Monday 14 July 2014

சிந்தனைக் களமா இது..? சிந்திக்குமா தி இந்து..!



தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் அ.வெண்ணிலா

' தி இந்து ' தமிழ் நாளிதழில் கடந்த 10 ஜூலை 2014 அன்று என் மகள் இன்றைக்கு அரசுப் பள்ளி மாணவி!- ஒரு ஆசிரியர்-தாயின் அனுபவம் என்னும் தலைப்பில் சிந்தனைக்களம் பகுதியில் ஒரு சிறப்புக்கட்டுரை வெளியாகியிருக்கிறது.

இந்த சிறப்புக் கட்டுரையை அ.வெண்ணிலா என்பவர் எழுதியிருக்கிறார். இவர் சொந்த ஊர் வந்தவாசி . தனது 18 வயதிலிருந்து அரசுப்பள்ளியில் ஆசிரியராய் பணி புரிந்து வருகிரார்.23 ஆண்டுகள் பணி அனுபவம். இவர் கல்வி கற்றதும் அரசுப்பள்ளியில் தான்.இவரது தந்தையும் அரசுப்பள்ளி ஆசிரியர் தான் (ஓய்வு). 

தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் அங்கம் வகிக்கிறார். மாநில அளவில் அதன் மேடைகளில் தமிழ் மொழி, கல்வி மற்றும் பல சங்கதிகள் குறித்து எவ்வளவோ உரைகளை ஆற்றியிருக்கிறார். சமச்சீர் கல்வி குழு பாடத்திட்ட தயாரிப்பில் ஓர் ஆசிரியராக மட்டுமின்றி அறியப்பட்ட எழுத்தாளராகவும் அ.வெண்ணிலா இருக்கிறார்.

இவருடைய இந்தக் குறிப்பிட்ட கட்டுரை சிந்தனைக் களம் பகுதியில் சிறப்புக் கட்டுரையாக‌,( தி இந்து அப்படித்தான் கட்டம் கட்டுகிறது) முன்பு இதே நாளிதழில் இன்னொரு எழுத்தாளரும் பள்ளி ஆசிரியருமான இமையம் அவர்களின் பேட்டியை அடுத்து வெளியாகியிருக்கிறது.

நிற்க, இமையத்தின் கருத்துகள் தொடர்பாக நிறைய எதிர்வினைகள் வெளிப்பட்டிருந்ததாலும், அ.வெண்ணிலாவின் சிந்தனைக் கட்டுரை, அவரும் ஒரு பள்ளி ஆசிரியர் என்பதால், கூடுதல் கவனத்தையும் முக்கியத்துவதையும் பெறுவதில் வியப்பு இல்லை.

வெண்ணிலாவின் கட்டுரையில் அனைவரைப்போல நாமும் எதிர்பார்த்தது அரசுப் பள்ளியில் கற்பித்தல் மற்றும் கற்றலில் எதிர்கொள்ளும் சவால்கள், கிராமப்புற மாணவர்கள் மற்றும் கிராமப்புற பள்ளிகளின் இன்றைய நிலை, மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் போன்ற‌, இன்னும் பல புதிய செய்திகளைத் தான். அதுவும் கட்டுரையாளர் சமச்சீர் கல்வி என அறியப்பட்ட பொதுப் பாடத்திட்டப் பாடங்கள் உருவாக்கத்தில் முக்கியப் பங்களித்தவர் என்பதால் நம்முடைய எதிர்பார்ப்பும் அதிகமாய் இருந்தது.

ஆனால், அவரின் இந்த சிந்தனைக் கட்டுரையைப் படித்தபின், இக் கட்டுரையை வெளியிட்ட 'தி இந்து' அலுவலகத்துக்கு நேரே சென்று, இந்தப் பக்க‌த்தின் பொறுப்பாளரை சந்தித்து, நறுக்கென நான்கு கேள்வி கேட்க வேண்டும் என்ற ஆத்திரம் தான் வந்தது. ஆனால் எரிபொருள் தான் விரயம் ஆகும் என்பதால் அதனைத் தவிர்த்து விட்டோம்.

இந்தக் கட்டுரை குறித்து இப்பொழுது பார்ப்போம். இது தான் அந்தக் கட்டுரையின் இணைய இணைப்பு

இந்தக் கட்டுரை குறித்த நமது சிறு விமர்சனம்.

