Wednesday 14 May 2014

ஆரிய உதடுகள் உன்னது;திராவிட உதடுகள் என்னது...!




டந்த மே 18 அன்று சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் வெடிகுண்டு வெடித்து ஒருவர் பலியான சம்பவம் நிறைய பத்திரிகையாளர்களை திரைக்கதையாளர்களாக மாற்றியுள்ளது.காவல்துறை மற்றும் விசாரணை அமைப்புக்கள் இது குறித்து அதிகாரபூர்வமாய் எதுவும் சொல்லாத நிலையில்,இந்த 'புலனாய்வு' இதழ்கள் அவரவர்க்குத் தோன்றிய வகையில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் அவர்களின் 'எஜமானர்களின்' (மாதச் சம்பளம் கொடுப்பவர்கள் மட்டுமல்ல‌...) விருப்பத்திற்கு ஏற்பவும் கதைகளை கருத்தாக  நிறுவுகின்றனர்.இதில் அனைத்துப் பத்திரிகைகளும் ஒரே தொனியில் தான் ஒலிக்கின்றன.தொடர்ச்சியாக நடப்பு இதழ் வரை எழுதித் தள்ளிக் கொண்டிருக்கின்றன.



சம்பவம் நிகழ்ந்த உடன் பதிப்பாளரும், திமுக சார்பு நிலை கருத்தாளரும் ஆன திரு.மனுஷ்யபுத்திரன் ஒரு கருத்தினை தனது முகநூலில் எழுதியிருந்தார்.அது சரியாக அனைவருக்கும் பொருந்துகிறது.இன்னும் சொல்லப்போனால் மனுஷ்யபுத்திரன் நீண்ட நாள் கட்டுரை எழுதிய 'நக்கீரனுக்கு' அது அச்சுப்பிசகாமல் பொருந்துகிறது.






மோடி பிரதமரானால் என்ன நடக்கும் என்று ரயிலில் குண்டு வெடித்து உயிர்ப்பலியை நிகழ்த்தி இஸ்லாம் தீவிரவாதிகள் ஒத்திகை காட்டினார்களாம்.இதை விட அபத்தமாகவும் முட்டாள்தனமாகவும் ஒரு கருத்தை எந்த மடையனாவது சொல்லுவானா..?

இந்தக் குண்டுவெடிப்பினால் யாருக்கு லாபம் என்பது சிறு குழந்தைக்கு கூடத் தெரியும் நிலையில்,குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் 6 கட்டத் தேர்தல்கள் மட்டுமே முடிவடைந்த நிலையில், 
இதனால் பொதுமக்களிடத்தில் ஏற்படும் வெறுப்பும் அனுதாபமும் ஆதாயமும் பாரதிய ஜனதாவுக்குத் தான் கிட்டும் என்பது அறியாத முட்டாள்களா.. குண்டு வைத்தவர்கள்..? ஆனாலும் அடிப்படை அறிவு சிறிதும் இல்லாமல் நக்கீரன் எழுதியிருக்கிறது. 

இந்தத் திரைக்கதையை எழுதியவர்களில்  தலைமை நிருபர்  தாமோதரன் பிரகாஷ் என்பவரும் ஒருவர். இவர் தன்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வதில் அலாதிப்பிரியம் காண்பவர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினர். பிரகாஷ் கம்யூனிஸ்ட் என்றால் பாவம் உண்மையான கம்யூனிஸ்ட்க்கு இதை விட வேறு அவமானமில்லை.

 நக்கீரனும் அதன் நலம் விரும்பிகளும் அதன் அடிப்பொடிகளும் அதனை  'திராவிட' ஆதரவுப் பத்திரிகையாக எப்பவும் சொல்லிக் கொள்வதை விரும்புகிறார்கள்.ஆனால் இஸ்லாமியர் குறித்த செய்திகளில் மட்டும் அது  எப்பொழுதும் வன்மத்தை மட்டுமே கக்குகிறது.

