Monday 22 October 2012

நக்கீரனில் மனுஷ்யபுத்திரனின் ஊழல் எதிர்ப்பு -கரம் கோர்க்கும் 'யோக்கிய சிகாமணிகள்'...!




எதிர்க்குரல் என்னும் தலைப்பில் நக்கீரன் வாரமிருமுறை புலனாய்ய்ய்ய்ய்வு இதழில் மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து நாட்டு நிகழ்வுகள் குறித்து தனது விமர்சனக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.அவரது எழுத்தில் உள்ள நிறைகுறைகள் குறித்து ஒன்றிரண்டு முறை நமது பதிவுகளில் விமர்சனமும் செய்துள்ளோம்.

இந்த (அக்டோபர் 20-23,2012 தேதியிட்ட) இதழில் எதிர்க்குரலில் ஊழலின் ஓயாத அலைகள் என்னும் தலைப்பில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா,சல்மான் குர்ஷித்,வீரபத்ரசிங் ஆகியோர் ஊழல் குறித்து எழுதியுள்ளார்.

ஒன்றிரண்டு விமர்சனங்கள் அதில் இருந்தாலும் நக்கீரன் வாசகர்களுக்கு ஏற்ற கட்டுரை தான் அது.




--
அதன் கடைசிப் பகுதியை மட்டும் பாருங்கள்.

ஊடகங்களின் நேர்மை குறித்தும் அதன் செயல்பாடு குறித்தும் வெளிப்படையாய் இன்னொரு ஊடகத்தில் விமர்சித்துள்ள மனுஷ்யபுத்திரன் நிச்சயம் பாராட்டுக்கு உரியவரே..
ஆனால் அந்தப் பாராட்டைத் தெரிவிக்கும் முன்,நக்கீரன் மனுஷ்யபுத்திரனின்  விமர்சனத்தை வெளியிடுவதற்குத் தகுதியானது தானா என்பதையும்,அதையும் தாண்டி மனுஷ்யபுத்திரன் அதை எழுதுவதற்குத் தகுதியான நபரா என்பதையும் பார்ப்போம். 
##

முதலில் நக்கீரன்

நக்கீரனின் உரிமையாளரும் ஆசிரியரும் வேண்டுமானால் ஆர்.கோபாலாக இருக்கலாம்.



ஆனால் அதில் என்ன செய்திகளை வெளியிடுவது,எதனை கவர் ஸ்டோரி வைப்பது,என்னென்ன மேட்டர் இந்த இதழில் இடம்பெற வேண்டும்,யாரை விமர்சிக்க வேண்டும்,யாரைத் துதி பாட வேண்டும்,திமுகவில் யாருக்குச் செக் வைக்க வேண்டும்,யாருக்கு புகழ் மாலை சூட்ட வேண்டும்,எந்தச் செய்தியைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட வேண்டும், எதனை பூதாகரப் படுத்த வேண்டும் என்று அனைத்தையும், சுருக்கமாகச் சொல்லப் போனால் அதன் ஒட்டுமொத்த இயக்கமும் அதன் இணை ஆசிரியர் அ.காமராஜ் தான்.

கோபாலின் அதிகாரம், தம்பி இந்த இஷ்யூல 2 விளம்பரம் கூட வந்துருக்கு.மேட்டரைக் குறைச்சுக்கலாமா என்று கேட்கிற அளவிற்குத்தான். அதைத் தாண்டி சிறுசிறு வகையில் இதழில் தலையிட முடியும் என்பதுதான் அவர் எல்லை. இந்த எல்லையைத் தாண்ட  அவர் எப்போதும் துணிய மாட்டார்..

ஆக இதழின் உண்மையான ஆசிரியர் அ.காமராஜ்.உரிமையாளர் ஆர்.கோபால்.

நக்கீரனும் அதன் செய்தி ஆசிரியரும் திமுக தலைவர்கருணாநிதியை கருணாநிதி என்று சொல்லவே மறுப்பவர்கள். க்லைஞர் என்று பயபக்தியுடன் அழைப்பவர்கள்.திமுகவின்  கடைக்கோடி தொண்டனுக்கு இருக்கும் அதே உணர்வு இவர்களுக்கும்.

மேலும் கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சிக் காலம் முழுவதும்  திமுக கட்சிப் பத்திரிகையான‌ முரசொலியின்  வாரமிருமுறைபதிப்பாக‌ நக்கீரன் வெளிவந்தது.

இந்த ’சேவைக்கு’ அல்லது ’விசுவாச’த்திற்கு  சிறு அளவிளல்ல, மிகப்பெரும் அளவில் ஸ்பெக்ட்ரம் ஊழலிலேயே பங்குபெரும் அளவிற்கு நக்கீரனின் இணை ஆசிரியர் அ.காமராஜ் கருணாநிதி குடும்பத்தோடு நெருங்கியிருந்தார் என்பதும், அவரது வீடுகளில் சோதனையிடும் அளவிற்கு இது சென்றதென்பதும் ஊரறிந்து நாறிய உண்மை.

சிபிஐ விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் நக்கீரன் இணை ஆசிரியர் அ.காமராஜ்
(ஆதாரம்-இணைப்பு-1)
அந்த நக்கீரன் ஊடகங்களின் ஊழல்பற்றி நீட்டி முழங்குகிறது என்றால் அதற்கு என்ன யோக்யதை இருக்கிறது என்ற கேள்வி எழத்தானே செய்யும்.?



சரி.நக்கீரனின் யோக்கியதை இந்த லட்சணம் என்றால் அதில் இவ்வளவு விமர்சனம் எழுதிய மனுஷ்யபுத்திரனின் யோக்கியதையைப் பார்ப்போம்.