'என் மகள் இன்றைக்கு அரசுப் பள்ளி மாணவி!- ஒரு ஆசிரியர்-தாயின் அனுபவம் ' என்னும் தலைப்புடன் வெளிவந்திருக்கிற‌து. பொதுவாக தலைப்பு பத்திரிகை அலுவலகத்தில் தான் வைக்கப்ப‌டும். இங்கு கட்டுரையாளர் ஆசிரியர் என்பதால்  அவர் வைத்தாரா ? என்று தெரியவில்லை.

ஆனால் தலைப்பில் தவறு இருக்கிறது. ஓர் ஆசிரியரின் அனுபவம் என்று தான் இருக்க வேண்டும்.ஒரு ஆசிரியரின் அனுபவம் என்பது தவறு.

இனி கட்டுரைக்குள் செல்வோம்.

// மகளை எங்கு சேர்ப்பது என்று அப்போதுதான் யோசிக்கத் தொடங்கினோம்.மேலே சொன்ன எந்த ஊரின் பள்ளியில் சேர்ப்பது என்றாலும் மகளை விடுதியில் சேர்க்க வேண்டும். பதினான்கு வயதுக்குள் விடுதி வாழ்க்கையா என்று எனக்கே பீதியாக இருந்தது. அங்கு கொடுக்கப்படும் சாப்பாடு, நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள், இரண்டாண்டுகளில் மாணவர்களுக்குத் தரப்படும் மனநெருக்கடிகள், அங்கு நடக்கும் மாணவர்களின் தற்கொலைகள் இவற்றையெல்லாம் கேட்டறிந்த பிறகு மதிப்பெண் அறுவடை நிலையங்களான இந்தப் பள்ளிகளே வேண்டாம் என்று முடிவுசெய்தோம். //

14 வயதிலேயே மகளை விடுதியில் சேர்ப்பது குறித்த தயக்கத்தாலும் அங்கு சேர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்த அச்சத்தினாலும் உள்ளூரில் இருக்கும் பள்ளிகளில் சேர்ப்பது குறித்த எண்ணம் அ.வெண்ணிலாவுக்குத் தோன்றியிருக்கிறது. மேலே சொன்ன ஊர்களில் மேற்கண்ட குறைபாடுகள் இல்லாத தனியார் பள்ளிகள் இருந்திருந்தால் அங்கேயே சேர்த்திருப்பார்.

அதன் பின் உள்ளூர் தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளியில் சேர்க்கலாமா என்பது குறித்த எண்ணம் எப்பொழுது துளிர் விடத் துவங்கியிருக்கிறது என்றால்...

//23 ஆண்டுகள் அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டு, அரசாங்கத்திடமிருந்து நல்ல ஊதியத்தைப் பெற்று என்னை நடுத்தர வர்க்கத்துக்கு உயர்த்திக்கொண்டு, என்னுடைய பிள்ளைகளுக்கு வசதியான தனியார் பள்ளிகளில் கல்வி கொடுத்துக்கொண்டிருப்பதற்காகப் பலமுறை குற்றவுணர்ச்சியோடும் இயலாமையோடும் இருந்த எனக்கு இப்பொழுது லேசாகத் துணிச்சல் வந்தது. //

// என்னுடைய பிள்ளைகளுக்கு வசதியான தனியார் பள்ளிகளில் கல்வி கொடுத்துக்கொண்டிருப்பதற்காகப் //

கட்டுரையாளர் அ.வெண்ணிலாவுக்கு தனியார் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே அதிக வசதிகள் கொண்ட மேம்பட்ட கல்வி கிடைக்கிறது என்ற எண்ணம் எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறது என்பதை இதன் மூலம் தெளிவாகவே அறிய முடிகிறது.

// எனக்கு இப்பொழுது லேசாகத் துணிச்சல் வந்தது //

18 வயதில் பணிக்குச் சேர்ந்து 23 ஆண்டுகள் அரசுப்பள்ளியில் மாதம் முப்பத்து ஒன்றாம் தேதியில் பல்லாயிரம் சம்பளமும் வருடத்தில் பாதி நாட்கள் விடுமுறை உட்பட இதர சலுகைகளையும் அனுபவித்து ஆசிரியராய் வேலை பார்த்த அ.வெண்ணிலாவுக்கு,தனியார் பள்ளிகள் தான் மேம்பட்டவை வசதியானவை என்னும் எண்ணம் கொண்டவருக்கு,அரசுப்பள்ளியில் தனது மகளைச் சேர்ப்பது குறித்து 23 ஆண்டுகால  பணிக்குப் பின்புதான் லேசாகத் துணிச்சல் வந்திருக்கிறது. நல்லவேளை இப்பொழுதாவது வந்ததே என்று எண்ணிப்பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.

//நம் பள்ளியைவிட வேறு நல்ல பள்ளி வேறெது இருக்க முடியும்? இந்த யோசனை எனக்குள் உதித்த கணம் மனசுக்குள் உடைந்த பனிக்கட்டியின் குளுமையை வார்த்தைகளில் சொல்ல முடியாது.//

அப்படியானால் இவர் 23 ஆண்டுகள் அரசுப்பள்ளிகளைத் தனியார் பள்ளிகளை விடத் தரம் குறைவானதாகவும், அதில் கல்வி கற்பவர்களையும் கற்பிப்பவர்களையும்  தகுதிக் குறைவானவர்களாகவும் தான் எண்ணியிருந்திருக்கிறார். எவ்வளவு கீழான மனப்பான்மை இது ?

அப்படியானால் தன்னிடம் பயிலும் மாணவர்களை இவர் எப்படி  நடத்தியிருப்பார்.?அவர்களுக்கு உள்ளன்போடும் இதய சுத்தியோடும் எப்படிக் கல்வி கற்றுக் கொடுத்திருப்பார்..? இவர்களெல்லாம் படித்து என்ன கிழிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம்தானே இவரின் அடிமனதில் மட்டுமல்ல செயல்பாட்டிலும் வெளிப்படையாய் இருந்திருக்க முடியும்..?

(இவர் உளவியல் முதுநிலைப் பட்டப்படிப்பு வேறு படித்தவர் என்பது கூடுதல் தகவல் )

//எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. அரசுப் பள்ளிகளுக்கு எதிராக மாணவர்களின் மனநிலை நம் வீட்டிலேயே இப்படி இருக்கிறதே என்று எனக்கு மயக்கம் வராத குறையாகத் தலைசுற்றியது. //

இது முரணாக இருக்கிறது. 23 ஆண்டுகள் அரசுப் பள்ளியில் வேலைபார்த்ததாக பெருமிதப்பட்டுக்கொள்ளும்  அ.வெண்ணிலாவுக்கே இப்பொழுது தான் அரசுப் பள்ளிகள் குறித்த மோசமான எண்ணம் லேசாக மாறியிருக்கும் பொழுது, அவர் வீட்டில் உள்ளவர்கள் வேறு எப்படி இருப்பார்கள்..? சமூகத்தின் பொதுப்புத்திதானே அவர்களுக்கு இருக்க முடியும்..? இதற்கு எதற்கு மயக்கம் வர வேண்டும்.?

வெண்ணிலாவுக்கு 23 வருடங்கள் கழித்து நம் பள்ளியை விட வேறு நல்ல பள்ளி வேறெது இருக்க முடியும் என்ற ஞானோதயம் உதித்து, மனசுக்குள் உடைந்த பனிக்கட்டியின் குளுமை உண்டானதைப்போல ,அவரைவிட கல்வி அறிவிலும், சிந்தனைத் திறனிலும் மிகவும் 'பின் தங்கிய ' வீட்டில் உள்ளவர்கள் இன்னும் 50 ஆண்டுகளில் என்றேனும் மனசுக்குள் இருக்கும் அக்கினிப் பாறை உடைந்து ஆலங்கட்டிகளின் குளுமையை உணராமலா போவார்கள்..?

கண்டிப்பாய் நடக்கும். வெண்ணிலா காத்திருக்கலாம்.

//பள்ளிக்கான ஆண்டுக் கட்டணமாக 750 ரூபாயைக் கட்டியபோது எனக்கு ஒரு கணம் ஸ்தம்பித்தது. இதுவரை ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக எத்தனை லட்சங்களை எண்ணிக் கொடுத்திருக்கிறோம் ? //

இதுவும் படு அபத்தமாய் இருக்கிறது. அரசுப்பள்ளியில் 750 ரூபாய் ஆண்டுக்கட்டணம் என்பது அப்பொழுது தான் கட்டுரையாளர் அ.வெண்ணிலாவுக்குத் தெரியுமா என்ன‌..? பக்கத்தை நிரப்புவதற்கு சங்கதிகள் இல்லாததால் வசன வார்த்தைகளைப் போட்டு நிரப்பியிருக்கிறார் என்று தெரிகிற‌து.

