவது தாமரை மலர்ந்து விடாதா என்ற ஏக்கத்துடனும் ஆதங்கத்துடனும் மனதின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி எழுதியுள்ளது தான் இந்த வாரத் தமிழக அரசியல் கட்டுரை.

அதிக பட்சம் 40 ஆயிரம் பேர் திரட்டி வரப்பட்ட வண்டலூர் மோடி பொதுக்கூட்டத்தை லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர் என்று எழுதியதை வைத்தால் இதன் 'நடுநிலைமை' லட்சணம் தெரியும்.



                                                 




இதை கார்க்கோடன் என்ற புனைப்பெயரில் எழுதியவர் வேறு யாருமல்ல.தமிழக அரசியலின் வெளியீட்டாளர் திரிசக்தி சுந்தர்ராமன் தான்.

காலம் காலமாய் திராவிடம் ஆரியம் என்று அரசியல் செய்தவர்களே இப்பொழுதல்ல பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கூட்டணி வைத்துக் கொண்ட நிலையில், முதலாளியிடம் வாங்கிய சம்பளத்துக்காய் பத்திரிகை ஆசிரியர்களே எஜமானே வியக்கும் வண்ணம் இந்துத்துவ அடியாளாய் செயல்படும் பொழுது ,  முதல் போட்டு பத்திரிகை நடத்தும் கும்பகோணத்து சுந்தர்ராமன்கள் எழுதுவதைக் குறை சொல்ல முடியாதது தான்.

தமிழக அரசியல் தனது முகப்பில் புதியதோர் உலகம் செய்வோம் என்ற முத்திரையுடன் வெளிவருகிறது.தாமரையை மலர‌ச் செய்வது தான் புதியதோர் உலகம் போலும்.

ஆனால் அது புதியதோர் உலகு அல்ல.ஏற்கனவே உதித்த இருண்டதொரு உலகு தான்.அதை நம்பிப் பிரயோஜனம் இல்லை.


தொடர்புடைய இணைப்புக்கள்

http://kalakakkural.blogspot.in/2012/02/7.html

http://kalakakkural.blogspot.in/2011/12/blog-post_14.html

http://kalakakkural.blogspot.in/2012/02/blog-post_27.html