##
மனுஷ்யபுத்திரன் என்பவர் பேஸ்புக்கில் அனைவரும் விரும்பும் வண்ணம் தினசரி 4 ஸ்டேட்டஸ் போடுபவர் என்றோ,அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அரசியல்,கலை,இலக்கியம்,சமூகம் என அனைத்து பொருள்களிலும் உரையாடும் வல்லமை படைத்தவர் என்றோ அரசியல் 'ஆய்வாளர்' என்றோகுறுக்கிப் பார்க்க முடியாது.அடிப்படையில் அவர் உயிர்மை என்னும் மாதாந்திர பத்திரிகை மற்றும் பதிப்பகத்தின் உரிமையாளர் மற்றும் ஆசிரியர்.




ஆகவே அவரது நக்கீரனின் விமர்சனத்தை அவரது இதழில் வெளியான அவரது எழுத்துடன் பொருத்திப் பார்த்தால் தான் அவரது ;நேர்மை’யையும் ’நடுநிலையையும்’ நாம் அறிய முடியும்.

அதற்கு நாம் சமகாலத்திய மிகப்பிரமாண்டமான ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தும் அதில் மனுஷ்யபுத்திரனின் நண்பரான நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் பங்கு குறித்தும், மனுஷ்யபுத்திரன்என்ன எழுதியுள்ளார்  என்பதை உரசிப் பார்த்தால் முடிவு செய்யலாம்.

###

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய அதிகாரத் தரகர் நீரா ராடியா முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா,நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோருடன் நடத்திய உரையாடல் நவம்பர் 20,2010 இல் ஊடகங்களில் வெளிவந்தது.

அதை மனுஷ்யபுத்திரன் ஆசிரியராய்,முதலாளியாய்இருக்கும் உயிர்மை எப்படிக் கையாண்டது பார்ப்போமா?

உரையாடல் வெளியான பொழுது டிசம்பர் மாத இதழ் தயாரிக்கப்பட்டிருக்கும்.ஆகவே அதை விட்டுவிடுவோம்.
அதன்பின் வெளிவந்த ஜனவரி 2011 இதழில் நீரா ராடியா-கனிமொழி உரையாடல் குறித்த எந்தப் பதிவும் இல்லை.

சனவரி இதழுக்கு அடுத்து பிப்ரவரி 2011 மாத இதழில்,அதாவது உரையாடல் வெளிவந்து 2 மாதங்கள் கழித்து, நீரா ராடியா-டெல்லி அதிகார அரசியலின் தொடர்ச்சி என்னும் தலைப்பில் பாரதி மணி என்பவர் எழுதிய கட்டுரை. வெளிவந்துள்ளது.

நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் குறித்து எழுதப்பட்ட இந்த கட்டுரையைப்போல் ஒரு மகா மொன்னைத்தனமான,அயோக்கியத்தனமான ஒரு கட்டுரையை வேறு எந்த இதழிலும் எழுத முடியாது.

எப்படி என்றால் இந்தக்கட்டுரையில் நீராராடியாவுடன் உரையாடிய கனிமொழி குறித்து ஒருவரி விமர்சனம் கூட இல்லை.இவ்வளவு ஏன்?கனிமொழி என்னும் பெயரே ஒரு இடத்தில் கூட இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அப்படி ஒரு புரட்சிகர கட்டுரை.(ஆதாரம்-இணைப்பு-2)

யாரொருவர் இந்த உரையாடலின் மையப்புள்ளியோ,யாரொருவர் இவ்வளவு பெரிய ஊழல் செய்த அமைச்சருக்கு வக்காலத்து வாங்கி அவருக்கு பதவியைப் பெற்றுத் தர பிரயாசைப்பட்டாரோ அவர் குறித்த விமர்சனமோ,பெயரோ இல்லாத கட்டுரையை உயிர்மை வெளியிடுகிறது.மிகப்பெரிய அரசியல் ஆய்வாளர் மனுஷ்யபுத்திரன் ஆசிரியராக இருந்து வெளிவரும் இதழில் எப்படி இது சாத்தியம்.?ஆனால் வந்திருக்கிறதே..?

ஊடகங்கள் சந்தேகத்திற்கிடமான பல கொடுக்கல் வாங்கல்களில் டுபட்டிருக்கின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்ற மனுஷ்யபுத்திரனின் நக்கீரனின் வரிகள்இங்குஇங்கு நினைவுக்கு வருகிரது..

##

அதைப்போல 2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி இதழில் மனுஷ்யபுத்திரன் சில எண்ணங்கள் என்னும் தலைப்பில் கடந்து சென்ற 2010 ஆம் வருடம் ஊழல் வருடம் எனக்குறிப்பிட்டு அது குறித்து மொன்னையாக ஒரு தலையங்கம் எழுதுகிறார்.முரசொலி ஆசிரியர் எழுதியது போல் இருக்கிறது.

எந்த அளவுக்கு அது மொன்னையாய் இருக்கிறது என்றால் 2010 ஆம் ஆண்டு ஊழல் ஆண்டு எனக் குறிப்பிட்டு விமர்சிக்கும் அத் தலையங்கத்தில் ஸ்பெக்ட்ரம் என்னும் வார்த்தை மறந்தும் வரவில்லை.அப்படி ஒரு மொன்னை.

எதை எழுதினால் யாருக்கு வலிக்கும்.அது எங்கு இடிக்கும் என்பது அரசியல் ஆய்வாளருக்குத் தெரியாததா என்ன..?

(ஆதாரம்-இணைப்பு-3)

##

கனிமொழி கைது செய்யப்பட்ட பொழுது ஒரு தலையங்கத்தை ஜூன்  2011,உயிர்மை இதழில் எழுதுகிறார் மனுஷ்யபுத்திரன். அதில் சில பகுதிகள்.இந்த தலையங்கத்தையும் ராபர்ட் வதேராவுக்கு நக்கீரனில் எழுதப்பட்டதையும்ஒப்பிட்டுப் பாருங்கள்.
(ஆதாரம்-இணைப்பு-4)

மனுஷ்யபுத்திரனின் நேர்மை பல்லிளிப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

//
//கனிமொழியின் அரசியல் வாழ்வின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் ஒரு ஐந்தாண்டுக்குள் ஒரு முழுச் சுற்றுக்கு வந்துவிட்டது. இது மிகவும் அவலமானது. திராவிட இயக்க அரசியலில் ஒரு மாற்று அடையாளமாகவும் பெண்களின் நம்பிக்கைக் குரிய பிரதிநிதியாகவும் கருதப்பட்ட அவர் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய அவப்பெயரைத் தேடிக்கொள்வார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.//

ராஜாத்தி அம்மாளை  விட கனிமொழியை அதிகமாக எதிர்பார்த்து ஏமாந்து திராவிட இயக்கத்தின் அரசியல் வாரிசு இந்த ஊழலில் சிக்கிக்கொண்டது மிகப்பெரிய அவலம் என்று கண்ணீர் வடிக்கிறார் மனுஷ்யபுத்திரன்.

அத்தோடு அடங்கவில்லை அவரது ஆதங்கம்.

கனிமொழியை டெல்லிக்கு அனுப்பியதன் மூலம் தனது குடும்ப அரசியலில் இன்னொரு கடமையைப் பூர்த்தி செய்வதாகத்தான் கருணாநிதி நினைத்திருப்பார். ஆனால் கனிமொழி தனது தந்தையின் குடும்பங்களுக்கிடையே தனது குடும்பத்தின் இடத்தை மேலே கொண்டு வருவதற்கான கடும் மனச்சிக்கலைக் கொண்டிருந்தார். கருணாநிதியின் மூத்த குடும்பத்தின் அதிகார பலம், மாறன் குடும்பத்தின் பண, ஊடக பலம் இவற்றிற்கு சமமான ஒரு பலத்தை அவர் உடனடியாக அடைய விரும்பினார். தனது தந்தையின் வாழ்நாளுக்குப் பிறகு தான் வெகு சுலபமாக ஒதுக்கப்பட்டுவிடுவோம் என்கிற உள்ளுணர்வு அவருக்கு இருந்தது. அரசியலில் தனக்குக் கிடைத்த இந்த முதல் சந்தர்ப்பம்தான் தனக்கு இருக்கும் கடைசி சந்தர்ப்பமும் என்று அவருக்குத் தெரியும். //

இதிலிருந்து மனுஷ்யபுத்திரன் கனிமொழிக்கு வக்காலத்து வாங்க எந்த எல்லைக்கும் சென்றிருக்கிறார் என்பது புலனாகும்.

 கனிமொழியின் முறைகேட்டைக் கண்டிப்பதற்குப் பதில் அவர் ஏன் அந்த சூழ்நிலையில் இறங்கினார் என்று காரணம் தேடுகிறார்.என் இதை மனுஷ்யபுத்திரன் ராபர்ட் வதேராவுக்குப் பொருத்திப் பார்க்கவில்லை..?


ராகுல் காந்தியிடம் இருக்கும் கணக்கு வழக்கற்ற செல்வத்தைப் போல் செல்வத்தில் புரள வேண்டும் என்ற எண்ணம் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்து புதுப்பணக்காரனான ராபர்ட் வதேராவிற்கும் ஆசை வந்தது.தனது மாமியார் இருக்கும் வரை தான் தனக்குச் செல்வாக்கு.ஆகவே அதற்குள் தனது எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற மனச்சிக்கலில் சிக்கியிருந்தார் என்று எழுதவில்லை.


//கேபினட் அந்தஸ்திற்குக் குறைவான மந்திரிப் பதவி எதையும் அவர் ஏற்க மறுத்த போதே அழகிரியும் தயாநிதி மாறனுமே அவருடைய எல்லா பிரச்சினைகளுக்கு காரணம் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அவர் சம பலமற்ற ஒரு போட்டியில் துணிந்து இறங்கினார். ஆ.ராசா காட்டிய ஊழல் புதையல் யாரையும் மனப்பிறழ்வுக்கு ஆளாக்கக் கூடியது. அந்தப் புதையலுக்குப் பின்னே இருக்கும் பூதங்களைப் பற்றி யோசிக்கக் கூட அவகாசம் இல்லாதவராக கனிமொழி தனது சாகசத்தை தொடங்கினார்.//

ஆ.ராசா பேராசை காட்டிய பணப்புதையல் எப்படிப்பட்ட நேர்மையாளனையும் சிக்கவைக்கும் வல்லமை வாய்ந்தது.கனிமொழி அப்படித்தான் விழுந்தார் என்று எழுதுகிறார்.

இதே விஷயத்தை ராபர்ட் வதேராவுக்கு ஏன் மனுஷ்யபுத்திரன் பொருத்திப் பார்க்க வில்லை..?

நாட்டின் முதல் மனுஷியின் மருமகன் என்னும் அந்தஸ்து ஒருவரை எப்படிப்பட்ட செயலையும் செய்யச்சொல்லும்.ஆகவே ராபர்ட் வதேரா பின்னணியை யோசிக்காமல் காரியத்தில் இறங்கினார் என்று ஏன் சொல்லவில்லை..?

ராபர்ட் வதேரா முறைகேட்டில் மனுஷ்யபுத்திரன் வார்த்தைகளைக் கவனியுங்கள்.

எல்லாம் சட்டபூர்வமானதான இந்த விஷயத்திற்குப் பின் என்ன நடந்தது?அனுகூலங்கள் என்ன என்று அரசியல் ஆய்வாளர் மிகச்சரியாக கேள்வி எழுப்புகிறார்..?சட்டப்படி சரியாக இருக்கலாம்.ஆனால் பின்னணி என்ன..?
சட்டபூர்வமான நடைமுறைகொண்ட விஷயத்துக்கே இப்படி விமர்சனம் என்றால்,

கனிமொழியின் அப்பட்டமான ஊழலை மனுஷ்யபுத்திரன் கடுமையாக விமர்சித்திருப்பார் என்று ஆர்வமாகப் படித்தால் அ.ஆய்வாளர் அங்கு பம்மியிருக்கிறார்.
 //இந்தப் புதையலைக் கையாள்வதற்கான எந்தத் திறமையும் அவருக்கு இல்லை. ஊழல் பணத்தை இவ்வளவு வெளிப்படையாக வங்கிக் காசோலையாகப் பெற்றுக்கொண்ட ஒரே நபர் இந்தியாவில் கனிமொழியாகத்தான் இருப்பார்./ /

கனிமொழி 'திறமை' இல்லாததால் முட்டாள் தனமாக மாட்டிக் கொண்டாரே என்று பதைபதைக்கிறார்.சோக கீதம் பாடுகிறார்.படிப்பவர்கள் மனத்தில் கனிமொழி மீது பரிதாபத்தை எதிர்பார்க்கிறார்.ராபர்ட் வதேராவிற்கு எழுப்பியது போல் என்றால் எப்படிக் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்?