// “உன்கூடவே வந்து போனால் பசங்க ஃபிரெண்ட்லியா இருக்க மாட்டாங்கம்மா” என்றாள். //

இதை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.அ.வெண்ணிலா மாணவ,மாணவிகளுடன் தோழமையுடன் பழகாமல் அதிகாரத்துடன் நடந்து கொள்பவர் என்று அவரது மகளே  அளித்த சான்றிதழாகத் தான் இதை நாம் கருத வேண்டியிருக்கிற‌து.அங்கு படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளியில் பயில்பவர்களை விடத் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் ஆழ மனதில் குடிபுகுந்தவர் மாணவர்களை  எப்படித் தனக்குச் சமாமகவும் தோழமையாகவும் நடத்தியிருக்க முடியும்..? அவர்கள் எட்ட முடியாத உயரத்தில் தானே இவர் தன்னை வைத்திருப்பார். 

//அன்று மாலை வீட்டுக்கு வந்தவுடன், “எப்படிடா இருந்தது வகுப்புகள்?” என்றேன். “ம்மா...சூப்பர்ப்மா… எல்லா டீச்சரும் நல்லா நடத்துறாங்க...” என்றாள். //

நல்லவேளை வெண்ணிலா போன்ற ஆசிரியர்கள் அங்கு இல்லை போலிருக்கிற‌து.இதில் பாராட்டுக்குரியவர் 14 வயது நிரம்பிய அவரின் குழந்தைதான். சமூகத்தில் ஒட்டாத தாய்(தந்தையும்தான்), குழந்தை வாழும் குடும்பச் சூழல், குழந்தையின் நண்பர்கள் மற்றும் புறச்சூழல்கள் ஆகிய அனைத்தும் தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தையின் விருப்பத்தை அதிகப்படுத்துவதாக இருந்தாலும், அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக கொஞ்சம் வலுக்கட்டாயமாய் அரசுப் பள்ளியில் சேர்த்தாலும், முதல் நாளே அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் ஒன்றிவிட்டதாகவும் அந்தச் சூழல் பொருந்தியிருப்பதாகவும் சொன்னதாய் எழுதியிருக்கிறார்.

கட்டுரையாளர் அ.வெண்ணிலா மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்  ராஜேந்திரன் இருவரும் தொகுத்த நூலான 'வந்தவாசிப்போர் -250' நூலை (அப்பொழுதைய ) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு வெளியிட உணவுத்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு பெற்றுக் கொள்கிறார்.

புகைப்படத்தில் திரு.தங்கம் தென்னரசு,திரு.எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.மு.ராஜேந்திரன் ஆகியோருடன் அ.வெண்ணிலா.


****

இந்த சிற‌ப்புக் கட்டுரையை படித்த பின்பு 'தி இந்து' நாளிதழில் இவரைப்போல அரசுப் பள்ளி ஆசிரியரான இமையம் அவர்கள் ஜூன் 26,2014 தேதியிட்ட அளித்த நேர்காணலில் இருந்து ஒரு பகுதியை மேற்கோள் காட்ட விரும்புகிறோம்.

//அரசுப் பள்ளிகளின் தொடர் வீழ்ச்சிக்கு எது அடிப்படைக் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

ஆசிரியர்களோட பொறுப்பற்றத்தனம், அதிகாரி களோட அக்கறையின்மை, தனியார் பள்ளியில, அதுவும் ஆங்கிலத்தில படிச்சாதான் வேலை கிடைக்கும்கிற பெற்றோர்களோட மூடநம்பிக்கை எல்லாமும்தான் இதுக்குக் காரணம். ரொம்ப அடிப்படையா சொல்லணும்னா, அரசுப் பள்ளின்னா தரமற்றது, அரசு மருத்துவமனைன்னா தரமற்றது, அரசு நிர்வாகம்னாலே தரம் கெட்டது அப்படிங்கிற எண்ணம் சமூக உளவியலா இங்கே உருவாயிடுச்சு.//

இமையம் சொன்னது வெண்ணிலாவுக்கு பொருந்தும். அதுவும் ஆசிரியர்,பெற்றோர் என இரண்டு பாத்திரத்தையும் அ.வெண்ணிலா வகிக்கிறார்.ஆக அரசுப்பள்ளிகளின் வீழ்ச்சிக்கு வெண்ணிலாக்கள்தான் காரணம்.

இதற்கு ஏதுவாய் வெண்ணிலாவின் பழைய நேர்காணலில் ஒரு பகுதி.