திராவிடம்,திராவிடப் பாரம்பரியம் என்று சொல்லிக்கொண்டு 'பக்தி' நடத்தும் கோபாலுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்..?



டுத்தது ஜூனியர் விகடன்.இந்த மாதிரி சம்பவங்கள் என்றாலே உடனடியாக வரிந்து கட்டி களத்தில் இறங்கும் அதன் சிறப்புச் செய்தியாளர்பாலகிஷன் தான் இதை எழுதியிருக்கிறார்.மற்ற‌ நேரம் உங்க பேரில் ஒரு பைலைன் கூட வர மாட்டிக்குதே ? ஏன் சார்..?

வெட்டியாகவே சீனிவாசனிடம் சம்பளம் வாங்குவீங்களா..?

இவர் குறித்து நாம் ஏற்கனவே ஒரு பதிவு எழுதியுள்ளோம்.அதைப்படித்தால் இவர் குறித்து உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியும்.

மே 11,2014 தேதியிட்ட ஜூனியர் விகடன்.//

குறைந்த செலவு... எளிதில் கிடைக்கக் கூடிய வெடிப்பொருட்கள்... மிக அதிக சேதம்... இந்த மூன்றும்தான் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினரின் ரத்தம் சிந்தவைக்கும் ஃபார்முலா! சென்னையில் வெடித்த குண்டு திட்டமிட்டபடி ஆந்திர எல்லையில் ஓடுகிற ரயிலில் வெடித்திருந்தால் கடும் விளைவுகளை உருவாக்கியிருக்கும். உயிரிழப்பு ஏராளமாக இருந்திருக்கும். அந்த அமைப்பினரும் இதைத்தான் எதிர்பார்த்தனர். ஆனால், ரயில் தாமதமானதால், குறி தப்பிவிட்டது.அதனால் உயிரிழப்பும் ஒன்றுடன் முடிந்துவிட்டது.

மும்பை தாஜ் ஹோட்டல் குண்டுவெடிப்புக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து டேவிட் ஹாட்லி என்கிற ஐ.எஸ்.ஐ. உளவாளி இங்கே வருகை தந்து, அதே ஹோட்டலில் தங்கி, இங்கிருந்து சில தகவல்களை பாஸ் செய்ததைப் பிறகு கண்டுபிடித்து கைதுசெய்தனர் போலீஸார். இதே பாணியில், இந்தியாவில் ஏகப்பட்ட டேவிட் ஹாட்லிகளை தயார் செய்யும் அசைன்மென்ட்டோடு இலங்கையில் முகாமிட்டிருக்கிறார் ஐ.எஸ்.ஐ-யின் முக்கிய ஏஜென்ட் ஒருவர்.

அங்கு நிர்வாகப் பொறுப்பில்  இருக்கும் இவர்தான், இப்போது தென்னிந்தியாவில் நடந்த, நடக்க திட்டமிட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களின் சூத்ரதாரி என்றும் சொல்லப்படுகிறது. இவரின் விரல் அசைவில் இயங்கும் ஆட்களில் பலரும் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார்களாம். சமீபத்தில் கைதான ஜாகீர் உசேனையும் இந்தப் பட்டியலில் ஒருவராகச் சொல்கிறார்கள். 'தமிழகத்து டேவிட் ஹாட்லி’ என்று ஜாகீர் உசேனை உளவுத் துறையினர் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள மத்திய உளவுத் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் இப்படி போகிறது...
2007-ம் ஆண்டு முதல் இந்தியாவில் எங்காவது ஓர் இடத்தில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை நடத்தி வருகின்றனர். ஆனால், கடந்த வருடம் அக்டோபர் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் லஸ்கர்-இ-தொய்பா, இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினரின் குண்டு பெரிய அளவில் வெடிக் கவில்லை. அதன் பிறகு நடந்தது... மே 1-ம் தேதியன்று சென்னை ரயில்வே ஸ்டேஷனில்தான்! மிக முக்கியமானவரும், ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவன தலைமை ஏஜென்ட்டுமான யாசின் பட்கல் என்பவரை இந்திய போலீஸ் பிடித்த பிறகு, ஏதாவது பழிவாங்கல் நடவடிக்கை இருக்கும் என இந்திய உளவுத் துறையினர் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த சில மாதங்களாக எங்கும் குண்டுவெடிப்பு நடக்காமல் இருந்து வந்தது. அப்படியானால், ஏதோ பெரிய திட்டம் தீட்டுகிறார்களா என்று பதற்றமானார்கள்.

 அப்போதுதான், இலங்கையில் உள்ள ஒருவரின் உளவு நடவடிக்கைகள் பற்றி தெரியவந்தது. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ-யின் தேர்ந்த ஏஜென்ட் இவர். தமிழகத்தில் இருந்து ஜாகீர் உசேன் அடிக்கடி இலங்கை சென்று ஐ.எஸ்.ஐ-யின் முக்கிய ஏஜென்டை சந்தித்து வருவதை இந்திய உளவுத் துறையினர் மோப்பம் பிடித்தனர். சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரக அலுவலகம்... இரண்டையும் குறிவைத்து தாக்க அந்த இலங்கை நபர் நாள் குறித்தார் என்றும் சொல்கிறார்கள்.

''ஜாகீர் உசேனுக்கு இரண்டு அசைன்மென்ட்களைத் தந்தார் அவர். ஒன்று, சென்னை துறைமுகத்தில் ஆளை தயார் செய்ய வேண்டும். அதேபோல், கொச்சின் மற்றும் தென்னகத் துறைமுகங்களில் ஆட்களைத் தயார் செய்ய வேண்டும். ஆள் ரெடியானதும், படகில் வெடிமருந்துகளை அனுப்புவோம். அதை அவர்கள் வாங்கி பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். இரண்டாவது, பாகிஸ்தானில் இருந்து இரண்டு நபர்கள் மாலத்தீவு வழியாக பெங்களூரு வருவார்கள். அவர்கள் தங்குவதற்கு இடம் தயார் செய்து, இலங்கைக்குச் செல்ல பாஸ்போர்ட் ரெடி பண்ண வேண்டும். இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். இதற்கான பூர்வாங்க வேலைகளில் பிஸியாக இருந்தார் ஜாகீர் உசேன். அதே நேரத்தில், அமெரிக்க தூதரக அலுவலகத்தின் ஒவ்வொரு பார்ட்டையும் படம் எடுத்து அனுப்பியிருக்கிறார்.

பெங்களூருக்கும் ஜாகீர் அடிக்கடி சென்று வந்திருக்கிறார். இவர் சேகரித்துக்கொடுத்த தகவல்களை வைத்து தூதரகங்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர். அதற்குத்தான் சில மாதங்கள் ஆகியிருக்கின்றன. இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டு உளவு நிறுவனமும், அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும் பாகிஸ்தானின் தாக்குதல் திட்டத்தை எப்படியோ கண்டுபிடித்துவிட்டனர். தங்கள் நாட்டு தூதரகங்களைத் தாக்க ஜாகீர் உசேன்தான் உதவுகிறார் என்பது தெரிந்ததும், திடுக்கிட்டனர். அவர்களே நேரடியாக ஆக்ஷனில் இறங்கப்போகும் விஷயங்கள் தெரிந்ததும், மத்திய உளவுத் துறையினர் ஜாகீர் உசேனை கைது செய்துவிட்டனர்'' என்றார்கள் மத்திய உளவுத்துறை வட்டாரத்தில்.