காசோலையாகவே 200 கோடி ரூபாயை லஞ்சமாக வாங்கினார் என்றால் திரைமறைவில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாயை வாங்கியிருப்பார்.எவ்வளவு துணிச்சல்..?அவ்வாறு வாங்கிய பணம் எங்கு போய்ச் சேர்ந்தது..?யார் அதைப் பதுக்கியுள்ளார்கள்?என்றல்லவா எழுத வேண்டும்.

ஆனால் எழுதவில்லை.இது போக மேலும் கீழும் இரண்டு வரிகள் ஒப்புக்கு எழுதி தன் நடுநிலையை முடிந்த மட்டும் நிலை நிறுத்தப் பார்க்கிறார்.ஆனால் அரிதாரம் ஒட்டவில்லை.தனியாகப் பளிச்சென்று தெரிகிறது.
உயிர்மை நிகழ்ச்சி ஒன்றில் கனிமொழி



வதேராவுக்கு ஒரு நியாயம்..! கனிமொழிக்கு ஒரு நியாயமா..?
என்ன காரணமாக இருக்கும்?

ராபர்ட் வதேரா மனுஷ்யபுத்திரனுக்கு நண்பர் கிடையாது என்பது மட்டும்  காரணம் கிடையாது.அவரால் எந்த அனுகூலமும் கிடையாது என்பது தான் உண்மை.அனுகூலம் லைப்ரரி ஆர்டர் மட்டும் தான் என்று குறுக்கிப் பார்க்கவும் நாம் விரும்பவில்லை.
இதைப்போல இன்னொரு பதிவையும் காண நேரிட்டது.

//ஆ. ராசாவும் கனிமொழியும் இவ்வளவு முட்டாள்தனமாகவா ஊழல் செய்வார்கள் என்ற ஆச்சரியத்திற்கு நடுவில், மாறன் சகோதரர்கள் இவ்வளவு ஆணவத்துடனா ஊழல் செய்வார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.//

விரித்த வலையில் விழுந்த வேடர்கள், உயிர்மை ஜூலை-2011 மாயா என்பவர் எழுதிய கட்டுரை.

(ஆதாரம்-இணைப்பு-5)
##


து தான் மனுஷ்யபுத்திரனின் நேர்மை,நடுநிலை.தனது நண்பரும் தனது வளர்ச்சியில் ’பங்கு’ கொண்டவரும் செய்யும் முறைகேட்டை அறியாமல் செய்து விட்டார் என்கிறார்.முடிந்த மட்டும் நேரடியாகவும்,முடியாவிட்டால் மறைமுகமாகவும் வக்காலத்து வாங்குகிறார்.

5000 காப்பி அச்சடிக்கும் சிற்றிதழுக்கு இப்படியென்றால் கார்பரேட் ஊடகங்கள் என்ன லட்சணத்தில் இருப்பார்கள்.அது தெரியாமல் விமர்சிக்கிறார்.

இலக்கிய சிற்றிதழ்களில் நடக்கும் கேவலமான அரசியல்,பிழைப்புவாதத்தைப் பார்த்தால் கார்பரேட் ஊடகங்கள் இவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும்.


நக்கீரன் அ..காமராஜின் நிலைக்கு சற்றும் குறையாத நிலையில்  மனுஷ்யபுத்திரன்இருக்கிறார்.
இவர்கள் இருவரும் இணைந்து ஊழல் எதிர்ப்பையும் அதில் ஊடகங்களின் கண்டுகொள்ளாமையும் நட்டநடுநிலையாய் விமர்சிக்கிறார்கள்.முடியல.

சரியான ஜாடிக்கேத்த மூடிகள்.இருவரும் கைகோர்க்கும் ஊழல் எதிர்ப்பு நாடகத்தைக் கண்டு சிந்திக்கும் வாசகர்கள் வாய்விட்டுச் சிரிக்கிறார்கள்.

ஊழல் என்பது இன்று மாபெரும் கொள்ளை நோய். இந்தக் காலகட்டத்தில் ஊழலுக்கு எதிராகப் போராடுவது என்பது ஒருவர் தனக்கு எதிராகப் போராடுவதாகும். தன்னுடைய வெற்றிக்கும் புத்திசாலித்தனத்திற்கும் எதிராகப் போராடுவதாகும்.
-மனுஷ்யபுத்திரன்

(காமன்வெல்த் போட்டிகளில் நடைபெற்ற ஊழல் குறித்து மனுஷ்யபுத்திரன் தலையங்கத்தின் ஒரு பகுதி,செப்டம்பர் 2010 இதழில்)
(ஆதாரம்-இணைப்பு-6)

தனை முதலில் நக்கீரன் காமராஜூம், உயிர்மை மனுஷ்யபுத்திரனும்  ஒருமுறைக்கு பலமுறை படிக்க வேண்டும்.படித்தால் மட்டும் போதாது அதன்படி நடக்கவேண்டும். அப்படி நடந்து கொள்வதும் கூட அவர்கள் தனக்கு எதிராகப் போராடுவதுதான். ஆனால் வாசகர்களின் அறியாமையை நம்பிப் பிழைக்கும் இவர்கள் அதற்கு எப்போதும் தயாராய் இருப்பதில்லை.