 //பதினெட்டு வயதிலேயே ஆசிரியர் ஆகிவிட்டேன். வேண்டா வெறுப்பாகத்தான் ஆசிரியர் பொறுப்பேற்றேன். ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆரம்ப காலங்களில் அழுது அடம்பிடித்துக் கொண்டுதான் பள்ளிக்கு போவேன்.   ஒவ்வொரு நாட்டின் தலைவிதியும் வகுப்பறையில் தான் நிர்ணயிக்கப்படுகின்றன  என்று நேரு சொல்வதை மெல்ல மெல்ல உணர்ந்தேன்.// இது நக்கீரன் நேர்காணலில் அ.வெண்ணிலா சொன்னது.

ஆனால் பேட்டியில் சொன்னது  போல இன்னும் வெண்ணிலா மாறவில்லை என்று தெரிகிறது. இன்னும் வேண்டா வெறுப்பாகத்தான் ஆசிரியர் பொறுப்பில் இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. முன்பு இளம்பிராயம் என்பதால் வெளிப்படையாய் அழுது அடம்பிடித்திருக்கிறார். இப்பொழுதோ வயதாகி விட்டபடியாலும் சமுகத்தில் ஒரு அந்தஸ்து கிட்டி விட்டபடியாலும், மனதுக்குள் ஆசிரியப்பணியின் மீதான வெறுப்பை மறைத்து வைக்கும் லாவகம் கைகூடியிருக்கிறது என்று நம்புவோம். அதே சமயம். அரசு கொடுக்கும் பல்லாயிரம் சம்பளத்தையும் வேண்டா வெறுப்பாகத் தான் இவர் வாங்கியிருப்பார் என்று நம்புவோம்.

அது மட்டுமல்ல.இவர் அரசுப் பள்ளியில் வேலை பார்க்கிறார். இவர் அங்கம் வகிக்கும்  த.மு.எ.க. சங்கம் தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்துகிறது. இவரும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சமச்சீர் பாடத் தயாரிப்புக் குழுவில் அங்கம் வகித்திருக்கிறார். ஆக தான் பணிபுரியும் அரசு வேலைக்கு மட்டுமல்ல, தான் அங்கம் வகிக்கும் கட்சியின் கொள்கை, பேசும் பேச்சுக்கள் அனைத்துக்கும் உண்மை இல்லாமல் இவர் இருந்திருக்கிறார். 23 ஆண்டுகள் கழித்து தன மகளை அரசுப் பள்ளியில் சேர்த்ததை ஒரு மாபெரும் சாதனையாய் கட்டுரை வேறு வடித்திருக்கிறார்.தி இந்து அதனை பெருமையுடன் வெளியிட நாம் காசு கொடுத்து வாங்கிய பாவத்துக்காய் படித்துத் தொலைத்திருக்கிறோம்.

ஆக மொத்தத்தில் அ.வெண்ணிலா ஆசிரியர் பணிக்கான எந்தத் தகைமையும் அர்ப்பணிப்பையும் கொண்டிருக்க வில்லை என்பதை முழுமையாய் அறிய முடிகிறது. மொத்தத்தில் இந்தக் கட்டுரை சிந்தனைக் களத்திலோ சிறப்புக் கட்டுரையாகவோ வெளியிடுவதற்கு எந்தத் தகுதியும் இல்லாத ஒன்று என்பதை ஆணித்தரமாகச் சொல்லமுடியும்.
****


இந்தக் கட்டுரையை வெளியிட்ட 'தி இந்து' நடுப்பக்க பொறுப்பாளருக்கு  நாம் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்.

அ.வெண்ணிலா ஆசிரியர்,கவிஞர்,எழுத்தாளர்,சமூகச் செயற்பாட்டாளர்,பதிப்பாளர்  என பல அடைமொழியுடன் வலம் வரலாம். அதில் அவர் குறித்த பங்களிப்புகள் கூட‌ செய்திருக்கலாம். அது குறித்து நீங்கள் நூல் விமர்சனம் எழுதலாம், கருத்து வாங்கிப் போடலாம். அது உங்கள் விருப்பம். (சில வாரங்களுக்கு முன்பு கூட‌  இந்திய ஆட்சிப் பணியாளர் ராஜேந்திரனும் அ.வெண்ணிலாவும் இணைந்து எழுதிய ஒரு கட்டுரை தி இந்து நடுப்பக்கத்தில் வெளியாகியிருந்தது. )

ஆனால் அ.வெண்ணிலா எதை கிறுக்கினாலும் அதைப் பிரசுரித்து வாசகன் மூளையில் திணிக்க வேண்டுமா என்ன..?  கட்டுரையை முழுமையாய் ஒருமுறைக்கு பல முறை வாசியுங்கள்.அது பிரசுரிக்கத் தகுந்த தகுதியுடன் இருந்தால் பிரசுரியுங்கள்.

