Showing posts with label திமுக. Show all posts
Showing posts with label திமுக. Show all posts

Friday, 8 August 2014

பொய்மையின் புகலிடம் தினமலர்...!



பொதுமக்கள் எதிர்பார்ப்பு,கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனர்,நம்பகமான வட்டாரங்கள் கூறின,விரைவில் நடவடிக்கை உறுதி, பின்னணி காரணம்,கிசுகிசுத்தனர்,புலனாய்வில் கிடைத்த தகவல் என்பன போன்றவைகள் எல்லாம் எப்பொழுதும்  பொய்யையும் புரட்டையும் வெளியிட்டு தான்தோன்றித்தனமாய் எவ்விதப் பொறுப்புமற்றும் உள்நோக்கத்துடனும்,ஆர்வத்துடனும் வெளியிடும் பக்கங்களை நிரப்பும் பழக்கம் 'புலனாய்வு' இதழ்கள் செய்பவை. இவர்கள் குறிப்பிட்ட விஷயங்கள் அத்தி பூத்தாற் போல் நடந்தால் அதற்காய் தங்களுக்குத் தாங்களே தற்பெருமை கொள்ளும் இவர்கள் சொன்னது நடக்க வில்லை என்றால் எவ்வித மறுப்போ வருத்தமோ தெரிவிக்காமல் கடந்து செல்வார்கள்.

'புலனாய்வு' என்று சொல்லிக் கொள்ளும் இதழ்களின் இந்தக் கேடுகெட்ட குணாம்சம் தினசரி இதழிலும் உண்டு.

அதிலும் மற்ற‌ நாளிதழ்களை விட டி.வி.ராமசுப்பையரின் மகன்களும் பேரன்களும் நடத்தும் தினமலரில் ம‌லிந்து காணப்ப‌டும். தங்களின் சொத்துப்பிரச்சனையில் ஐந்து முதலாளிகளும் பத்துப் பதிப்புகள தொடர்பாக ஒற்றுமை இல்லாமல்  நீதிமன்றப் படியேறி தீர்வை  நோக்கிக் காத்திருந்தாலும்  இந்த விஷயத்தில் மட்டும் இவர்களின் அனைத்துப் பதிப்புகளிலும் ஒற்றுமை உண்டு.

தினமலரின் 'புலனாய்வு' தரத்திற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு தான் இந்தப் பதிவு.

இது 06-08-2014 அன்று தினமலர் சென்னைப் பதிப்பில் வந்த செய்தி.



 .திமுக அமைப்புச் செயலாளர் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி இயக்குனர் பெ.வீ.கல்யாணசுந்தரம் ராஜினாமாவுக்கு அவருக்கும்,அறிவாலய துணை மேலாளர் ஜெயக்குமாருக்கும் ஏற்பட்ட‌ பிரச்சனை தான் காரணம் என கட்சி வட்டாரங்கள் சொன்னதாய் அதன் நிருபர் வார்த்தைகளை வளைத்து வளைத்து எழுதியிருக்கிறார்.

ஆனால் மறுநாள்  (07-08-2014) அன்று காலை 'டெக்கான் கிரானிக்கல்' ஆங்கில நாளிதழில் பெ.வீ.கல்யாணசுந்தரம் என்ன காரண‌த்துக்காய் ராஜினாமா என்று அனைத்துக் காரணங்களையும் எழுதியிருந்தனர்.



அதே நாள் மதியம் பெ.வீ.கல்யாணசுந்தரம் எழுதிய கடிதமே அனைத்து  ஊடகக்காரர்களிடமும் கிடைத்தது.அதில் தனது ராஜினாமாவுக்கு என்ன காரணம் என்று எழுதியிருக்கிறார்.அதில் ஒரு வரி கூட தினமலர் புலனாய்வு நிருபர் சொன்ன படி அறிவாலய துணை மேலாளர் ஜெயக்குமார் குறித்து எழுதவில்லை.



ஆக முதலில் தினமல்ர் எழுதிய 'செய்தி' வழக்கமான கட்டுக்க‌தை என்று தெரிகிறது. 30-07-2014 தேதியிட்ட ராஜினாமா குறித்து ஐந்து நாட்கள் கழித்த பின்னும் ஒழுங்காய் துப்பறியத் தெரியாத துப்புக் கெட்ட தினமலர் மறுநாள் ஆங்கில இதழில் காரணங்களை எழுதிய  பின்பு, ராஜினாமாவின்  நகல் அனைவருக்கும் கிடைத்த பின் கல்யாணசுந்தரத்தின் பேட்டி என்ற ஒன்றை வாங்கி வெளியிடுகிறது. ஆனால் தவறான செய்திக்கு ஒரு மறுப்பும் இல்லை.

இது 06-08-2014 அன்று தினமலர் சென்னைப் பதிப்பில் வந்த செய்தி.



தான் தவறாய் வெளியிட்ட செய்தியை மறைக்க கல்யாணசுந்தரத்தின் பேட்டியை வெளியிட்டு மறைக்கப் பார்க்கிறது என எண்ணலாம்.ஆனாலும் கற்பனைக் கதை எழுதும் புத்தியை அவ்வளவு எளிதில் விட முடியுமா..?



கல்யாணசுந்தரத்தின் பேட்டிக்கு இடப்புறமே இன்னொரு செய்தியில் கல்யாணசுந்தரத்தின் ராஜினாமாவுக்கு அவருக்கும் ஜெயக்குமாருக்கும் நடந்த பிரச்சனை தான் காரனம் என்று திரும்பவும் பழைய கட்டுக்கதையை எழுதி வெளியிட்டுள்ளது. ஒருவேளை அதுவும் ஒரு காரணம் என்று தினமலர் கருதும் பட்சத்தில் அது குறித்து ஒரு கேள்வியை கேட்டு கல்யாணசுந்தரத்திடம் இருந்து பதிலை வாங்கிப் போட வேண்டியது தானே..?

