Thursday 9 August 2012

அ.மார்க்சின் ”ஆவி”யும்,டுபாக்கூர் ஜூ.வி.யும்..!


இரண்டறக் கலந்த அ.மார்க்ஸ் மற்றும் ராஜபக்‌ஷே (புகைப்படம்  நன்றி.ரமணி)



ஜூனியர் விகடனுக்கு இவ்வளவு காலமாக ஆடிய ஈழ ஆதரவு நாடகம் அலுத்து விட்டது போலும்.இப்பொழுது அ.மார்க்ஸ் போன்றவர்களை அழைத்து வந்து புதிய நாடகம் போடத் தொடங்கி விட்டார்கள்.எப்படிப் போட்டாலும் வியாபாரம் நடக்க வேண்டும் என்பது தானே நிலைப்பாடு.

அ.மார்க்ஸ்

தமிழ்நாட்டில் நடந்தேறிய எத்தனையோ பிரச்னைகளில்  அ.மார்க்ஸ் தனது கருத்தினைப் பதிவு செய்துள்ளார். பெரும்பாலான சமயங்களில் அவை பாராட்டத்தக்கவையும் கூட.அக்கறையுடன் செய்யப்பட்டவை.அதற்கு நம் பாராட்டுக்கள் அவருக்கு என்றும் உண்டு.

ஆனால் ஈழப்பிரச்சனையில் அந்தோணிசாமி மார்க்ஸ் அவர்களுடைய நச்சு நிலைப்பாடு நம் அனைவருக்கும் தெரியும்.ஈழம் தொடர்புடைய அவரது ஒவ்வொரு எழுத்துமே ஒவ்வொரு துளி நஞ்சு.இதுகாறும் இவரது எழுத்துக்கள் இதைத் தான் நமக்கு புலப்படுத்தியுள்ளன. ஈழம் இன்று மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ள பொழுதும்  அ.மார்க்ஸ்  இன் வன்மமும் கக்குகின்ற நஞ்சும் துளியும் குறையவில்லை.

அ.மார்க்ஸ் இப்பொழுது நஞ்சு கக்குவதற்கு கிடைத்த ஊடகம் ஜுனியர் விகடன். அல்லது ஜுனியர் விகடனுக்கு இப்பொழுது கிடைத்துள்ள புதிய பாத்திரம் அ.மார்க்ஸ்.

அ.மார்க்ஸ் பார்த்த ஈழ அனுபவங்கள் என்னும் தலைப்பில் கடந்த 5 இதழ்களாக தனது கருத்தினைப் பதிவு செய்து உள்ளார்.அவரது ஒவ்வொரு எழுத்தும் அவரது வன்மத்தையும் உள்நோக்கத்தையும் பறைசாற்றுகின்றன.

ஒவ்வொரு எழுத்துக்கும் நாம் எதிர்வினையாற்ற முடியும்.ஆனால் இணையத்தில் ஏற்கனவே பலர் இதற்கு எதிர்வினையாற்றியுள்ளனர்.

ஆகவே ஒன்றிரண்டு விஷயத்தை மட்டும் பதிவு செய்கிறோம்.

இந்த நூற்றாண்டின் பயங்கரமான இனப்படுகொலை குறித்து எந்த இடத்திலும் கடுமையாக விமர்சனம் செய்யப்படவில்லை. ஒரு இடத்தில் கூட ”இனப்படுகொலை””சிங்கள இனவெறி” போன்ற சொற்கள் வரவில்லை.அப்படியாயின் அ.மார்க்சின் ஈழ அனுபவங்கள் தொடர் எவ்வளவு அயோக்கியத்தனமானது,உள்நோக்கமுடையது,யாருக்கானது,யாரை மகிழ்விக்க எழுதப்பட்டது,எந்தப் பின்னணியில் வெளிவந்தது என்று புரிந்து கொள்ளுங்கள்.அவருக்கு இதற்கான அவசியமும் தேவையும் இருக்கலாம்.

ஆனால் ஜூனியர் விகடனுக்கு என்ன தேவை?


முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வீட்டிற்கு சென்று வந்த கதையை அ.மார்க்ஸ் விளக்கியிருக்கிறார்.அதில் பிரபாகரன் ”ஆவி”யைக்கண்டு சிங்களவர்கள் பீதியடைந்து ஓடியதாக கதையை அவிழ்த்து விட்டிருக்கிறார். அதில் பிரபாகரன் "இறந்து" விட்டார் என்பதாகச் சொல்லும் நயவஞ்சகம் தோய்ந்திருக்கிறது.பிரபாகரனின் "இறந்த" உடலை கருணாவைப் போல் காட்டிக் கொடுத்தவர்கள் தவிர வேறு யாராவது இதுவரை பார்த்ததாகச் சொல்லியிருக்கின்றார்களா..?சிங்கள ராணுவம் மட்டும் தான் சொல்லியிருக்கிறது.ஆதாரபூர்வமாய் எதிலாவது பதிவாகி இருக்கிறதா?இல்லை.





சிங்கள இனவாதமும் அவரது ஊதுகுழல்களும் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன் நடந்த, சென்னை வேளச்சேரி என்கவுண்டர் குறித்து ஆயிரத்தெட்டு கேள்விகளைச் சரியாகக் கேட்கும் அ.மார்க்ஸ் இதில் துளியளவும் சந்தேகத்தை எழுப்பாமல் சிங்கள அரசின் ஊதுகுழலாய்ச் செயல்பட்டிருக்கிறார்.சந்தேகத்தை எழுப்பி நாலு வரி பதிவு செய்தால் சிங்கள அரசு ஆதரவு தன்னார்வக் குழுக்கள் கோபித்துக் கொள்ளும் என்று நினைத்தாரா என்று தெரியவில்லை.

சிங்கள மக்கள் பிரபாகரன் ஆவியைக் கண்டு பயந்து மேலே ஒடி வந்தது இருக்கட்டும். இவரும் என்ன காரணம் என்றே தெரியாமல் ஓடி வந்து விட்டாராம்.(என்னே வீரம்..!தெரிந்திருந்தால் ஓடி வந்திருக்க மாட்டாராம்.)சரி மேலே வந்தவுடன் தான் என்ன காரணத்திற்காய் வந்து விட்டார்கள் என்று தெரிந்து விட்டதே..மறுபடியும் இவர் தைரியமாய்க் கீழே போய் இருக்கலாமே..!இவர் எழுதிய கற்பனைக் கதையில் கூட பிரபாகரனைச் சந்திக்கும் அந்தத் துணிச்சல் இவருக்கு வரவில்லையே..!

கடைசியாக ஒன்று


சத்தியம்- எதிர்ப்பதம் அசத்தியம்.


யோக்கியன்- எதிர்ப்பதம் அயோக்கியன்


அது போல

அ.மார்க்ஸ் என்றால்..?

வாசகர்களே யூகித்துக் கொள்ளுங்கள்.






அந்தோணிசாமி .மார்க்ஸ் பார்த்த  ஈழ அனுபவங்கள் தொடரில் சமூகத்திற்கு உருப்படியான செய்தி ஒன்று கூட இல்லையா என்று நீங்கள் ஆற்றாமையுடன் கேட்டீர்கள் என்றால்,

மலத்தில் அரிசியைத் தேடினால் அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கிடைப்பது போல,நல்ல அம்சங்கள் ஒன்றிரண்டு இருக்கலாம்.ஆனால் அது யாருக்கும் உபயோகப்படாது.ஆகவே அதைப் பேசுவது அசிங்கம்.

No comments: