Showing posts with label இரா.முருகேசன். Show all posts
Showing posts with label இரா.முருகேசன். Show all posts

Friday, 23 November 2012

பொய்யே பிழைப்பாய் கொண்ட குமுதம் ரிப்போர்ட்டர்...


லண்டனில் நடைபெற்ற பிரிட்டானிய தமிழர் மாநாடு தொடர்பாய் குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழில் 2 பக்க  செய்தியை 11-11-2012 தேதியிட்ட இதழில்,அதன் நிருபர் இரா.முருகேசன் பதிவு செய்திருந்தார்.மாநாடு குறித்து கோபி சிவந்தன் கூறிய கருத்து என்று ஒரு கருத்தினையும் அதில் பதிவு செய்திருந்தார். அது புகைப்படத்தில் வட்டம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.



ஆனால் இதழ் வெளிவந்து ஒரு சில நாட்களில்,
கருத்துக் கூறியதாகச் சொல்லப்பட்ட‌ கோபி சிவந்தன் தான் அப்படி ஒரு செய்தியைக் கூறவில்லை என்றும் தம்மை ரிப்போர்ட்டர் இதழில் இருந்து யாரும் தொடர்பு கொள்ள‌வில்லை என்றும் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

அது இதுதான்

லண்டன் மாநகரில் இம்மாதம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த உலகத்தமிழர்; மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் முழுச்செலவுகளையும் பிரித்தானிய தமிழர் பேரவையே ஏற்றுக்கொண்டதாகவும் அந்நிதி அவர்களுக்கு இந்திய உளவு அமைப்பான 'ரோ' மூலமே கிடைத்திருக்கவேண்டும் எனவும் இலங்கைத் தமிழன் கோபி சிவந்தன் குறிப்பிட்டதாக உண்மைக்கு முற்றிலும்
புறம்பான செய்தி ஒன்றை குமுதம் பிரசுரித்துள்ளமை அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிப்பதாக அமைந்துள்ளது.

குமுதம் இதழின் செய்தித் தொடர்பாளர் எவருக்கும் நான் பேட்டி எதுவும் அளிக்காத நிலையில் என்னுடன் எதுவித தொடர்பும் கொள்ளாமல் இப்பிரசுரத்தில்; குறிப்பிடப்பட்ட விடயங்களையும் கோபி சிவந்தனான என்னையும் தொடர்புபடுத்தி;; இச்செய்தியை வெளியிட்டதற்காக குமுதம் வார இதழை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இது போன்ற பொய்யான செய்திகளைப் பரப்புவதன் மூலம் தமிழ் உணர்வாளர்களின் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் ஊடகங்களை இனம் கண்டு அவர்களைப் புறந்தள்ளவேண்டும் என்று தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

ஊடக சுதந்திரம் என்பது மக்களிடம் எதுவித தடைகளுமில்லாமல் உலகில் நடப்பவற்றை நடந்தவாறே எடுத்துச் செல்வதற்கு உதவுவது. உண்மைக்கு முற்றிலும் மாறான விடயங்களை எழுதுவதன் மூலம் மக்களிடையே குழப்பங்களை உருவாக்குவதற்குரிய சுதந்திரம் எந்த ஊடகத்திற்கும் கிடையாது. மாறாக அது தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டிய ஒரு குற்றமாகவே அமைகின்றது.
- கோபி சிவந்தன் 


முகநூலில் வெளிவந்த மறுப்பு


நம்முன் ஏற்பட்ட கேள்விகள் இது தான்.

 கோபி சிவந்தன்  கருத்தினையே சொல்லாத பட்சத்தில் அப்படி ஒரு கூற்று வெளியிட வேண்டிய அவசியம் ரிப்போர்ட்டருக்கு என்ன அவசியம்..?

அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று திரைமறைவில் பேசுவதற்குத் 'தரமுடைய‌' கிசுகிசுவை ஒரு குறித்த நபரின் பெயரில் பகிரங்கமாய் ஏன் ரிப்போர்ட்டர் வெளியிட்டது.

சரி இது தான் போகட்டும்.இதழ் வெளிவந்த பின்னர்,கோபி சிவந்தன் பகிரங்கமாய் மறுப்பு வெளியிட்டும் ரிப்போர்ட்டர் தனது தரப்பில் எதும் விளக்கம் அளிக்கவில்லையே.அது ஏன்..? 

அவர் சொன்ன கருத்தைத் தான் வெளியிட்டிருக்கிறோம்,ஆதாரம் உள்ளது என்றோ,அவர் பொய் சொல்கிறார் என்றோ அல்லது தவறான முறையில் வெளியிட்டு விட்டோம் என்று மறுப்போ விளக்கமோ மன்னிப்போ தெரிவிக்கவில்லை.

வெளிநாட்டில் வாழ்கிறவர்களின் புகைப்படம் ஒன்று கிடைத்தால் போதும், அதை வைத்துக்கொண்டு என்னவேண்டுமானாலும் கதை கட்டிவிடலாம் என்று நினைக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் உள்ளுரிலுள்ள  அரசியல் கட்சியின் தலைவர்கள் குறித்து இப்படி எழுதிவிட்டு மன்னிப்பு கேட்காமல் இருந்து விடமுடியுமா? 

காசு கொடுத்து வாங்கியவனை மடையன் என்று நினைப்பதைத் தாண்டி,என் கையில் ஊடகம் இருக்கிறது நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பதைத் தாண்டி,பக்கங்களை நிரப்ப எதையும் செய்வேன் என்னும் பொறுப்பற்ற தனம் இதில் வெளிப்படுகிறது.

இதுதான் எங்கள் யோக்கியதை என்று வெட்ட வெளிச்சமாய் அம்பலப்பட்டு நிற்கும் குமுதத்திடம் கேட்பதற்கு எந்த நாகரீகமான கேள்வி இருக்கிறது என்று  இதை வாசிக்கிற வாசகர்களே முடிவு செய்துகொள்ளட்டும்.