இதிலிருந்து ஒரு உண்மை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.

இப்படி எழுதும் நிருபர்க‌ள் யாரும் எங்கும் களத்தில் இறங்கி செய்தி சேகரிப்பதும் கிடையாது. உண்மையை மட்டுமே வெளியிட வேண்டுமென்று எண்ணுவதும் கிடையாது.அதனை அறிய மெனக்கெடுவதும் கிடையாது. பக்க‌த்தை நிரப்ப அமர்ந்த இடத்தில் இருந்த படி எதையாவது எழுதி வெளியிடுவது தான் இவ‌ர்கள் நிறமும் குணமும்.

இதில் உண்மையின் உரைகல் எனத் தலைப்பு வேறு.தினமலர் பொய்மையின் புகலிடம் என்பது தான் சரி. 

Wednesday, 21 May 2014

திமுக கட்டுச்சோற்றில் நக்கீரன் பெருச்சாளி...!



நக்கீரன் கோபால்





டந்த 2011 தமிழ்நாடு சட்டமன்ற‌த் தேர்தல் வாக்குகள் எண்ணும் நாளன்று காலை.தபால் வாக்குகள் எண்ணி முடித்த நேரம்.

திமுக தலைவரும் அப்பொழுதைய முதல்வருமான மு.கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் மிக அருகாமையில்  உள்ள டி.யூ.சி.எஸ்.கூட்டுறவு பண்டகசாலை வாசலில் அரசு வழங்கிய கலைஞர் வண்ணத் தொலைக்காட்சியை வைத்து தேர்தல் செய்தியை அங்கிருந்த ஊழியர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.மு.கருணாநிதியின் பாதுகாப்புக்கு இருந்த போலீஸ் காரர்களில் ஒரு சிலரும்,சில பத்திரிகையாளர்களும் அங்கு குழுமியிருந்தனர்.

தொலைக்காட்சியில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக சன் டிவியின் விவாதம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.நக்கீரன் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் கோபால் அதில் கலந்து கொண்ட ஒரு விருந்தினர்.

வழக்கம் போல் கோபால் சவடாலாக பேசிக் கொண்டிருக்கிறார்.திமுக தான் ஜெயிக்கும்,இதில் எந்த சந்தேகமும் இல்லை,கலைஞர் அரசின் சாதனை அப்படி என்று வரிசையாக தம் கட்டிப் பேசுகிறார்.

சிறிது நேரத்தில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வெளிவருகிறது.

பெரும்பாலான இடங்களில் திமுக பின் தங்கி இருப்பதாக தகவல் வருகிற‌து. நக்கீரன் கோபாலின் சவடால் பேச்சு டிவியில் ஓடிக்கொண்டிருக்க,திரையின் கீழே அதிமுக முன்னணி என செய்தி ஓடிக் கொண்டிருந்தது. நேரம ஆக ஆக திமுக தோல்வி உறுதிப்படுத்தப்படுகிறது.திமுக தொண்டர்கள் ஒரு சிலர் அந்த இடத்தில் குழும தொடங்கியிருந்தனர்.அப்பொழுது ,அங்கு இருந்த ஒரு அப்பாவி திமுக தொண்டர்  இதைப்பார்த்து சத்தம் போட ஆரம்பித்தார்..

"என் தலைவனை எல்லோரும் சேர்ந்து தோற்க‌டிச்சுட்டாங்க.இந்த கோபால் மாதிரி ஆட்களும் இதுக்கு ஒரு காரணம்". உண்மையை எப்பவும் எழுதுறதுல்ல,திமுக தான் ஜெயிக்கும்,ஆட்சி அமைக்கும் அப்படின்னு எழுதி வித்துட்டு போயிட்டானுங்க,ஆனா இன்னைக்கு என் தலைவன் தோத்துட்டான்,ஆனால் இன்னும் பாரு கூச்சம் இல் லாம பொய் பேசிக்கிட்டிருக்கானுங்க என்று பேசினார்.அவர் பேச்சைக் கேட்ட யாரும் எதுவும் பேசவில்லை. அப்படியே ஒரு ஓரத்தில் நின்று புலம்பிக்கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரத்தில் தேர்தல் முடிவு அறிந்த கோபாலும் தொலைககட்சி விவாதத்தை விட்டு பாதியில் கிளம்பி விட்டார்.

அன்று உரத்துக் குரல் கொடுத்த அப்பாவி திமுக தொண்டனுக்குத் தெரியாது.பத்திரிகைகள் உண்மையை எழுதி என்றும் ஆட்சியாளர்களின்  கவனத்துக்கு கொண்டு செல்லும் பணியைச் செய்யாது என்றும்,அப்ப‌டி ஒருவேளை உண்மையை எழுதினால், ஆட்சியாளர்கள் அருகில் இருந்து கொண்டு அவர்களுடன் நெருக்கமான உறவைப் பேணுவதோ,அவர்கள் மூலம் தங்களுக்கு வேண்டிய காரியத்தைச் சாதிப்பதோ முடியாத காரியம் என்று தெரியாது. ஆகவே பொய்யை உற்பத்தி செய்து தங்களின் பிழைப்பை மட்டும் பார்த்துக் கொள்கிறார்கள் என்பது.