தொடர்புடைய இணைப்புக்கள்

1) http://www.hindustantimes.com/India-news/Chennai/2g-scam-probe-entangles-karunanidhi-family/Article1-638597.aspx

2) http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4051

3) http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3935

4) http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4491


5) http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4673

6) http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3492


Friday 19 October 2012

விகடன் இன்று ஒன்று நன்று-வாசகர் காசில் வைகோ விளம்பரம்...!





இதழ்களில் வரும் நேர்காணல்,திரை விமர்சனம்,கட்டுரை,செய்திப்பதிவு,துணுக்கு போன்ற ஏதாவது ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதனை தனித்தனியாக, ஊர் பாஷையில் சொல்லப் போனால், அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராயும் இன்றைய போஸ்ட்மார்ட்டம் பகுதிக்கு நாம் ஆனந்த விகடனில் வெளியாகும் இன்று ஒன்று நன்று என்ற தொலைபேசி நிகழ்ச்சியை எடுத்துக் கொள்வோம்.

ஆனந்த விகடனில் இன்று ஒன்று நன்று என்று ஒரு தொலைபேசி பதிவு நிகழ்ச்சி.ஏறத்தாழ கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது.ஆ.வி.தொலைபேசி எண்ணுக்கு காசு செலவு செய்து வாசகர் அழைத்தால் வாரம் ஒரு நபர் ஏதாவது ஒரு கருப்பொருள் குறித்தோ,சுவையான சம்பவங்கள் குறித்தோ,பாதித்த நிகழ்ச்சி குறித்தோ,தன்னம்பிக்கை,வரலாறு,சுற்றுச்சூழல்,விடாமுயற்சி என ஏதாவது ஒன்று குறித்துப் பேசுவார்.

அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் துறைசார்ந்த வல்லுனர்களாகவோ,முக்கியமான ஆளுமைகளாகவோ அல்லது எதுவும் இல்லா விட்டால் ஆனந்த விகடனின் நிருபர்களுக்குத் தெரிந்தவர்களாகவோ இருப்பர்.நிகழ்ச்சியின் நோக்கம் வாசகர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லுவதன் மூலமாக விகடன் குழுமம் தனது நிறுவனப் பெயரை அனைத்து தளத்திலும் நிலை நிறுத்துவது தான்.

இந்த நிகழ்ச்சியில் சாருநிவேதிதா, யுகபாரதி,நா.முத்துக்குமார்.சுதா ரகுநாதன்,ஐஏஎஸ் அதிகாரி சகாயம்,உதயசந்திரன்,பா.விஜய்,தமிழருவி மணியன் என நிறையப்பேர் பங்கேற்றுள்ளனர்.




இதில் ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தும் கடந்த ஏப்ரல் மாதத்தில் 2 ஆவது வாரத்தில் பங்கேற்றுள்ளார்.ஒரு மேடைப்பேச்சாளர் என்ற வகையிலும் தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிடத்தகுந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் என்ற வகையிலும் அதில் எந்த தவறும் இல்லை.மேலும் ஆனந்த விகடன் பல்வேறுதுறை பிரால்யங்களையும் அழைக்கிற வகையில் அதில் அரசியலைச் சேர்ந்த சம்பத் பேசுவது நிச்சயம் சரிதான்.

சுதா ரகுநாதனே வாசகனுக்கு உபயோகமான ஒரு செய்தியைச் சொல்கிறார் என்ற நோக்கில் தேர்ந்தெடுக்கப்படும் பொழுது நாஞ்சில் சம்பத் பல மடங்கு தகுதியானவர் தான்.ஆகவே அதனை வரவேற்கிறோம்.



ஆனால் இன்றைய 24-10-2012 தேதியிட்ட ஆனந்த விகடனைப் பார்த்தால் இன்று... ஒன்று... நன்று... இந்த வார நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத் பேசுகிறார் பேசுகிறார் என்று அறிவிப்பு வந்துள்ளது.


இந்த நிகழ்ச்சியில் இதுவரை நமக்குத் தெரிந்த அளவில் இரண்டு முறை பங்கேற்கும் வாய்ப்பு யாருக்கும் வழங்கப்பட்டதில்லை.இவருக்குத் தான் அது வழங்கப்பட்டுள்ளது.

ஆனந்த விகடன் போன்ற வணிகப் பத்திரிகையில் இரண்டாம் முறை வருமளவுக்கு இவர் மிகப்பெரிய மாஸ்ஹீரோவோ ஹீரோயினோ கூடக் கிடையாது.

அப்படியானால் இவருக்கு மட்டும் என்ன முக்கியத்துவம்? அப்படி மற்றவர்களை விட இவர் என்ன சிறப்பானவர்..?முன் மாதிரி வாழ்க்கை வாழ்பவர்..?இவர் எந்தத் துறையில் சிறந்த ஆளுமை மிக்கவர் என்பதை அறிவது அவசியம்.

ஆக அதைப் பார்ப்போம்.நாஞ்சில் சம்பத் என்பவர் யார்..?அவர் அரசியல்வாதி என அறியப்பட்டாலும் அதைத் தாண்டி ஒரு முகம் அவருக்கு உண்டு.

அரசியலைத் தாண்டி  நாஞ்சில் சம்பத்தின் தகுதி என்ன..?

பொதுவான ஒரு வாசகனின் அளவுகோலின் படி நாஞ்சில் சம்பத் அரசியலைத் தாண்டி  ஒரு பட்டிமன்ற பேச்சாளர்.அவ்வளவு தான். எந்த தலைப்பின் கீழ் எந்த அணியின் கீழ் அவர் பேசுகிறாரோ அதற்கு வலுவூட்டும் விதம் சிறப்பாகப் பேசுபவர்.இந்த அளவுகோலின் படி பார்த்தால் அவரைப்போல தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் இவரைப்போலும் இவரைவிடச் சிறப்பாகவும் இருக்கின்றனர்.

சாலமன் பாப்பையா,பர்வீன் சுல்தானா,பாரதி பாஸ்கர்,மதுக்கூர் ராமலிங்கம்,ராஜா,ஞானசம்பந்தன் என்று அந்த வரிசையை நீட்டிக் கொண்டே செல்லலாம்.இதன்படி பார்த்தால் நாஞ்சில் சம்பத் நாட்டில் எங்கும் காணக்கிடைக்காத ஆளுமை அல்ல.

இவர்கள் நிறையப்பேருக்கு இன்று ஒன்று நன்று என்ற தொலைபேசி நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்முறை கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை.

ஆனால் நாஞ்சில் சம்பத்துக்கு இரண்டாவது முறை வாய்ப்பு.இந்த வகையில் இவரது பங்கேற்பு தவறு.


அரசியல் ரீதியில்  நாஞ்சில் சம்பத் யாரென்று பார்த்தால் தமிழ்நாட்டில்  2 சதவீதம் வாக்கு வங்கி உள்ள ம.தி.மு.க. என்னும் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர்.

ம.தி.மு.க.  கட்சிக்கு கொள்கை என்ன என்று பார்த்தால் தி.மு.க.வின் கொள்கைகளை அப்படியே நகல் எடுத்தது போல் இருக்கும் ஏட்டளவில். (சில விஷயங்களைத் தாண்டி பிற அனைத்திலும்)

செயற்பாட்டளவில் என்று பார்த்தால் ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக,திமுக என ஏதாவது ஒரு கட்சியின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று விரல்விட்டு எண்ணக்கூடிய சில சீட்டுகளுக்காகவும் 'இன்னபிற காரணங்களுக்காகவும்' இடம்பெறும்.

அப்படிப்பட்ட ம.தி.மு.க.கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தான் நாஞ்சில் சம்பத்.

ம.தி.மு.க.கட்சிக்கு பொதுமக்களிடம் இருக்கும் செல்வாக்கின் படி பார்த்தால் இதே அளவுகோலின் படி விடுதலைச் சிறுத்தைகளின் ரவிக்குமார்,கவுதம சன்னா,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரதராஜன்,பாட்டாளி மக்கள் கட்சியின் கோ.க.மணி ஆகியோர் வரிசையில் வருவார்.ஆனால் இவர்களில் சிலருக்கு முதல்முறை கூட விகடன் மேடையில் வாய்ப்பு கிட்டவில்லை.

இவர்களுக்கு மட்டுமல்ல ம.தி.மு.க.வை விட மிகப்பெரும் சக்திகளான திமுக அதிமுக கட்சியியைச் சேர்ந்தவர்கள் கூட  இடம்பெறவில்லை.

மேற்கண்ட அளவுகோலின் படி பார்த்தாலும் நாஞ்சில் சம்பத்துக்கு இரண்டாவது முறை பங்கேற்பு தவறு.

மேற்கண்ட திறமையை விடுத்து இதர தகுதிகள் என்ன..?

நாஞ்சில் சம்பத் மிகச் சிறந்த அரசியல் மேடைப்பேச்சாளர் என்ற அடிப்படையில் பங்கேற்றுள்ளார் என வாதத்திற்காய் வைத்துக் கொள்ளலாமா என்று பார்ப்போம்.!

நாஞ்சில் சம்பத்தின் அரசியல் பேச்சு என்பது பட்டிமன்றப் பேச்சினையும் பங்கேற்பையும் ஒத்திருக்கும்.அவர் எந்த அரசியல் அணியில் இடம்பெறுகிறாரோ அதை ஆதரித்தும் எதிர் அணியை இகழ்ந்தும் பேசுவது வழக்கம்.பட்டிமன்றத்தைப்போல் இங்கும் பேசுவதற்கு கொழுத்த ஊதியம் உண்டு.

ஆனால் இரண்டுக்கும் இடையில் சிறு வித்தியாசம் உண்டு.பட்டிமன்றத்தில்,கருத்துக்களை சொல்ல வாய்ஜாலம் காட்டினால் போதும்.ஆனால் அரசியல் மேடையில் எதிர் அணியை கடுமையாக விமர்சிக்க வேண்டும்.அங்கங்கே மானே தேனே போட்டு கொள்கை, கோட்பாடு,தலைவரின் லட்சியம்,தியாகம் நேர்மை என தூவ வேண்டும்.

இந்த அளவுகோலின் படி பார்த்தால் திமுகவில் அந்தக்காலத்து ரகுமான்கானில் இருந்து திருச்சி சிவா உட்பட தமிழச்சி தங்கப்பாண்டியன் வரை எத்தனையோ பேர் தேறுவர்.

அதிமுகவில் பழ.கருப்பையா போன்றோரைக் குறிப்பிடலாம்.மேலும் மதிமுக வை ஒப்பிடும் பொழுது அவர்கள் மிகப்பெரிய கட்சியைச் சேர்ந்தவர்கள்.ஆனால் அவர்கள் யாருக்கும் முதல் முறை கூட வாய்ப்புக் கிட்டவில்லை.திருச்சி சிவா மட்டும் ஜூனியர் விகடன் செய்தியும் சிந்தனையில் ஒருமுறை பேசி உள்ளார்.

அந்த வகையில் பார்த்தாலும் நாஞ்சில் சம்பத் இன்று ஒன்று நன்று இந்த வார நிகழ்ச்சியில்இரண்டாம் முறை பேசுவதற்கு தகுதி அற்றவர்.

மேலும் நாஞ்சில் சம்பத் சிறந்த அரசியல் மேடைப்பேச்சாளர் என்றாலும் பேச்சில் ஆபாசம் அதிகம் இருக்கும்.அவர் எந்த அணியில் இருக்கிறாரோ அதன் எதிர் அணியைச் சேர்ந்தவர்களை ஆபாசமாகவும் அருவருப்பாகவும் திட்டுவதில் வல்லவர்.இவரது நாக்கின் நர்த்தனத்தில் சிக்காதவர்கள் யாரும் கிடையாது.

