Sunday 1 January 2012

செய்திக்குப்பின்னால்- இளையராஜாவிற்கு எதிரான சன் டிவியின் அரசியலுக்கு என்ன காரணம்?





காலையில் வீட்டில் நாம் உபயோகப்படுத்தும் எரிவாயுவில் இருந்து இரவில் உறங்குவதற்கு முன் நாம் காணும் தொலைக்காட்சி நிகழ்ச்சி வரை அனைத்திலும் இருக்கிறது அரசியல்.இப்படி அனைத்திலும் அரசியல் இருக்கையில் ஊடகங்களில் நாம் படிக்கும் செய்தியிலும்,காணும் நிகழ்ச்சியிலும் அரசியல் இருக்காதா என்ன?

ஒரு செய்தி வெளிவருவதில் இருந்து,அது முக்கியத்துவம் கொடுக்கப் படுவதில் இருந்து,இருட்டடிப்பு செய்யப்படுவதில் இருந்து,திரித்து வெளியிடுவது வரைக்கும் அனைத்திலும் இருக்கிறது அரசியல்.செய்தியில் இருக்கும் இந்த அரசியல் ஜாதியாகவோ,லஞ்சமாகவோ,விளம்பரமாகவோ,தொழில் கூட்டாகவோ,தெரிந்த நபருக்குச் செய்யப்படும் உதவியாகவோ,தனக்குப் பிடித்த அரசியல் தலைவருக்கு செய்யப்படும் உதவியாகவோ இருக்கலாம்.

இதனை நாம் அமபலப்படுத்தும் பகுதி தான் இது....

கேரள மாநிலத்தைச் மலபார் கோல்டு என்னும் நிறுவனம் 28 டிசம்பர் 2011 அன்று நடத்தும் இசை நிகழ்ச்சியில் இளையராஜா பங்கேற்க கூடாது என பெரியார் திராவிடர் கழகம் 25-12-2011 அன்று இளையராஜா வீட்டில் சென்று மனு கொடுத்தது.


பெரியார் திராவிடர் கழகத்தின் தன்னலமற்ற இந்தச் செயல் அனைவராலும் ஆதரிக்கப்படவேண்டியது,வரவேற்கப்பட வேண்டியது.இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.இளையராஜா கேரள நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கடும் கண்டனத்துக்கு உரியது.நாமும் பெரியார் தி.க.வின் போராட்டத்தை முழு மனதுடன் ஆதரிக்கிறோம்.



ஆனால் இந்தச் செய்தியை சன் டிவியும்,தினகரன் குழும நாளிதழ்களும் கையாண்ட விதத்தில் உள்ள பின்னணி யைப் பார்ப்போம்.

இந்தச் செய்தி வழக்கமான செய்திகளைப் போல் அல்லாமல் மிக அதிக முக்கியத்துவத்துடன் சன் டிவியில் நாள் முழுவதும் ஒளிபரப்பப் பட்டது.தினகரன் குழும இதழ்களும் அதிக அக்கறையுடன் இந்தச் செய்தியை வெளியிட்டன.

இன நலன் மீதான அக்கறை என்று நம்புவதற்கு நாம் என்ன ஏமாளிகளா?

ஏன் என்றால் சில மாதங்களுக்கு முன்பு சிரிப்பு நடிகர் கருணாஸ் கலை நிகழ்ச்சிக்காக இலங்கை செல்ல முயற்சித்த பொழுது தமிழ்நாட்டில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது.ஆனால் இதனை சன் குழும ஊடகங்கள் உரிய முறையில் மருந்துக்கும் பதிவு செய்யவில்லை.

இப்பொழுது இருக்கும் இன உணர்வு அப்பொழுது ஏன் இல்லை?

சன் பிக்சர்ஸ் இன் நிர்வாக இயக்குனராக அப்பொழுது இருந்த சக்சேனாவின் நெருங்கிய நண்பர் இந்த காமெடி நடிகர் கருணாஸ்.பிறகு எப்படி கருணாஸின் அயோக்கியத்தனம் செய்தியாக அவர்கள் ஊடகங்களில் வெளிவரும்?
இன உணர்வு பொங்கி வழியும்?

ஆனால் இப்பொழுது இளையராஜா வீட்டில் சென்று மனு கொடுத்த செய்தி அதிக முக்கியத்துவத்துடன் ஏன் வெளிவருகிறது? இந்தச் செய்தி வெளியானதன் பின்னணி வேறு,அதற்கு 3 காரணங்கள்.

முதல் காரணம் இளையராஜாவிற்கு சன் குழுமத்தில் மிகப்பெரிய பதவிகளில் உள்ள யாரையும் நண்பர்கள் ஆக காக்கா பிடிக்கத் தெரியவில்லை.
இரண்டாவது இளையராஜா நடத்தும் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமை ஜெயா டிவி க்கு கிடைத்துள்ளது.ஆளும் கட்சியாக அவர்கள் இருப்பதனால் இந்த விஷயத்தில் அவர்களுடன் போட்டி போடவும் முடியவில்லை.ஆகவே தனக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பும் உரிமையும் கிடைக்கவில்லை,அதனை வைத்து காசு சம்பாதிக்க முடியவில்லையே என்னும் ஆத்திரம்.

மேலும் மூன்றாவது காரணம். இசை நிகழ்ச்சிக்கு மற்ற பத்திரிகைகளில் தொடர்ந்து 5 நாட்கள் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்த நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சன் குழும இதழ்களில் மட்டும் கொடுக்கவில்லை.



இத்தனைக்குப் பிறகும் இளையராஜா நிகழ்ச்சிக்கு எதிராக நடத்தும் போராட்டம் பற்றிய செய்தியில் இனஉணர்வு போலியாகப் பொங்காமல் எப்படி இருக்கும்?

வாழ்க ஊடக சனநாயகம்!





1 comment:

aisha said...

ur blog is really nice and interesting, You have maintain it so beautifully that I truly like & enjoy it
Mercedes Benz E300D AC Compressor