அதைப்போல இன்னொன்றும் தெரியவும் வாய்ப்பில்லை. நக்கீரன் கோபாலுக்கு நக்கீரனில் வெளிவரும் செய்திகள் குறித்த பெரிய அளவிலான அக்கறையோ,ஆர்வமோ,தொடர்போ கிடையாது என்பதும் அது அதன் இணை ஆசிரியர் காமராஜால் அவரது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப இயக்கப்ப‌டுகிற‌து என்னும் உண்மையும்.

இனி செய்திக்கு வருவோம்.

நக்கீரன் வெளியிட்ட 2011 சட்டமன்ற‌த் தேர்தல் கணிப்பு  மோசடி குறித்தும் அதற்காய் அது சிரம் தாழ்ந்து வெளியிட்ட மன்னிப்பு குறித்தும் ஒரு பதிவு வெளியிட்டிருந்தோம்.

அதன் தொடர்ச்சி தான் இப்பொழுது நடந்திருக்கிற‌து.பழைய மோசடியை மீண்டும் ஒரு முறை நக்கீரன் செய்திருக்கிறது.வழக்கம் போல் இந்த முறையும் அதன் வாசகர்களின் பெருவாரியானவர்களான திமுகவினர் தான் பாதிக்கப்ப‌ட்டிருக்கின்றனர்.

2014 நாடாளுமன்ற‌த் தேர்தலில்  திமுக அணி 22 தொகுதிகளையும்,அதிமுக அணி 15 இடங்களையும் பாஜக அணி 2 இடங்களையும் பிடிக்கும் எனவும் நக்கீரன்  'கணிப்பு' வெளியிட்டிருந்தது.ஒரு இடத்தில் சரிசமமான போட்டி எனவும் 'துல்லிய' கருத்துக் கணிப்பை வெளியிட்டிருந்தது.
(திமுக-திருச்சி,கிருஷ்ணகிரி,வேலூர்,திருவண்ணாமலை,கடலூர்,நாகை,விருதுநகர்,ராமநாதபுரம்,விழுப்புரம்,ஸ்ரீபெரும்புதூர்,அரக்கோணம்,தஞ்சாவூர்,திண்டுக்கல்,மதுரை,நெல்லை,பெரம்பலூர்,மத்திய சென்னை,காஞ்சிபுரம்,நீலகிரி,விடுதலைச்சிறுத்தைகள்-சிதம்பரம்,புதிய தமிழகம்-தென்காசி ஆகிய தொகுதிகள் )

ஆனால் தேர்தல் முடிவுகளோ 'வழக்கம் போல்' முற்றிலும் எதிரான‌தாக வந்திருக்கிறது.

22 இடங்களைப்பிடிக்கும் என நக்கீரன் கணித்த திமுக அணி ஒரு இடத்தையும் பிடிக்க வில்லை.அதற்கு மாறாக 15 இடங்கள் தான் என நக்கீரன் கணித்த அதிமுக 37 இடங்களைப் பிடித்திருக்கிற‌து.வாக்குகள் வித்தியாசமும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. நக்கீரன் இதற்கு என்ன காரணம் சொன்னாலும் அது மீண்டும் ஒரு பொய்யை விதைப்பதாகத் தான் இருக்கும்.



ன்று திமுக என்னும் கட்சிக்கும் அதற்கு ஆதரவாகவும் எத்தனையோ காட்சி ஊடகங்களும் நாளிதழ்களும் இருக்கலாம்.ஆனால் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பேயே இவ்வளவு வீச்சு இல்லாத காலத்தில் 'நக்கீரன்' திமுக தொண்டன் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்தது.

20 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதாவின் 1991 ஆம் ஆண்டின் மக்கள் விரோத ஆட்சியை எதிர்த்து நக்கீரன் செயல்பட ஆரம்பித்த பொழுது தான் அது மிகப்பெரிய வீச்சுடன் இயங்கியது. அத்துடன் சிறுபான்மையினர் ஆதரவு,ஈழத்தமிழர் ஆதரவு, திராவிட இயக்க சார்பு,தமிழ் தேசிய ஆதரவு,ஆங்காங்கு உள்ள மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளை வெளிக்கொணருவது என தனக்கென தனித்தளத்தையும் உருவாக்கிக் கொண்டது.

இந்த அளவுக்கு அதிக அளவிலான ஊடகங்களும் தொலைத் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியும் இல்லாத நிலையில் இதனை சாத்தியப்படுத்தியதால் அதற்கு நல்ல அடித்தளம் கிடைத்தது. போட்டி இதழ்களான ஜூனியர் விகடன்,தராசு ஆகியவை பின்னுக்குத் தள்ளப்ப‌ட்டன. இன்னொரு பக்கத்தில் அதிமுக கட்சிக்கு எதிர்நிலையில் இருந்த‌ திமுக தொண்டன் முரசொலியைப் போல நக்கீரனையும் தனது பத்திரிகையாக கொண்டாட ஆரம்பித்தான்.

ஆனால் நாளடைவில் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிர்ப்பு என்பது திசைமாறி, அதிமுக எதிர்ப்பு என்ற அளவிலும்,அதற்குப் பின் திமுக ஆதரவு என்ற அளவிலும் சுருங்கி விட்டது. திமுக ஆதரவு நிலைக்காக‌ எந்த சமரசத்தையும் செய்வதற்கும் தயாரான‌து. பொதுவான வாசகர்கள் அதனை விட்டு விலகத் தொடங்கி விட்ட நிலையிலும் அது குறித்து எந்தவிதக் கவலையும் கொள்ளவில்லை.

அப்படி வெளிவந்தது தான் 2011 சட்டமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பு. அது பொய் என அம்பலப்பட்ட பிறகு, திமுக தொண்டனே நக்கீரனை நம்பவில்லை. இதற்குப்பிறகு விற்பனை இன்னும் கணிசமாக பாதிக்கப்பட்டது.