ஆக,அந்த வகையிலும் தரமான பேச்சாளர் கிடையாது.எப்படிப்பார்த்தாலும் தகுதி இழக்கிறார்.இவரை யாருடன் ஒப்பிடலாம் என்றால் திமுகவில் தீப்பொறி ஆறுமுகத்துடன் ஒப்பிடலாம்.

சிரிக்காதீர்கள்.அதுதான் உண்மை.


தீப்பொறி ஆறுமுகத்தையும் இவரையும் ஒப்பிட்டால் இவரது பிளஸ் என்னவென்றால் தீப்பொறி ஆறுமுகத்துக்கு கரிபால்டி,முசோலினி,இங்கர்சால்,சாக்ரடீஸ்,முதலாம் உலகப்போர் போன்ற இன்னபிற உலக வரலாறு தெரியாது.

(அல்லது அவருக்குத் தெரிந்திருக்கலாம், கூட்டத்துக்கு வந்திருக்கும் தொண்டனை அந்த வரலாறையெல்லாம் சொல்லி இம்சிக்க வேண்டாம் என்று நல்லவிதமாய் நினைத்திருக்கலாம்.அதனால் பேச்சினைத் தவிர்த்திருக்கலாம்.)

தீப்பொறி ஆறுமுகத்துடன் ஒப்பிடும் பொழுது நாஞ்சில் சம்பத்தின் மைனஸ் என்னவென்றால் தி.மு.க.வின் தலைமைக்கழக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம்.தனது தலைவர் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசினால் அனைவர் முன்னிலையிலும் தன் தலைவரைபோகிறபோக்கில் 4 வார்த்தையாவது கேலி,கிண்டலுடன் விமர்சிப்பார்.தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் அதனைக் கேட்பர்.அந்தத் துணிச்சல் தீப்பொறி ஆறுமுகத்துக்கு இருந்தது.

ஆனால் நாஞ்சில் சம்பத் தன் தலைவரை அவர் பங்கேற்கும் கூட்டத்தில் பேசும் பொழுது ஒரு வரி கூட விமர்சித்தது இல்லை.அவரது துணிச்சல் இவ்வளவு தான்.இத்தனைக்கும் நாஞ்சில் சம்பத் கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர்.

ஒருவர் சிறிய கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர்.இன்னொருவர் பெரிய கட்சியின் தலைமைக்கழக பேச்சாளர். ஆக சில மைனஸ்கள் இருந்தாலும் தீப்பொறி ஆறுமுகத்தையும்,நாஞ்சில் சம்பத்தையும் ஒரே தட்டில் வைக்கலாம்.

ஆனால் இதுவரை தீப்பொறி ஆறுமுகம் ஆ.விகடனின் இன்று ஒன்று நன்று நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிட்டவில்லை.ஏனென்றால் அவருக்கு ஆனந்த விகடனில் யாரையும் தெரிந்திருக்காது.ஆனால் நாஞ்சில் சம்பத்துக்கு இரண்டாம் முறை வாய்ப்பு.

இந்த அளவுகோலின் படியும் இன்று ஒன்று நன்று நிகழ்ச்சியில் இரண்டாம் முறை பங்கேற்க தகுதியில்லாதவர் தான்.

மேற்சொன்ன அத்தனை வழிமுறைகளின் படியும் நாஞ்சில் சம்பத் தகுதி இல்லாதவர்.ஆனாலும் இரண்டாம் முறை இடம்பெறுகிறார்.

##

சரி அவர் இரண்டாம் முறை பங்கு பெறுவதற்கு அவர் தகுதி இல்லாதவர் என்றாலும் அவர் பேசும் தலைப்பும் சொல்லும் செய்தியும் முக்கியமானதாக இருக்கிறதா என்று பார்த்தோம்.

அவர் பேசும் பொருள் இந்த சூழ்நிலையில் எல்லோருக்கும் அவசியமான ஒன்றாகவும் மிகச்சிறப்பான ஒரு தலைப்பில் அமைந்ததாகவும்  இருந்தாலோ.அல்லது அனைவரும் விரும்பும் வண்ணம் சுவாரசியமானதாகவும் வணிக நோக்கில் விகடன் நிறுவனத்திற்கு அதிக வரவேற்பு கிட்டுவதாகவும் இருநதால் கூட அவரது இரண்டாம் முறை பங்கேற்பு சரிதான். 

அந்த நோக்கில் என்ன பேசுகிறார் என்று பார்ப்போம்.

இதில் முதல் பத்தி மட்டும் தான் உண்மை.பிற அனைத்தும் பின்னிணைப்பு மட்டும் தான்.ஆக முதல் பத்தியை மட்டும் பார்ப்போம்.





கடந்த 28 ஆம் தேதியில் இருந்து பத்திரிகைகளில் வந்த செய்திகள் என்னைப் பாடாய்ப்படுத்துகின்றன.வைகோவை விட்டுப் பிரிந்து விடுவேனோ என்று எல்லொருக்கும் சந்தேகம்.அந்தச் சந்தேகத்தை தீர்க்க வருகிறேன்.எனக்கும் வைகோவுக்கும் உள்ள உறவை உங்கள் முன்னால் உரக்கச் சொல்ல வருகிறேன்.கேட்கத் தயாரா..?

கடந்த 28 ஆம் தேதியில் இருந்து பத்திரிகைகளில் வந்த செய்திகள் என்னைப் பாடாய்ப்படுத்துகின்றன.//உங்களைப் பாடாய்ப்படுத்தினால் அதுக்கு நாங்க தானா கிடைச்சோம்.?

வைகோவை விட்டுப் பிரிந்து விடுவேனோ என்று எல்லோருக்கும் சந்தேகம். அந்தச் சந்தேகத்தை தீர்க்க வருகிறேன். எனக்கும் வைகோவுக்கும் உள்ள உறவை உங்கள் முன்னால் உரக்கச் சொல்ல வருகிறேன்.கேட்கத் தயாரா..?