இந்தக் கட்டுரையை அவர் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் என்ற முறையில் எழுதியிருக்கிறார். ஆனால் ஆசிரியருக்கான அர்ப்பணிப்பையும்,அரசுப்பள்ளியில் பணிபுரிந்ததற்கான கடமையையும் கொண்டிருக்க வில்லை என்பதை மட்டுமல்ல, அவர் எழுதிய கட்டுரையும் அதற்கான தகுதியில் இல்லை என்பதையும்,மேலும் இதுவரை அவர் பேசிய அரசியலுக்கும் முற்றிலும் முரணாய் இருக்கிறது என்பதை அவரது வார்த்தைகளில் இருந்து மேலே எடுத்துக் காட்டியிருக்கிறோம்.

அதை விடுத்து அவர் பிரபலம் என்பதற்காகவோ, உங்களின் கைபேசிப் பதிவில் அவரது பெயரும் எண்ணு ம் இருக்கக்கூடும் என்பதிலிருந்தோ அல்லது பக்கங்களை கடமைக்கு நிரப்பவேண்டும் என்பதற்காகவோ, படிக்கும் வாசகனை மடையன் எனக் கருதியோ யாரோ எதைப் பற்றி எழுதினாலும் வெளியிட்டு விடுவீர்களா?
*

ந‌மது சிற்றறிவுக்கு எட்டியபடி, அ.வெண்ணிலாவின் இந்தக் கட்டுரையை பத்திகளாக‌ச் சுருக்கி இமையம் நேர்காணலுக்கு எதிர்வினையாய் வாசகர் கடிதத்தில் வெளியிடலாம். அதைத் தாண்டி இதை வெளியிடுவதற்கு எந்த தகுதியும் இல்லை.
அதற்கான மாதிரியையும் இணைத்துள்ளோம். அந்தக் கடிதம் இப்படியும் இருக்கலாமோ ?

/ நான் வந்தவாசி அரசுப் பள்ளியில்  23 ஆண்டுகளாய்ப் பணிபுரிகிறேன். அங்கு சம்பளம் வாங்கினாலும் எனக்கு அரசுப் பள்ளி என்றால் ஓர் இளக்காரமும், தவறான எண்ணமும் இருந்தது. அதனால் எனது பணியில் நான் உரிய கவனம் செலுத்தியதில்லை. ஆனால் கடந்த மாதம் தான் இந்த எண்ணம் தவறானது என்பதை அறிந்தேன்.அதன் பிறகு தான் எனது மகளை அரசுப்பள்ளியில் கல்வி கற்க வைக்க முடிவு செய்தேன்.அதற்கு அனைத்துத் தரப்பிலும் கடும் எதிர்ப்பு இருந்தது.ஆனால் எனது கண்டிப்பு மற்றும் உறுதியின் காரணமாய் அதில் வெற்றி பெற்றேன்.முதலில் இதனை கடுமையாய் எதிர்த்த எனது 14 வயது மகளும் இப்பொழுது மிகுந்த மகிழ்ச்சியுடன் பள்ளி சென்று வருகிறாள்.
எனக்கு நல்ல கல்வியை மட்டுமல்ல நல்ல பொருளாதார வாழ்க்கையையும் இன்று சமூகத்தில் ஓர் அந்தஸ்தையும்  அளித்த அரசுப் பள்ளி எனது மகளின் வாழ்க்கையையும் மேம்படுத்தும் என நம்புகிறேன். நீங்களும் அரசுப்பள்ளி குறித்து தவறான எண்ணம் வைத்திருந்தால் மாற்றி விடுங்கள்.

இப்படிக்கு,
அ.வெண்ணிலா,
ஆசிரியை.அரசுப்பள்ளி.வந்தவாசி-604408,
திருவண்ணாமலை மாவட்டம்.

 
சிந்திக்குமா இந்து..?





3 comments:

Unknown said...

ஒன்னும் கவலை படாதீங்க.. இந்த றேஞ்சுல போனா தி இந்து என்று ஒரு பத்திக்கை வந்தது என்ற நாளும் வரலாம்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
எல்லோரிடமும் தங்களைப்போல எண்ணம் வளருமாக இருந்தால் மக்கள் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி உருவாகும்... நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

truth alone triumphs said...

NANGU SONNEER THIRUNDHUMA HINDU?