இன்றோ திமுகவிற்குள்ளும் தனக்கு பிடிப்பவர்கள்,பிடிக்காதவர்கள் என உருவாக்கி அதற்குள்ளும் கோஷ்டி அரசியல் செய்யும் நிலைக்கு நக்கீரன் வந்து விட்டது. இப்பொழுது அனைத்துத் தரப்பிலும் நிலையான வாசகர் வட்டத்தை இழந்த நிலையில் இருக்கிறது. இன்றைய நக்கீரனின் விற்பனை 50 ஆயிரத்திற்கும் குறைவு என்பது தான் உண்மை. ஆனால் அதற்காய் நக்கீரன் நிர்வாகம் வருத்தப்ப‌டப் போவதில்லை.

ஒரு காலத்தில் காட்டாற்று வெள்ளத்திலும் எதிர்நீச்சல் போட்ட நக்கீரன் இன்று குட்டை நீரில் சுற்றும் கொசு நிலையில் இருக்கிற‌து.தேர்தல் கருத்துக் கணிப்பின் பொழுது கூட நக்கீரனின் விற்பனை வழக்கம் போல் 45000 பிரதிகளைத் தாண்டவில்லை என்பது சந்தை நிலவரம். இதிலிருந்து தேர்தல் திருவிழாவின் பொழுது கூட‌ நக்கீரனை திமுக தொண்டனே வாங்கவில்லை என்பதையும் அறியலாம். இதே நிலையில் சென்றால் அடுத்து இதழ் எங்கே போய் முடியும் என்பது சொல்லித் தெரிவதில்லை.

ஜூனியர் விகடன் போன்ற இதழ்களுக்கு மாற்றாக கோலோச்சிய நக்கீரனின் இன்றைய‌ வீழ்ச்சி உண்மையிலேயே வருத்தத்திற்குரியது.

ஆனால் இந்த நிலைக்கு,பாதை மாறிப்பயணம் தொடரும் நக்கீரன் ஆசிரியர் கோபாலையும் துணை ஆசிரியர் அ.காமராஜையும் தாண்டி வேறு யாரும் காரணமல்ல என்பது சொல்லித் தெரிவதில்லை.



Wednesday, 30 April 2014

அறிவாலயத்தில் பலிக்காத நக்கீரன் ஜோசியம்.. !



ஜூனியர் விகடன்,குமுதம்,குமுதம் ரிப்போர்ட்டர் போன்றவை கருத்துக் கணிப்பு வெளியிடும் பொழுது உண்மையைச் சொல்வதற்கென்றே நம்மிடையே 'அவதரித்துள்ள' நக்கீரன் அமைதி காக்குமா என்ன..?

நக்கீரன் இப்பொழுது வெளியிட்ட கருத்துக் கணிப்பைப் பார்ப்பதற்கு முன்பு, 2011 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக‌ அதன் பழைய கருத்துக் கணிப்பையும் அது தொடர்பாய் வெளியிட்ட மன்னிப்பையும் பார்ப்போம்.


தேர்தலில் திமுக கூட்டணி 31 இடங்களைப் பிடித்தது.

தேர்தலில் தனது ஜோசியம் பலிக்காததால் அதன் ஆசிரியர் அதற்கு வருத்தம் தெரிவித்தார்.

இது தொடர்பான நக்கீரன் ஆசிரியரின் மன்னிப்பு.

சென்ற தேர்தல்களில் நக்கீரன் கணிப்புகள் நூற்றுக்கு நூறு சரியாக இருந்ததை வாசகர்களும், அரசியல் பிரமுகர்களும், மக்களும் மறக்கவில்லை. ஆனால் இந்த முறை தவறி விட்டது.
கருத்து கணிப்புகளை மேற்கொள்வதற்கு என்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்படுமோ அதே விஞ்ஞான முறையையே கையாண்டோம். முடிவுகளை பாரபட்சமின்றி வெளியிட்டோம்..
தற்போது ஏன் சர்வே தோற்றது என்பதை ஆராய்ந்தோம். சாம்பிள்களில் தவறா, எடுக்கப்பட்ட முறை தவறா, சர்வே முடிவை தொகுதிகளாக மாறுவதில் தவறா என வல்லுனர்களிடம் கேட்டோம். இதெல்லாம் சரியாகவே இருப்பதாக அவர்கள் கூறினர்.
பிறகு ஏன தோல்வி ஏற்பட்டது என ஆராய்ந்தோம். நாம் தனியார் நிறுவனங்களை நம்பாமல் நேரடியாக சர்வே செய்தோம். சர்வே படிவத்தின் தலைப்பில் நக்கீரன் என்ற பெயர் இருந்தது. எனவே மக்கள் உண்மையான முடிவை சொல்லாமல், ஜெயலலிதாவுக்கு நக்கீரன் எதிரி என கருதி, மாற்றி சொல்லி இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.. இதனால்தான் கணிப்பு தவறி விட்டது.
என்ன காரணம் சொன்னாலும் தவறு தவறுதான். இதை நேர்மையுடன் ஒப்புக்கொண்டு நக்கீரன் தன் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது. வாசகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறது.”

-ஆசிரியர்

இப்படிப்பட்ட நக்கீரன் தான் இந்த முறை 2014 இல் நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ள‌து. (கருத்துக் கணிப்பில் பலமுறை அம்பலப்பட்டும் பிராடுத்தனத்தை ஒப்புக் கொள்ளாத ஜு.வி. க்கு நக்கீரனை இந்த விஷயத்தில் பாராட்டலாம்.)

டந்த சட்டமன்றத் தேர்தலில் தனது கருத்துக் கணிப்பினை வெளியிட்டதனால், வாங்கிய அடியின் வலி இன்னும் நக்கீரனுக்கு மறக்காத நிலையில் தொகுதிக்கு இத்தனை பேரிடம் கருத்துக் கேட்டோம் என்று வெளிப்படையாய்ச் சொல்லி இப்பொழுது கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. சில இடங்களில் இரண்டு வேட்பாளர்கள் சரி நிகர் சரியாக போட்டியில் இருக்கிறார்கள் என்று 'துல்லியக்' கணக்கும் காட்டியுள்ளது.  ஸ்ஸ்ஸ் முடியல.




5  கோடிக்கும் மேற்பட்ட  வாக்காளர்களைக்  கொண்ட தமிழ்நாட்டில், மக்களின் மனநிலையை வெறும் இருபத்து நான்காயிரம் நபர்களிடம் கருத்துக 'கேட்டதாகச்' சொல்லி வெளியிடும் யூகம் துல்லியமாக இருக்க முடியாது.தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள‌த்தான் உதவும்.

அனைவரும் நினைப்பது போல திமுக தான் முன்னணியில் இருக்கிறது என்று யாரும் சொல்லாத,சொல்லத் துணியாத செய்தியைச் சொல்லியுள்ளது.இந்த விசுவாசம் பாராட்டுக்குரியது.

நக்கீரனின் கருத்துக்கணிப்பின் படி திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் 22 இடங்களில் வெற்றி பெறும்.

இந்த முறை நக்கீரனின் கணிப்பு பலிக்குமா அல்லது இன்னொரு மன்னிப்பா?அல்லது ஜூனியர் விகடன் மாதிரியான சமாளிப்பா என்று மே 16 இல் தெரியவரும்.
***

நாம் நக்கீரன் வெளியிடும் செய்திகளின் 'நம்பகத்தன்மை'யை வேறோரு கோண‌த்தில் பரிசீலிப்போம்.

1992-93 கால கட்டங்களில் முதலில் தராசு விற்பனையை முந்திய நக்கீரன் அதன்பின் ஜூனியர் விகடனின் விற்பனையை முந்தியது. இவ்வாறு ஒரு காலத்தில் ஜூனியர் விகடனுக்கு போட்டியாக கோலோச்சிய 'நக்கீரன்' இன்று ஜூ.வி. விற்பனையில் கால்வாசியை நெருங்கவே முடியாத நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டாலே சந்தையில் அதன் நம்பகத்தன்மையும் நடுநிலைமையும் எந்த அளவு அடிபட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நக்கீரன் இதழானது முரசொலியின் வாரமிருமுறைப் பதிப்பு போலத் தான் வெளிவருகிறது.அதன் வாசகர்களும் பெரும்பாலும் திமுகவினர் தான்.அதனால் நக்கீரனில் வெளியான திமுக தொடர்பான செய்திகள் உண்மை என்று நம்புகின்றனர்.அதனால் நக்கீரனின் இந்தச் சேவை திமுக கட்சிக்காரனின் நல்லதுக்கா ? கெட்டதுக்கா ? எனத் தெரியவில்லை.

இந்த  கருத்துக் கணிப்பின் மூலம் திமுக மீதான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி இருப்பதாய் நாம் உணர முடியும். பாமர மக்கள் மட்டுமல்ல,திமுக கட்சிக்காரர்கள் கூட நக்கீரன் அப்படித்தான் எழுதுவான் என்று சொல்லும் நம்ப முடியாத சூழலே இருக்கிறது.

இவ்வாறு திமுகவிற்கு வரிந்து கட்டி ஆதரவாய் வெளியிடும் நக்கீரனில்,உண்மையிலேயே திமுக தொட‌ர்பாக எழுதுவதிலேயே உண்மை இருப்பதில்லை.திமுக தரப்புச் செய்திகளையே சரியாக நக்கீரன் கணிக்க முடிவதில்லை.(டெஸ்க்கில் அமர்ந்து உருவாக்கினால் இப்படித்தான் இருக்கும் என்கிறீர்களா அதுவும் சரிதான்.)

திமுகவின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் என்று இரண்டு இதழ்களில் ஒரு யூகப் பட்டியலை  மார்ச் மாதத்தில் வெளியிட்டது.கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளின் பெயர் தவிர 35 தொகுதிகளின் பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் 15 தொகுதிகளின் வேட்பாளர்கள் பெயரைத் தவறாக நக்கீரன் வெளியிட்டது.

தான் எந்தக் கட்சிக்கு ஆதரவாய்,எக்கட்சியின் பிரச்சார பீரங்கி போல் நடந்து கொள்கிறதோ,அந்தக் கட்சி யாரை வேட்பாளராய் நிறுத்தும் வாய்ப்பு இருக்கிறது என்பதனை தேர்தல் நெருக்கத்தில் கூட நக்கீரனின் 'துப்பறியும்' இலாகாவால் கணிக்க முடியவில்லை.இத்தனைக்கும் அதிமுக போல் திமுக இல்லை என்றும் இது வெளிப்படைத் தனமையுடன் இயங்கும் ஜனநாயக இயக்கம் என்றும் அடிக்கடி சொல்லியிருக்கிறது நக்கீரன்.

நாம் நக்கீரன் தவறாய் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் அதற்கு எழுதிய குறிப்பை மட்டும் வெளியிடுகிறோம். யாருக்கு கிடைக்கும் என்பதற்கு நக்கீரன் எழுதிய குறிப்புகள் மிகவும் சுவராஸ்யமாய் இருக்கும்.



இனி தப்பும் தவறாய்  வெளியிட்ட நக்கீரன் பட்டியல் விபரம்.

முதல் பட்டியல்: 25.02.2014 - தேதியிட்ட‌ இதழில் வெளியானது.

வடசென்னை-டி.கே.எஸ்.இளங்கோவன் (தவறு)

தென்சென்னை-ஆலந்தூர் பாரதி-மா.சுப்ரமணியம் (தவறு)

கிருஷ்ணகிரி-சுகவனம் (தவறு)

கடலூர்- (தவறு)

தி.மு.க தரப்பில் முன் னாள் மத்திய-மாநில அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனை களமிறக் கும் எண்ணம் உள்ளது. கடந்த முறையே அவர் கடலூர் தொகுதியில் போட்டியிட நினைத் தார். காங்கிரசுக்கு ஒதுக் கப்பட்டதால் அவருக்கு வாய்ப்பு இல்லை. இந்த முறை அவருக்குத் தருவதற்கு கனிமொழி சிபாரிசு செய்கிறார். மா.செ. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வ மும் செஞ்சி ராமச்சந்திரனுக்கு ஆதரவாக இருக்கிறாராம்.

சேலம்-(தவறு)

தி.மு.கவில் சீட் கேட்டிருப்பவர்களில் வீர பாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவியின் மகன் பிரபுவும் ஒருவர். சமீபத்தில் ஸ்டாலினை அவரது வீட்டில் பிரபு சந்தித்தபோது, அவரிடம் ஸ்டாலின் பாசமாகப் பேசியதுடன், "நான் வெளி யிலே புறப்படுறேன்.. நீ அண்ணியை பார்த்து விட்டுப்போ' என்று சொல்லியிருக்கிறார். தன் உதவியாளரையும் கூப்பிட்டு, "பிரபு வந்திருக்கும் செய்தியை துர்காகிட்டே சொல்லி, பார்க்கச் சொல்லுங்க' என்று சொல்லியிருக்கிறார். இந்தளவுக்கு ஸ்டாலினின் மனதில் பிரபுவுக்கு இடமிருப்பதால் சேலம் சீட்டும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பிரபு தரப்பில் உள்ளது.

அடுத்த இதழில் (4.03.2014) வெளிவந்த தொடர்ச்சி இது:

அரக்கோணம் (தவறு)

 தி.மு.க.வில் சிட்டிங் எம்.பி. ஜெகத்ரட்சகனின் கவ னம் ஸ்ரீபெரும் புதூர் பக்கம் சென்றுவிட்டதால், துரை முருகன் தனது மகன் கதிர் ஆனந்தை இங்கே களமிறக்க விரும்புகிறார். அவரது மகன் விருப்பமனு அளிப்பதற்கு முன் அது பற்றி தன்னிடம் எதுவும் தெரி விக்கவில்லை என்பதில் கலைஞருக்கு வருத்தம். தினமும் தன்னை சந் திக்கிறவர் இதைச் சொல்ல வில்லையே என்று மறுநாள் துரைமுருகனை கலைஞர் பார்க்கவேயில்லை. வாரிசுகளுக்கு சீட் இல்லை என்கிற கலைஞரின் வார்த்தைகளால் துரைமுருகன் பதற்றமாகி யிருக்கிறார். இருப்பினும் எப்படியும் கலைஞரின் மனதைக் கவர்ந்து தன் மகனுக்கு சீட் வாங்கிவிட லாம் என்ற முயற்சியைத் தொடர்கிறார். திருத்தணி நகராட்சி முன்னாள் சேர்மன்களான சந்திரன், கண்ணையன் ஆகியோரும் சீட் எதிர்பார்ப்பில் உள்ளனர். டாக்டர் சரவணன், பூபாலன் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.


ஈரோடு (தவறு)

தி.மு.கவில் சீனியரான சுப்பு லட்சுமி ஜெகதீசன் தேர்தல் அரசியல் களத்திலிருந்து கடந்த தேர்தலின் போதே ஒதுங்கி விட்டதால், முத்துசாமியை நிறுத்த ஏற்பாடாகிறது. மாநில அரசியலில்தான் முத்துசாமிக்கு ஆர்வம் அதிகம். எனினும் தலைமை வலியுறுத்தினால் அதனை எப்படித் தட்டிக்கழிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் முத்துசாமி. அவர் களமிறங்காவிட்டால் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், மாநில நெசவாளர் அணி எஸ்.எல்.டி.சச்சிதானந்தம் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படும்.

திருப்பூர் (தவறு)

 தி.மு.க தரப்பிலும் பெண் வேட்பாளராக கீதாநடராஜன் களமிறக்கப்படுவார் எனத் தெரிகிறது. 2006 சட்டமன்றத் தேர்தலின்போது பவானிசாகர் தொகுதிக்கு இவரது பெயர் முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் மாற்றப்பட்டு, ஜீவா ஓ.சுப்ரமணியம் களமிறக்கப்பட்டு ஜெயித்தார். பறிபோன எம்.எல்.ஏ.சீட்டுக்குப் பதிலாக எம்.பி சீட்டை எதிர்பார்த்திருக்கிறார் கீதா நடராஜன்.

பொள்ளாச்சி (தவறு)

தி.மு.கவில் மா.செ.  பொங்கலூர் பழனிச்சாமி யின் மகன் பைந்தமிழ்ப்பாரி நேர்காணலுக்கு செல்வதற்கு முன்பு, கட்சி நிர்வாகிகளுக்கு ஓட்டல் அறையில் வகுப்பெடுத்திருக்கிறார் மா.செ. "எல்லோரும் பாரி பேரையே சொன்னீங்கன்னா, வாங்க கிளிப்பிள்ளைகளான்னு தலைவர் கிண்டலடிப்பாரு. அதனால ஒரு சிலர் வேறு பெயர்களைச் சொல்லுங்க' என்று சொன்னதுடன், நிர்வாகிகளுக்கு விருந்தும் கொடுத்திருக்கிறார். ஆனால் நேர்காணலில், வாரிசுகளுக்கு சீட் இல்லை என ஓப்பனாகவே கலைஞர் சொல்லிவிட, மா.செ.வுக்கு அதிர்ச்சி. அவருடன் சென்ற நிர்வாகிகளோ, கலைஞரின் மனதை சட்டெனப் புரிந்துகொண்டு, உங்க விருப்பம் தலைவரே என்று சொல்லி விட்டார்கள். இந்தத் தொகுதிக்கு சீட் கேட்டிருந்த முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன் மகன் மு.க.முத்துவும் நம்பிக்கை இழந்துவிட்டார். கடந்த 2009-ல் போட்டியிட்டுத் தோற்ற சண்முகசுந்தரம் அல்லது சஃபாரி கார்த்திகேயன் இருவரில் ஒருவருக்கு சீட் கிடைக்கும் எனத் தெரிகிறது. எனினும், கலைஞரின் முடிவு மாறினால் பைந்தமிழ்ப்பாரி வேட்பாளராகலாம் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறது பொங்கலூர் பழனிச்சாமி தரப்பு.

கோவை (தவறு)

தி.மு.க தரப்பில் கடந்த முறை காங்கிரஸ்  நின்ற தொகுதி என்பதால், இப்போதும் கூட்டணிக்குக் காங்கிரஸ் வந்தால் கோவையைத் தள்ளிவிட்டுவிடும் சூழல் இருக்கிறது. தி.மு.க களமிறங்கினால், ஸ்டாலின் ஆதரவாளரான மாநகரச் செயலாளர் வீரகோபால் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் சீட் கேட்டுப்  பணம் கட்டவில்லை என்பதால் இளைஞரணியைச் சேர்ந்த சன் ராஜேந்திரன் என்பவர் மு.க.ஸ்டாலினின் சாய்ஸாக இருக்கிறார்.

மதுரை (தவறு)

தி.மு.கவில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் அல்லது முன்னாள் மேயர் செ.ராமச்சந்திரன் இருவரில் ஒருவருக்கு சீட் எனப் பேச்சு அடிபடுகிறது. அம்பலத்தார் என்ற முறையில் ராமச்சந்திரனுக்கு புறநகர் மா.செ. மூர்த்தி ஆதரவாக உள்ளார். மாநகர மா.செ. தளபதி, முன்னாள் மா.செ. வேலுச்சாமி உள்ளிட்டோர் பொன்.முத்துவுக்கு ஆதரவு. மதுரை இல்லாவிட்டால் தேனி என்ற எண்ணத்தில் உள்ளார் பொன்.முத்து.

சிவகங்கை-(தவறு)

  தி.மு.க தரப்பில் முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு இத்தொகுதி மீது ஒரு கண் இருக்கிறது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயமான உடையார் சமுதாயத் தைச் சேர்ந்த சிறுபான்மை கிறிஸ்தவ மதத்தினரான ஜோன்ஸ் ரூசோவும் பரிசீலனையில் உள்ளார். பெண் வேட்பாளராக ஜோன்ஸ் ரூசோவைக் களமிறக்கினால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
ராமநாதபுரம்-(தவறு)

சிட்டிங் எம்.பி. ரித்தீஷ் வெளிப்படையான அழகிரி ஆதரவாளராகி விட்ட தால் அவர் இந்த முறை களமிறங்க முடியாது.

தமிழச்சி தங்கபாண்டியனிடம் சீட்டுக்கு பணம் கட்டும்படி ஸ்டாலின் சொன்னபோது, ""இல்லீங்கன்னா, என்னால ஒரு கோடி செலவு பண்ணுறதே கஷ்டம். எம்.எல்.ஏ. சீட் தந்தால் போதும்'' எனச் சொல்லிவிட்டா ராம் தமிழச்சி.

மா.செ. சுப.தங்கவேலன் மகன் சுப.த.சம்பத் சீட் எதிர்பார்த்திருந்தார். வாரிசுகளுக்கு சீட் இல்லை என்ற கலைஞரின் முடிவில் மாற்றம் ஏற்பட்டால், அவருக்கான வாய்ப்பு அதிகரிக்கும். சீட் கேட்டு பணம் கட்டியிருப்பவர்களில் பெருநாழி போஸ் முக்கியமானவர். இஸ்லாமியரான ரகுமான்கானை நிறுத்தலாம் என்ற பேச்சும் தலைமையிடம் எழுந்துள்ளது.

விருதுநகர்-(தவறு)

தி.மு.க மா.செ கே.கே. எஸ்.எஸ்.ஆரின் மெயின் டார்கெட் வைகோவைத் தோற்கடிப்பதுதானாம். வைகோவின் சமுதாயத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அண்ணாச்சிக்கு வேண்டியவர்தான் என்றாலும், வைகோவுக்கு டஃப் தருவாரா என்ற கேள்வி உள்ளது. மதுரை மாநகர் மா.செ தளபதி தனது மாவட்டத்திற்குட்பட்ட திரு மங்கலம் தொகுதி விருதுநர் எம்.பி. தொகுதிக்குள் வருவதால் அவரும் சீட் எதிர்பார்க்கிறார்.

நேர்காணலில் பங்கேற்று தன்னுடைய எதிர்பார்ப்பையும் வெற்றிவாய்ப்பையும் தலை மையிடம் தெரிவித்திருக்கிறார் தளபதி. எனினும், கே.கே. எஸ்.எஸ்.ஆர் தனது சாய்ஸாக வெயிட்டான கட்சிக்காரரைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

வைகோவையும் அ.தி.மு.க. வையும் எதிர்த்து ஜெயிக்கும் வலிமையுடனான வேட்பாளர் வேண்டும் என்பதுதான் அண்ணாச்சியின் தேடல் என்கிறார்கள் தி.மு.கவினர்.

கன்னியாகுமரி (தவறு)

தி.மு.க தரப்பில் சிட்டிங் எம்.பி. ஹெலன் டேவிட்சனுக்கே சீட் தரும் எண்ணத்தில் தலைமை உள்ளது. எனினும், மா.செ. சுரேஷ்ராஜன் வேறு வேட்பாளரை நிறுத்த முயற்சி செய்துகொண்டி ருக்கிறார்.

இதில் அரக்கோணம் தொகுதி வேட்பாளர் பற்றிய செய்தி மட்டும் ஜூவி,ரிப்போர்ட்டர்  இதழைப் போல நக்கீரனிலும் பட்டியல் வெளிவருவதற்கு மாறுதல் செய்தி வந்தது.

க மொத்தம் 15 வேட்பாளர் பெயர் தவறு. அதிலும் பாருங்கள்.வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் பிரபுவை வீட்டில் அண்ணியைப் பார்த்து விட்டுப் போ என்று சொன்னாராம்.ஆகவே அவருக்கு சீட் என்று எழுதியிருக்கிற‌து.நல்லாத் தான் சீட் கொடுக்குறாங்க நக்கீரனில்..

தேர்தலில் போட்டியிட  யாருக்கு சீட் கிடைக்கும் என்பது கடைசி வரைக்கும் தெரியாமல் இருக்கும் வாய்ப்பு அதிமுக வைப்போல திமுகவில் இல்லை என்பது உண்மை தான். முன்கூட்டியே மாவட்டச் செயலாளர்களுக்குத் தெரிந்து விடும்.அவர்களும் அதற்குத் தோதாக வேலையை ஆரம்பித்து விடுவார்கள்.அந்த வழியிலும் நக்கீரனால் வேட்பாளர்கள் பட்டியலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

தொகுதிக்கு இரண்டு முதல் மூன்று பெயரை வலியுறுத்தினாலும் அந்தப்பட்டியலில் உள்ளவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.பாதிக்குப் பாதி புதிய முகங்கள் நிறுத்தப்பட்டுள்ள‌னர்.

மேலும் இந்த முறை திமுக வேட்பாளர் பட்டியலை 'தளபதி' என்று நக்கீரனால் புகழ் சூட்டப்ப‌டும் மு.க.ஸ்டாலின் தான் தேர்வு செய்துள்ளார்.அவர் மனதில் என்ன இருக்கிறது,யாரை நிறுத்தப் போகிறார் என்பதனைக் கூட துப்பறிய முடியாத நிலையில் தான் இருக்கிறது நக்கீரன்.

கடந்த 15 ஆண்டுகளாய் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை ருசி கண்ட திமுக வேட்பாளர் பட்டியல் கண்டிப்பாக கடைசி நாளில் முடிவு செய்யப்பட்டிருக்காது.

ஆக நக்கீரனின் 'துப்பறியும்' திறமை அறிவாலயத்தில் நீண்ட காலமாய் பொரி விற்கும் வயதான பெரியவருக்குத் தெரிந்த அள‌வுக்கு கூட இல்லை என்பது தான் உண்மை.

இது தான் நக்கீரனின் உண்மையான நிலை.தான் எந்தக் கட்சிக்கு காவடி எடுக்கிறதோ ? அந்தக் கட்சியில் என்ன நடக்கிற‌து..?அந்தக் கட்சியின் தலைவர் அல்ல‌து வருங்கால தலைவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று கூட ஊகித்து செய்தி போட முடியாமல் பாதிக்குப் பாதி தப்பும் தவறுமாய் வெளியிடும் நிலையில் தான் நக்கீரன் 'திறமை' இருக்கிறது.

இந்த நக்கீரன் வெளியிடும் கருத்துக் 'கணிப்புகள்' எப்படிக் களத்தில் சென்று உண்மையாய் எடுக்கப்பட்டிருக்கும்..? திமுக தலைமையையும் அதன் தொண்டனையும் மகிழ்ச்சிப்படுத்தவும் எழுதப்பட்டதேயன்றி வேறொன்றுமில்லை.உண்மையை எழுதாமல் இவ்வாறு எழுதுவது உண்மையில் அக்கட்சிக்கு எந்தப் பலனையும் தராது.கெடுதலைத் தான் தரும்.வெற்றிக்கு உழைக்க எண்ணியுள்ள அக்கட்சியின் தொண்டனை முடக்கவே உதவும்.

இப்படியே எழுதிக்கொண்டிருந்தால் இப்பொழுது வாங்கும் கொஞ்சம் திமுக காரன் கூட வாங்க மாட்டான்.அதற்குப்பிறகு ஆசிரியர் குழுவுக்கு வேலை இருக்காது.

நக்கீரன் பாலஜோதிடம்,நக்கீரன் சினிமா,நக்கீரன் ஓம்,நக்கீரன் சினிக்கூத்து போன்ற இதழ்களில் தான் நக்கீரன் ஆசிரியர் குழு கவனம் செலுத்தி துப்பறிய வேண்டியிருக்கும்.

நக்கீரன் வெளியிட்டுள்ள 'கணிப்புகள்' ஒருவேளை பலித்தால் அது 'காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை'யாகத் தான் இருக்கும்.