//உங்க கட்சிக்காரனுக்கு சந்தேகம் இருக்கும்.எங்களுக்கு என்ன..?நாங்க சங்கொலி படிக்கிறோமா என்ன..?அவனவன் பிழைப்பைப் பார்க்கவே நாயா ஓடிக்கிட்டிருக்கான்.இதுல நீங்க பிரிஞ்சா என்ன இணைஞ்சா எங்களுக்கு என்ன..?
###




ஆக இந்த வழிமுறைப்படி பார்த்தாலும் இவர் பேசும் செய்தி கண்டிப்பாய் விகடனின் பலதரப்பட்ட வாசகர்கள் எல்லோருக்கும் அவசியமானதாகவோ அல்லது நாட்டுக்கு உபயோகமானதாகவோ இல்லை. அனைவருக்கும் பொதுவானதாகவும் இல்லை.

நாட்டில் ஓட்டரசியலில் பல்வேறு சமரசங்களுடன் இருக்கும் எத்தனையோ கட்சிகளில் மதிமுக வும் ஒன்று.அதுவும் தேடிப்பார்க்கும் நிலையில் உள்ள மிகச்சிறிய கட்சி.அதில் அதன் பொதுச்செயலாளருக்கும் அதன் கொள்கைப்பரப்புச் செயலாளருக்கும் ஒரு ஊடல்.அது கண்டிப்பாய் கொள்கை சார்ந்தது இல்லை.பணமோ பதவியோ சார்ந்தது.சில பஞ்சாயத்துக்களுக்குப் பிறகு பிரச்சனை சரிசெய்யப்படுகிறது.அல்லது தற்காலிகமாக சமரசமாகி உள்ளது போன்ற தோற்றம் தருகிறது.

அந்தரங்கத்தில் பிணக்கைச் சரிசெய்த பின் தனக்கும் தலைவருக்கும் உள்ள உறவை பெருமையுடன்(!) நாட்டுக்குப் பெருமையுடன் சொல்லுகிறார்.அதற்கு விகடன் நிறுவனம் இன்று ஒன்று நன்று என்ற தலைப்பிட்டு நமது காசில் ஏற்பாடு செய்து தருகிறது.

காசு கொடுத்துப் படிக்கும் விகடன் இளிச்சவாயனா என்ன..?

என்ன கொடுமை இது..?

மேலும் மதிமுக ஒன்றும் புதிதாய் உடையும் கட்சி அல்ல.அந்தக் கட்சி ஏற்கனவே பலமுறை சுக்குநூறாய் உடைந்த கட்சி தான்.அதன் அவைத் தலைவரே சில வருடங்களுக்கு முன் கட்சி மாறி விட்டார்.

இந்த லட்சணத்தில் இவர் தலைவருக்கும் தனக்குமான ஆத்மார்த்த உறவைச் சொல்றாராம்.வேற வேலை இல்லை பாருங்க வாசகனுக்கு.அதை நாம் காசு செலவழிச்சு போன் செய்து கேட்கணுமாம்.விகடனை செலவில்லாத மதிமுக மேடையாக மாற்றும் இந்த அவலம் என்று நிற்கும் என்ரு தெரியவில்லை.

மேலும் வணிக ரீதியிலும் பார்த்தாலும் விகடனுக்கு இது வெற்றியைத் தராது.

இதற்குப் பதில் இன்று ஒன்று நன்று நிகழ்ச்சியில் இந்த வாரம்,நடிகர் பிரபுதேவா தன் வாழ்க்கையில் கடந்து வந்த காதலைச் சொல்லுகிறேன் என்ற அறிவிப்பை வைத்திருந்தாலோ இதைவிட பல மடங்கு சுவராசியமானதாகவும் வணிகரீதியில் வெற்றியையும் பெற்றிருக்கும்.ஏனென்றால் விகடன் வாசகனிடம் நாஞ்சில் சம்பத்துக்கு இருக்கும் வரவேற்பை விட பிரபுதேவாவுக்கு இருக்கும் மதிப்பு அதிகம்.

இல்லை இந்த வாரம் அரசியல் தான் என்று முடிவு செய்திருந்தால் நாட்டில் எத்தனையோ அரசியல் பிரபலங்கள் இருக்கிறார்களே அவர்களிடம் கொடுத்துப் பேச வைத்தியிருக்கலாம்.
அவர்களுக்கு முதல் வாய்ப்பாவது கிட்டியிருக்கும்.வாசகர்களுக்கும் புதியவர்களின் குரலில் புதிய செய்தியோ அல்லது புதுசா ஒருவரிடம் பேசினோம் என்ற நினைப்பாவது கிட்டியிருக்கும்.

அதை விடுத்து ஆசிரியர் குழுவில் இருப்பவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்,அறிந்தவர் கதையையும் உறவையும் வாண்டடாகச் சொல்லச் சொல்வது,தாங்கள் அறிந்த புரட்சியாளர்களுக்கு வாசகன் செலவில் மைக்செட் போட்டு மேடை அமைத்து த் தருவது போன்றவை கொடுமையாக இருக்கிறது.வாசகனை இழிவு படுத்துவது போல இருக்கிறது.

இல்லைநாங்கள் எங்கள் விருப்பப் படித்தான் செய்வோம்.அது வாசகனின் தலையெழுத்து,நீங்கள் யார் அதைக்கேட்க என்று தெனாவட்டாய் நடந்தீர்கள் என்றால் நீங்கள் தொடர்ந்து இதைவிட இன்னும் விரிவாகவும்,ஆதாரபூர்வத்துடனும் இப்பொழுதை விட காத்திரமான வார்த்தைகளுடனும் தொடர்ந்து விமர்சிக்கப்படுவதை எங்களாலும் தவிர்க்க முடியாது.

இப்பொழுதைக்கு இந்த அத்தியாயம் நிறைவு பெறுகிறது.

தொடர்புடைய இணைப்புக்கள்.

http://kalakakkural.blogspot.in/2012/10/blog-post_4.html