'சென்னை குண்டுவெடிப்பு ஏன்?’ என்ற கேள்வியை அதே அதிகாரிகளிடம் கேட்டோம். ''இலங்கையில இருந்து போடும் அடுத்தடுத்தத் திட்டங்கள் தவிடுபொடி ஆக்கப்படுவதை அறிந்து குழம்பிவிட்டனர் ஐ.எஸ்.ஐ. ஆட்கள். வடநாட்டில் நிகழ்த்துவதுபோல தென்னகத்தில் தங்களது எண்ணங்களை ஈடேற்ற முடியாமல் போகிறதே என்று டென்ஷன் ஆனார்கள். அதன் வெளிப்பாடுதான்... சென்னை ரயில் குண்டுவெடிப்பு. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குண்டுவெடிப்பை நிகழ்த்தினால், பெரும் சத்தத்துடன் வெடிக்கும். உதாரணம், பெங்களூரில் நடந்த சம்பவம். ஆனால், இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தினர் குண்டு வைத்தால், சத்தம் அதிகம் கேட்காது. ஆனால், அதன் அதிர்வுகள், பின்விளைவுகள் கொடூரமானதாக இருக்கும். இதற்கு உதாரணம்தான், சென்னை சம்பவம்.

பால்ரஸ், ஆணிகள் நிரப்பப்பட்ட வெடியைப் பயன்படுத்தியிருக்கின்றனர். இதுதான் அவர்களின் வழக்கமான ஸ்டைல். வெடிக்கும்போது அவை ஒவ்வொன்றும் 'மிசைல்' போல எதிர்ப்படுகிற மனிதர்களைத் தாக்கிக் கொல்லும். பாவம்... இளம்பெண் ஸ்வாதியின் உடலில் வேறு எந்த பெரிய காயமும் இல்லை. ஒரே ஒரு ஆணி அவரது இதயத்தில் ஊடுருவி முதுகு பக்கம் வெளியேறிவிட்டது. அதனால்தான் உடனே உயிரை விட்டுவிட்டார்'' என்றார்கள்.

'குண்டு வைத்த குற்றவாளியை நெருங்கியதா தமிழக போலீஸ்?’ என்று கேட்டால், உருப்படியான க்ளூ இல்லை என்றுதான் சொல்கின்றனர். தீவிரவாதிகளைப் பற்றி விசாரிக்கும் உளவுத் துறையின் ஐ.ஜி-யான கண்ணப்பனின் வாய்க்குப் பூட்டுப் போட்டுவிட்டனர். மீடியாவைச் சேர்ந்தவர்கள் யாருடனும் அவர் பேசுவது இல்லை. தவிர்க்கிறார். இந்த விவகாரத்தை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. டீமுக்கு நிறைய தகவல்களை உளவுத் துறையினர் வழங்கிக்கொண்டிருக்கின்றனர். பெங்களூரில்தான் குண்டு வைக்கப்பட்டதாக உறுதியாக நம்புகிறார்கள் சென்னை போலீஸார். ஸ்வாதி இருந்த கேபினில் ஏழு பேர் இரவு நேரத்தில் வழிநெடுகிலும் படுத்து உறங்கினார்களாம். இவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவர்களைப் பிடிப்பதில் இப்போது தீவிரமாகியுள்ளனர்.

-  கனிஷ்கா  (உங்க ஒரிஜினல் பெயரில் எப்பவும் எழுத மாட்டீங்களா..?ஜோ.ஸ்டாலின்

*****

ன்னும் இவர்களின் திரைக்கதை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.பொதுவாக இது போன்ற செய்திகளில் அனைத்து புலனாய்வு இதழ்கள் என்று தஙக்ளைத் தாங்களே சொல்லிக் கொள்ளும் அனைவரும் எப்பொழுதும் அதிகார மட்டங்களின் குரல்களையே எதிரொலிப்பர். இதில் எவரையும் தனித்துப் பார்க்கவே முடியாது.

அது இந்துத்துவத்திற்கு காவடி தூக்கும் ஆரிய விகடன் கும்பலானாலும் சரி..!
திராவிடம் என்று சொல்லிப் பிழைப்பு நடத்தும் நக்கீரன் கும்பலானாலும் சரி..!

உதடுகள் தான் வேறு : குரல்கள் ஒன்று தான்.


No comments: